Tamilnadu

கைது செய்வதுதான் ஒரு ஜனநாயக அரசின் பணியா? : த.வெ.க அரசுக்கு DMK IT Wing சரமாரி கேள்வி!

வார்த்தைகளில் மட்டும் விவசாயத்தின் மீது அக்கறை காட்டிவிட்டு, செயலில் அவர்களை வீதிக்குத் தள்ளுவது நியாயமா? என த.வெ.க அரசுக்கு தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணி கேள்வி எழுப்பியுள்ளது.

இது குறித்து தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணி வெளியிட்டுள்ள பதிவு வருமாறு:-

விவசாயியாகப் பிறக்க வேண்டும் என்று வார்த்தைகளை இனிக்க இனிக்கப் பேசிவிட்டு, நடைமுறையில் விவசாயிகளின் வாழ்வாதாரத்தைச் சீரழிக்கும் தவெக அரசு. நாட்டின் முதுகெலும்பாகத் திகழும் விவசாயிகளையும், அவர்களின் வியர்வைச் சிந்திய உழைப்பையும் மதிக்கும் லட்சணம் இதுதானா?

திருநெல்வேலி மாவட்டம், பாபநாசம் அணையில் இருந்து பாசனத்திற்குத் தண்ணீர் திறக்க வேண்டும் என வலியுறுத்தி, தாமிரபரணி பாசன விவசாயிகள் பலமுறை கோரிக்கைகள் வைத்தும் தவெக அரசு செவிசாய்க்கவில்லை. இதன் காரணமாக, சுமார் 5,000 ஏக்கரில் பயிரிடப்பட்ட வாழைப் பயிர்கள் நீரின்றிக் கருகும் நிலைக்குத் தள்ளப்பட்டு, விவசாயிகள் வேதனையின் உச்சத்திற்குச் சென்றுள்ளனர்.

தங்களின் பயிர்களைக் காப்பாற்றவும், வாழ்வாதாரத்தை மீட்கவும் நியாயமான கோரிக்கைகளுடன் தூத்துக்குடி - திருநெல்வேலி நான்கு வழிச்சாலையில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை, அதிகாரத் திமிருடன் குண்டுக்கட்டாகத் தூக்கி தவெக அரசு கைது செய்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

கருகும் பயிர்களைக் கண்டு கண்ணீர் வடிக்கும் விவசாயிகளுக்குத் தண்ணீர் திறக்க மறுப்பது ஏன்? அமைதியான முறையில் போராடிய விவசாயிகளை அடக்குமுறையைக் கையாண்டு கைது செய்வதுதான் ஒரு ஜனநாயக அரசின் பணியா?

வார்த்தைகளில் மட்டும் விவசாயத்தின் மீது அக்கறை காட்டிவிட்டு, செயலில் அவர்களை வீதிக்குத் தள்ளுவது நியாயமா?

அரசு உடனடியாகத் தன் அதிகாரத் தோரணையை விடுத்து, பாபநாசம் அணையில் இருந்து பாசனத்திற்குத் தேவையான தண்ணீரைத் தாமதமின்றித் திறந்து விட வேண்டும். மேலும், நீரின்றிக் கருகிய வாழைப் பயிர்களுக்கு உரிய நிவாரணத் தொகையை விவசாயிகளுக்கு உடனடியாக வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: “விவசாயிகளை அராஜகமாகக் கைது செய்துள்ள த.வெ.க அரசு” : கனிமொழி எம்.பி ஆவேசம்!