Tamilnadu

“தமிழோடு விளையாடியவர்கள் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை” : தமிழ்த்தாய் வாழ்த்து அவமரியாதை - திமுக கண்டனம்

முதலமைச்சராக விஜய் பதவியேற்றபோது தமிழ்த்தாய் வாழ்த்திற்கு மூன்றாம் இடம் வழங்கப்பட்டது. இதற்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனங்களைப் பதிவு செய்தனர்.

இதையடுத்து, இது ஆளுநரின் உத்தரவால் அரங்கேறியது என்றும், இனி இப்படி நடக்காது என்றும் த.வெ.க அரசு விளக்கம் அளித்தது. ஆனால், இன்று நடைபெற்ற அமைச்சர்கள் பதவியேற்பு விழாவிலும் மீண்டும் வந்தே மாதரம் பாடலுக்கு முதலிடமும், தமிழ்த்தாய் வாழ்த்திற்கு மூன்றாம் இடமும் வழங்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தமிழ் உணர்வாளர்கள் மற்றும் அரசியல் வட்டாரத்தில் மீண்டும் கடுமையான அதிர்வலைகளையும் கண்டனங்களையும் எழுப்பியுள்ளது.

இந்நிலையில் தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ”ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற அமைச்சரவை பதவியேற்பு விழாவில், தமிழ்த்தாய் வாழ்த்து பின்னுக்கு தள்ளப்பட்டதை போலவே தமிழ்நாடு எல்லா வகையிலும் இனிமேல் பின்னுக்கு தள்ளப்படும் என்பதற்கு த.வெ.க. அமைச்சர்கள் பதவியேற்பு விழாவே சான்று. தமிழ்த்தாய் வாழ்த்துக்கு தொடர் அவமதிப்பும் ஏற்பட்டுள்ளது.

அத்துடன், தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாமிடத்துக்கு தள்ளப்பட்டதை தி.மு.க. சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதுடன், தமிழோடு விளையாடியவர்கள் யாரும் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை" என கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அதேபோல் கனிமொழி எம்.பி,"இரண்டாவது முறையாக தவெக அரசின் அமைச்சரவை பதவியேற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை அவமதிக்கும் வகையில் மூன்றாவதாகப் பாடப்பட்டிருக்கும் செயல் கடும் கண்டனத்திற்குரியது.

சென்ற முறை இதேபோல், தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முன்னுரிமை அளிக்காமல் அவமதிக்கப்பட்ட போது, 'இனி அவ்வாறு நடக்காது' என்று கூறிய தவெக அரசு, தற்போது கண்டும் காணாமல் அமைதி காப்பது எதனால்? கேள்வி எழுப்பியுள்ளார்.

Also Read: ஓடி ஒளியாதீர்கள் CM Sir : மீண்டும் தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பு - கனிமொழி என்.வி.என்.சோமு கண்டனம்!