Tamilnadu

ஒரு மாத தவணை கட்ட தாமதம்.. வீடு புகுந்த வங்கி ஊழியர்கள்.. வீடியோ வெளியிட்டு விவசாயி எடுத்த விபரீத முடிவு!

அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே அமைந்துள்ளது ஏலாக்குறிச்சி என்ற கிராமத்தில் வசித்து வருபவர் கோவிந்தராஜ். விவசாயியான இவர் திருமானூர் கிழக்கு ஒன்றிய எம்.ஜி.ஆர் இளைஞரணி துணைச் செயலாளராகவும் உள்ளார். இவருக்கு கமலா என்ற மனைவியும், 1 மகன் மற்றும் 2 மகளும் உள்ளனர். இதில் மகன் வெளியூரில் தங்கி கல்லூரியும், மகள் விடுதியில் தங்கி 11-ஆம் வகுப்பும் படித்து வாருகின்றனர்.

இந்த சூழலில் விவசாயி கோவிந்தராஜ் IDFC என்ற தனியார் வங்கியில் ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் கறவை மாட்டுக் கடனை கடந்த ஜனவரி மாதம் பெற்றுள்ளார். இதற்காக ஒவ்வொரு மாதமும் தவணையாக ரூ.11,958 செலுத்தி வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த மாதம் வங்கித் தவணைத் தொகையை தங்களது குடும்ப சூழல் காரணமாக செலுத்த தாமதமானதாக கூறப்படுகிறது. இதனையடுத்து தனியார் வங்கி வசூல் ஏஜெண்டுகள் சிலர், விவசாயி கோவிந்தராஜை அவரது வீட்டிற்குள் நுழைய விடாமல் தடுத்து, தவணைப் பணத்தைக் கேட்டு கடுமையான நெருக்கடி அளித்துள்ளதாகவும் தெரிகிறது.

மேலும் கடைவீதிக்கு கோவிந்தராஜ் சென்றபோது அங்கும், பொதுவெளியில் கடனை திரும்ப செலுத்த சொல்லி வற்புறுத்தியதாகவும் தெரிகிறது. இதில் கோவிந்தராஜ் மற்றும் அவரது மனைவி கமலாவுக்கு இடையே மன வருத்தமும் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, தவணைத் தொகையைச் செலுத்த தேவையான பணத்தை தனது பிறந்த ஊரிலுள்ள தந்தை வீட்டிற்குச் சென்று புரட்டுவதற்காக கமலா நேற்றிரவு சென்றுள்ளார்.

இந்த நேரத்தில் கடும் மன உளைச்சலுக்கு உள்ளான விவசாயி கோவிந்தராஜ், வங்கி ஊழியர்களால் தனக்கு ஏற்பட்ட அச்சுறுத்தல்களை வீடியோவாக பேசிப் பதிவு செய்து தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். மேலும் இந்த விஷயத்தில் அரசு உரிய நடவடிக்கை வேண்டும் என தெரிவித்திருந்த, கோவிந்தராஜ் தனது வீட்டிற்கு அருகே இருந்த வேப்பமரம் ஒன்றில் தூக்கிட்டு தற்கொலையும் செய்து கொண்டுள்ளார்.

இதையடுத்து அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கவே, சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள், கோவிந்தராஜின் உடலை கைப்பற்றி, அரியலூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வங்கி ஊழியர்களின் அச்சுறுத்தலால் மன உளைச்சலுக்கு ஆளான விவசாயி ஒருவர் வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளது அரியலூர் பகுதியில் ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: “சீரழியும் சிறைத்துறை... கண்டுகொள்ளாத நிர்மல்குமார்!” : தி.மு.க இளைஞர் அணி கண்டனம்!