Tamilnadu

மின்துறையை நடத்துவது எப்படி?: த.வெ.க அமைச்சருக்கு பேரவையில் பாடம் எடுத்த செந்தில் பாலாஜி, சிவசங்கர்!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதம் இன்று நடைபெற்றது. அப்போது தமிழ்நாட்டில் ஏற்பட்டு வரும் மின்வெட்டுப் பிரச்சினைகள் குறித்து தி.மு.க உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர்.

இதில் பேசிய முன்னாள் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, ”கடந்த ஐந்து ஆண்டுகளில் சீரான மின் விநியோகத்திற்காக 393 துணை மின் நிலையங்கள் அமைக்கப்பட்டு, அதற்கான வேலைப்பாடுகள் நடைபெற்று வந்தன.

ஒரு அரசு பொறுப்பேற்ற பிறகு, முதன்முறையாக அரசின் துறை அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டம் நடத்த வேண்டும். இவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, எனக்குத் தெரிந்து ஒரு முறை கூட ஆய்வுக் கூட்டம் நடத்தவில்லை.கடந்த ஆட்சியில் ஐந்து ஆண்டுகளில் 90 ஆயிரம் மின் மாற்றிகள் (டிரான்ஸ்பார்மர்கள்) மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு ஆண்டும் மின் தேவை அதிகரிக்கும் போது, அதற்கான ஏற்பாடுகளை நிர்வாக ரீதியாகச் செயல்படுத்துவது அரசின் கடமையாகும். இதே ஊழியர்களை வைத்துத்தான் கடந்த ஐந்து ஆண்டுகளும் நாங்கள் பணியாற்றினோம்.அப்போது எந்த மின் தடையும் ஏற்படவில்லை.

ஆண்டுதோறும் மின் தேவை அதிகமாகும் போது, அரசு அதிகாரிகளுடன் கலந்து பேசி அதற்கு அரசுதான் உரிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்” எனக் கூறினார்.

இதையடுத்துப் பேசிய சிவசங்கர், ”த.வெ.க அமைச்சர்கள் ஊடகங்களைக் கையாளுவதைப் போலச் சட்டமன்றத்திலும் செய்ய நினைக்கிறார்கள்.போக்குவரத்துத் துறை, மின் துறை ஆகியவை சேவைத் துறைகளாகும். இதில் கடன் இருந்தாலும் பொதுமக்களுக்கு மின்

சாரம் சென்று சேர வேண்டும்; பேருந்துகள் இயங்க வேண்டும். பகல் நேரத்தில் வெட்டவெளியில் பியூஸ் கேரியர் திருடப்பட்டதாகக் கூறுகிறார்கள், ஆனால் இரவு நேரத்தில்தான் மின்வெட்டு ஏற்படுகிறது. வெளியில் பேசுவது போல் சட்டப்பேரவையில் பேசக் கூடாது” எனத் தெரிவித்தார்.

Also Read: அம்மோனியா வாயு கசிவால் உயிரிழந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும் : பேரவையில் தி.மு.க வலியுறுத்தல்!