Tamilnadu

விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாமல் காவல்துறையை ஏவும் த.வெ.க அரசு : கனிமொழி எம்.பி கண்டனம்!

தமிழ்நாட்டில் மிக மோசமான ஆட்சியைத் த.வெ.க அரசு நடத்தி வருகிறது. அரசை நோக்கிக் கேள்வி எழுப்புபவர்களின் குரல்களைக் காவல்துறையைக் கொண்டு முதலமைச்சர் விஜய் நசுக்கப் பார்க்கிறார். மேலும், எதிர்க்கட்சிகளை மிரட்டிப் பார்க்கும் அதிகார அரசியலையும் அவர் கையில் எடுத்துள்ளார்.

முதலில் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவுக்குச் சொந்தமான இடங்களில் சோதனை நடத்தி, அவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது இவ்வரசு. அதைத் தொடர்ந்து, அவதூறு வழக்கு என்ற பெயரில் முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனைக் கைது செய்தது.

தற்போது முதலமைச்சர் விஜயை விமர்சித்துப் பேசினார் எனக் கூறி, தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயனும் கைது செய்யப்பட்டுள்ளார்.

த.வெ.க நிர்வாகி கொடுத்த புகாரின் பேரில், காவல்துறையினர் இன்று அதிகாலை விளாத்திகுளத்தில் உள்ள இல்லத்தில் வைத்து அவரை அதிரடியாகக் கைது செய்துள்ளனர். மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அவரது ஆதரவாளர்களும் தி.மு.க கட்சியினரும் போலீஸ் வாகனங்களை மறித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காவல்துறையினர் அவரைக் கொண்டு செல்ல விடாமல் தடுத்து மறியல் செய்ததால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.தற்போது, தூத்துக்குடி எஸ்.பி அலுவலகத்திற்கு மார்க்கண்டேயனை அழைத்துச் சென்று காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காவல்துறையின் இந்த அராஜக நடவடிக்கைக்குத் தி.மு.க தலைவர்கள் பலரும் தங்களது கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.

கழக துணை பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி ”விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயனை அராஜகமான முறையில் கைது செய்திருக்கும் தவெக அரசின் செயல் வன்மையாகக் கண்டிக்கதக்கது.

விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாமல் தொடர்ந்து திமுகவினர் மீது காவல்துறையை ஏவி அடக்கிடப் பார்க்கும் தவெக அரசுக்கு ஜனநாயக வழியில் தக்க பாடம் புகட்டப்படும். உடனடியாக, மார்கண்டேயன் அவர்களை விடுதலை செய்ய வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

Also Read: லஞ்சம் ஊழலை ஒழிக்கப் போகிறோம் என சொல்லும் விஜய் இதைப் பற்றி விளக்கம் அளிப்பாரா? : முரசொலி கேள்வி!