Tamilnadu

“தமிழ்நாட்டை பீகார், உத்தரப்பிரதேசமாக மாற்றிய த.வெ.க அரசு” : தி.மு.க அயலக அணி விமர்சனம்!

தமிழ்நாட்டில் விஜய் தலைமையிலான த.வெ.க ஆட்சி அமைந்ததில் இருந்து பெண்கள் மீதான வன்கொடுமைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் தமிழ்நாட்டை பீகார், உத்தரபிரதேசமாக த.வெ.க அரசு மாற்றியுள்ளது என தி.மு.க அயலக அணி விமர்சித்துள்ளது.

இது குறித்து தி.மு.க அயலக அணி வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், ”தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து, பாலியல் வன்கொடுமைகள் அன்றாடச் செய்திகளாக மாறிவருகிறது. சூலூரில் ஒரு பிஞ்சுக் குழந்தைக்கு நடந்த கொடூரத்தின் ஈரம் காய்வதற்குள், கும்மிடிப்பூண்டியில் மூன்று வயது குழந்தை மீது பாலியல் வன்கொடுமை அரங்கேற்றப்பட்டுள்ளது. ஒரே நாளில் ஐந்து குழந்தைகளுக்கு எதிரான போக்ஸோ வழக்குகள் பதிவாகியுள்ளன. இதுவா முதலமைச்சர் விஜய்யிடம் மக்கள் எதிர்பார்த்த "மாற்று அரசியல்?"

குற்றவாளிகளைக் கைது செய்து கடுமையான தண்டனை வழங்க வேண்டிய ஆளுங்கட்சி, கொலையுண்ட குழந்தையின் பெற்றோரைத் தனியாக அழைத்து மிரட்டுகிறது என்றால், இது யாருக்கான ஆட்சி?

த.வெ.க எம்.எல்.ஏ விஜயகுமார் பெற்றோரை மருத்துவமனையில் தனியாக அடைத்து வைத்து, பணத்தைக் கொடுத்து இந்த வழக்கை மூடி மறைக்க முயன்றது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. காவல்துறை இதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததும் அதிர்ச்சியளிக்கிறது.

பாஜக ஆளும் மாநிலங்களில் நடப்பது போன்ற அதே அராஜகத்தையும், கொடூரத்தையும் இன்று தமிழ்நாட்டிலும் பார்க்க முடிகிறது. முதலமைச்சர் விஜய், சினிமா வசனங்களை விடுத்து, உடனடியாகக் குழந்தைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும். குற்றவாளிகள் மற்றும் அவர்களுக்குத் துணைபோனவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இல்லையெனில், தமிழ்நாட்டு மக்கள் இந்த Sofa Model அரசுக்குத் தகுந்த பாடம் புகட்டுவார்கள்" என தெரிவித்துள்ளது.

Also Read: “ஈவு இரக்கமற்ற காட்டாட்சி...!" - த.வெ.க அரசை கடுமையாகச் சாடிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்!