Tamilnadu

நீட் தேர்வின் ஆபத்தை முதன்முதலில் எச்சரித்தது தி.மு.க.தான் : கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்!

நீட் தேர்வு முறைகேடு விவகாரத்தில் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியும், கல்வி முறையில் சீர்திருத்தங்கள் கோரியும் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்தப் போராட்டத்தைக் காக்ரோச் ஜனதா கட்சி நிறுவனர் அபிஜித் தீப்கே முன்னெடுத்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் காக்ரோச் ஜனதா கட்சியைச் சேர்ந்தவர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் நாடாளுமன்றத்தை நோக்கிப் பேரணியாகச் சென்றனர்.அப்போது அவர்களை ஒன்றிய பா.ஜ.க. அரசின் காவல்துறை தடுத்து நிறுத்தியதால் இரு தரப்பினருக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தடைகளையும் மீறி இளைஞர்கள் முன்னோக்கிச் சென்றதால், காவல்துறையினர் அவர்கள் மீது தடியடி நடத்திக் கலைக்க முயன்றனர்.

ஆயினும், இளைஞர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால், அவர்கள் மீது கண்ணீர் புகைக்குண்டுகளை வீசிக் காவல்துறை அராஜகமாக நடந்துகொண்டது.இருந்தும் காவல்துறையின் தடியடிகளுக்கு அஞ்சாமல் தங்களது போராட்டத்தைத் தொடர்ந்து வருகிறார்கள்.

மேலும், ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையில் போராடும் இளைஞர்கள் உறுதியாக இருக்கிறார்கள்.மேலும், பேச்சுவார்த்தைக்கு அழைத்துப்பேசிய ஒன்றிய அமைச்சர் ஜே.பி. நட்டாவிடமும் காக்ரோச் ஜனதா கட்சி அமைப்பினர் தங்களது கோரிக்கைகளைத் தெளிவாக வலியுறுத்தியுள்ளனர்.

அதோடு, டெல்லியில் நடைபெறும் மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாகத் தமிழ்நாடு உள்ளிட்ட மற்ற மாநிலங்களிலும் மாணவர்கள் தங்களின் போராட்டங்களைத் தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், "புதுடெல்லியில் நடக்கும் மாணவர்கள் போராட்டம் இப்போது நாடு முழுவதும் பெரிய கவனத்தைப் பெற்றுள்ளது. நீட் தேர்வு பெரிய முறைகேடுகளுக்கு வழிவகுக்கும் என்று முதன் முதலில் எச்சரித்தது தி.மு.கதான். அதனால்தான், நீட் தேர்வை தி.மு.க ஆரம்பத்திலிருந்தே எதிர்த்து வருகிறது.

சமூக நீதியைக் காப்பதில் இந்தியாவிற்கே வழிகாட்டியாக உள்ள தமிழ்நாட்டின் ஒரே கோரிக்கை, நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்பதுதான். நீட் தேர்வை ஒழிப்பது மட்டும்தான் நிரந்தரத் தீர்வு” என தெரிவித்துள்ளார்.

Also Read: தி.மு.க-வின் கோரிக்கையை இன்று கையில் எடுத்துள்ள இளைஞர்கள் : டெல்லியில் மாபெரும் போராட்டம் - முரசொலி!