Tamilnadu

“கலைஞரை பற்றிப் பேச பழனிசாமிக்கு எந்த யோக்கியதையும் கிடையாது” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆவேசம்!

கழகத் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (03-04-2026) மாலை, திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டத்தில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்துப் பேசிய உரையின் விவரம்:

எப்படிப்பட்ட நெல்லைச் சீமைக்கு நான் இன்றைக்கு வந்திருக்கிறேன் என்றால், இந்திய விடுதலைப் போராட்டத்தில் தனி முத்திரையையும், தமிழ்நாட்டின் வரலாற்றில் மாபெரும் வீரத்தையும், தமிழ் காக்கும் போராட்டத்தில் தலைவர் கலைஞர் அஞ்சாமல் தனிமைச் சிறையில் இருந்த தியாகத்தையும் பெற்றிருக்கும் பாளையங்கோட்டை இருக்கும் நெல்லைச் சீமைக்கு நான் வந்திருக்கிறேன்.

அடிமை அ.தி.மு.க-வின் முதுகில் ஏறி, மதவாத பா.ஜ.க. நிகழ்த்தும் அரசியல் பண்பாட்டுப் படையெடுப்பிலிருந்து தமிழ்நாட்டைக் காக்க உங்கள் ஆதரவைக் கேட்டு நான் வந்திருக்கிறேன்.

தமிழ்நாட்டைக் காக்க நான் ரெடி? நீங்கள் ரெடியா? திராவிட மாடல் 2.0 ஆட்சிக்கு நான் ரெடி? நீங்கள் ரெடியா?

அதற்கு, இந்த மேடையில் இருக்கும் எல்லா வேட்பாளர்களும் வெற்றி பெற வேண்டும்! வெற்றி பெற வைப்பீர்களா?

முதலில், இராதாபுரம் தொகுதி. நமது வெல்லும் வேட்பாளர் அப்பாவு அவர்கள். மிக உயர்ந்த மனிதர். பார்ப்பதற்கு மட்டும் உயரமல்ல, தமிழ்நாட்டு சட்டமன்றத்தை நடத்தியும் உயர்ந்தவர். அவர் ஆசிரியராக இருந்த காரணத்தால், மாணவர்களை எப்படி வழிநடத்தினாரோ, அப்படி நம்முடைய திராவிட மாடல் அரசில், சட்டமன்றத்தையும் திறமையாக வழிநடத்தியவர். நான்கு முறை உங்களின் எம்.எல்.ஏ.வாக இருந்து, ராதாபுரம் தொகுதி மக்கள் அவரைப் பாராட்டிப் போற்றி, இன்றைக்கு அவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருக்கிறார். அவருக்கு, ராதாபுரம் தொகுதியில் இருக்கும் உதயசூரியன் சின்னத்தில் உங்களின் பொன்னான வாக்குகளை அளிக்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.

அடுத்து, பாளையங்கோட்டை சட்டமன்றத் தொகுதி, வெற்றி வேட்பாளர் மாவட்டச் செயலாளர் அப்துல் வகாப் அவர்கள். பாளையங்கோட்டை எப்போதுமே தி.மு.க. கோட்டை. கடந்த முறை போன்றே, இந்த முறையும் உங்களுக்கு பணியாற்றி ஆதரவு கோரி நிற்கிறார். அப்துல் வகாப் அவர்களுக்கு, உதயசூரியன் சின்னத்தில் உங்களின் பொன்னான வாக்குகளை மீண்டும் வழங்க வேண்டும்.

அடுத்து, திருநெல்வேலி சட்டமன்றத் தொகுதி. நமது வெற்றி வேட்பாளர் மாநகரச் செயலாளர் தம்பி சுப்பிரமணியன் அவர்கள். அமைதியாக தன்னுடைய பணியைச் சிறப்பாகச் செய்யக்கூடிய ஓர் இளைஞர். திருநெல்வேலி தொகுதி மக்கள் சுப்பிரமணியன் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் உங்களின் பொன்னான வாக்குகளை வழங்கி அவரை வெற்றி பெற வைக்க வேண்டும்.

அடுத்து, நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வெற்றி வேட்பாளர் பெருமதிப்பிற்குரிய அருமைச் சகோதரர் திரு. ராகுல் காந்தி மீண்டும் நம்மிடத்தில் ஒப்படைத்திருக்கும் வெற்றி வேட்பாளர் ரூபி மனோகரன் அவர்கள் நிறுத்தப்பட்டிருக்கிறார். ஏற்கெனவே நாங்குநேரி மக்களுக்கு நன்கு அறிமுகமாகி, இரண்டு முறை உங்களுக்காகப் பணியாற்றியவர். அவருக்குக் கை சின்னத்தில் சிறப்பான வெற்றியைத் தேடித் தர வேண்டும்.

அடுத்து, அம்பாசமுத்திரம் சட்டமன்றத் தொகுதி. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வெற்றி வேட்பாளர் V.P. துரை அவர்கள். அவரும் திரு. ராகுல் காந்தி அவர்களால் அடையாளம் காணப்பட்டு இன்றைக்கு வேட்பாளராக நிறுத்தப்பட்டிருக்கிறார். வழக்கறிஞரான இவர், தனது தந்தை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வேல்துரை போன்று மக்களுக்குப் பணியாற்ற ஆதரவு கேட்டு நிற்கிறார். அவருக்கும் கை சின்னத்தில் நீங்கள் ஆதரவு தந்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும்.

திருநெல்வேலி மாவட்டத்தில் இந்த 5 பேருக்கும் நீங்கள் சிறப்பான ஆதரவைத் தந்து, மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு வெற்றியைத் தேடித் தர வேண்டும். வெற்றி உறுதியா? (உறுதி). வெற்றி உறுதியாகிவிட்டது வேட்பாளர்கள் இப்போது உட்காரலாம்.

பத்தாண்டுகால அ.தி.மு.க. ஆட்சியில், தமிழ்நாட்டின் நிர்வாகம் சீரழிந்து, வளர்ச்சி முடக்கப்பட்டு, நம்முடைய மாநிலமே படுபாதாளத்திற்குத் தள்ளப்பட்டதை நீங்கள் எல்லாம் நன்கு அறிவீர்கள், மறந்திருக்க மாட்டீர்கள்! அதுவும், அ.தி.மு.க.வின் கடைசி நான்காண்டு காலத்தில், நடந்த சிலவற்றை மட்டும் சுருக்கமாக உங்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.

அம்மையார் ஜெயலலிதா வாழ்ந்த கோடநாட்டிலேயே கொலை, கொள்ளைகள் - சாத்தான்குளம் காவல் மரணம் - தமிழர்களின் மனதைப் பதற வைத்த நீட் தற்கொலைகள் - இளம்பெண்கள் கதறி அழுத பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை - அமைதியான ஸ்டெர்லைட் போராட்டத்தில் அப்பாவி பொதுமக்கள் மேலேயே துப்பாக்கிச்சூடு – இவை அனைத்திற்கும் மேல், டெல்லிக்கு காவடி தூக்கி, C.A.A., மூன்று வேளாண் சட்டங்கள் போன்ற மக்கள் விரோத சட்டங்களை, சிறுபான்மை விரோதச் சட்டங்களை ஆதரித்தது; நீட்டிய இடத்தில் எல்லாம் கையெழுத்து போட்டது என தமிழ்நாட்டின் நிதி உரிமை, மாநில உரிமை என்று அனைத்தையும் அடகு வைத்த ஃபிளாஷ்பேக்-ஐ நினைத்தாலே, இன்றைக்கு மக்கள் பீதி அடைவார்கள்.

அப்படிப்பட்ட கேவலமான ஆட்சியில் இருந்து, உங்கள் ஆதரவுடன் தமிழ்நாட்டை மீட்டெடுத்து, புதிய விடியலைத் தந்து, கடந்த 5 ஆண்டுகளில், இந்தியாவில் நம்பர் ஒன் மாநிலமாகத் தமிழ்நாட்டை இன்றைக்கு நாம் உயர்த்தியிருக்கிறோம். ஏன், இந்தியாவிற்கே வழிகாட்டும் ஆட்சியாக நடத்திக் கொண்டிருக்கிறோம். நம்முடைய ஆட்சிக்கு என்ன பெயர் வைத்தோம் சொல்லுங்கள்? திராவிட மாடல். நெஞ்சை நிமிர்த்தி சொல்கிறேன்... இந்தியாவே தெற்கைத் திரும்பிப் பார்க்கும் அளவிற்கு, திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாட்டைத் தலைநிமிர வைத்திருக்கிறோம்!

முதல் நாள் - முதல் கையெழுத்திலேயே மகளிர் எல்லோரும் கட்டணமில்லாமல் விடியல் பயணம் செய்யலாம் என்று உத்தரவிட்ட கைதான், இந்த ஸ்டாலின் கை.

அதைத் தொடர்ந்து, தமிழ்நாட்டின் அடுத்தகட்ட வளர்ச்சி வரலாற்றை எழுத வேண்டும் என்று தீர்மானித்து, தொடர்ச்சியாகப் பல முன்னோடித் திட்டங்களைச் செயல்படுத்தத் தொடங்கினேன். அதையெல்லாம் பட்டியல் போட்டால், இந்தப் பொதுக் கூட்டத்தையே ஒரு சாதனை விளக்கப் பொதுக் கூட்டமாகத்தான் நடத்த வேண்டும்! அந்தளவிற்கு மலையளவு சாதனைகளை நாம் செய்திருக்கிறோம்!

நம்முடைய திராவிட மாடல் ஆட்சியில், இந்தத் திருநெல்வேலி மாவட்டத்திற்குச் செய்திருக்கும் திட்டங்களை மட்டுமே, ஒரு தனி புத்தகமாக போடலாம்! அதனால், மிக மிக முக்கியமான முத்தாய்ப்பான சாதனைகளை மட்டும் தலைப்புச் செய்திகளாக - ஹைலைட்டாக நான் சொல்ல விரும்புகிறேன்.

இந்திய வரலாறு தமிழ் நிலத்திலிருந்துதான் எழுதப்பட வேண்டும் என்ற நம்முடைய முழக்கத்திற்கு அடித்தளமாக நிற்கும், பொருநை அருங்காட்சியகம்!

திருநெல்வேலி பல்நோக்கு மருத்துவமனையில் இதயம், நரம்பு, சிறுநீரகம், கல்லீரல் குறைபாடு உள்ளவர்களுக்கு சிகிச்சை வழங்க, நவீன கட்டமைப்புகளுடன் கூடிய மருத்துவமனைக் கட்டடம்,

பல ஆண்டு கனவுத் திட்டமான, தாமிரபரணி - கருமேனியாறு மற்றும் நம்பியாறு நதிநீர் வெள்ள உபரி நீர்த் திட்டம்,

மானூரில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி,

93 திருக்கோயில்களில் சீரமைப்புப் பணிகள்,

ஆயிரம் ஆண்டு பழமையான திருக்கோயில்கள் திருப்பணிகள் திட்டத்தின்கீழ் 33 திருக்கோயில்களில் சீரமைப்புப் பணிகள்,

அம்பாசமுத்திரத்தில் புறவழிச்சாலை.

இதுபோக நடைபெற்றுக் கொண்டிருக்கும் பணிகளைச் சொல்ல வேண்டும் என்றால்,

6 ஊராட்சி ஒன்றியங்களைச் சார்ந்த 831 குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர்த் திட்டப் பணிகளும்,

களக்காடு நகராட்சி மற்றும் 7 பேரூராட்சிகளுக்கான கூட்டுக் குடிநீர்த் திட்டப் பணிகளும் முடிவுறும் நிலையில் இருக்கிறது.

மணிமுத்தாறு அணைப்பகுதியில், சாகசச் சுற்றுலா வசதிகள், பல்லுயிர்ப் பூங்கா மற்றும் இதர வசதிகளுடன் சுற்றுச்சூழல் சுற்றுலாத் தலமாக மேம்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டிருக்கிறது.

அதேபோன்று, கூட்டப்புளி மற்றும் கூடுதாழை மீனவக் கிராமங்களில் தூண்டில் வளைவு அமைக்கும் பணிகள் நடந்து கொண்டிருக்கிறது!

இராதாபுரம் வட்டம், விஜயாபதியில், புதிய விளையாட்டரங்கம்,

தாழையூத்து முதல் கொங்கந்தான்பாறை விலக்கு வரை மேற்குப் புறவழிச்சாலை அமைக்கும் பணிகள்,

காவல்கிணறு – இராதாபுரம் சாலையில் இரயில்வே மேம்பாலம் அமைப்பதற்கும், குலவணிகர்புரம் பகுதியில் Y வடிவ மேம்பாலம் அமைப்பதற்கும் விரைவில் பணிகள் தொடங்கப்பட இருக்கிறது.

இராதாபுரம் வட்டம், ஆலந்துரையாற்றின் குறுக்கே அமைந்திருக்கும் கஞ்சிப்பாறை அணைக்கட்டை மேம்படுத்தி, அதன் மேல்மட்ட மற்றும் கீழ்மட்டக் கால்வாய்களை அனுமாநதி வரை அகலப்படுத்தும் பணி,

அம்பாசமுத்திரம் வட்டம், விக்கிரமசிங்கபுரம் கிராமத்தில், கோரையாற்றின் குறுக்கே நீர்த்தேக்கம் அமைக்கவும், சேரன்மகாதேவி வட்டம், தெற்கு வீரவநல்லூர் கிராமத்தில் வள்ளிமலை ஓடையின் குறுக்கே நீர்த்தேக்கம் அமைக்கவும், திசையன்விளை வட்டத்தில் இருக்கும் குட்டம் மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளுக்கு வெள்ள நீரைத் திருப்பி விடுவதற்காக நம்பியாற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.

எல்லாவற்றிற்கும் மேல், பெருமையாகச் சொல்ல வேண்டும் என்றால், கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்கள் பெயரில் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில், மாபெரும் நூலகம் அமைய இருக்கிறது. இப்படி சாதனைகளை சொல்லிக் கொண்டே போகலாம்!

இவ்வளவும் செய்திருக்கும் துணிவோடுதான், உங்களிடம் நான் உரிமையுடன் வாக்கு கேட்டு வந்திருக்கிறேன். ஆனாலும், பழனிசாமி அவர்களும் வாக்கு கேட்டு வருகிறார்... எப்படி வருகிறார்? சுயசிந்தனை இல்லாமல் தமிழ்நாட்டை நாசப்படுத்திய அவர், துரோகத்தின் மொத்த உருவமான தன்னை, மக்கள் புறக்கணித்துவிடுவார்கள் என்று முடிவு செய்துவிட்டார். அதனால்தான், பத்து தோல்வி பழனிசாமி, நம்முடைய திட்டங்களையெல்லாம் காப்பி அடித்து, புதிதாக ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டு வந்திருக்கிறார்.

முதலில், மகளிர் உரிமைத்திட்டம்! கடந்த தேர்தலின்போது, இந்தத் திட்டத்தை நாம் அறிவித்தபோது, இதைச் செயல்படுத்தவே முடியாது என்று பழனிசாமி சொன்னார். மக்களிடம் அந்த அறிவிப்பிற்குக் கிடைத்த வரவேற்பை பார்த்து, கடந்த தேர்தலிலேயே, அவரும் மகளிர்க்கான உதவித்தொகையை வழங்குவோம் என்று, நம்மை விட அதிகமான தொகையை சொன்னார். ஆனால், மக்களான நீங்கள் என்ன முடிவெடுத்தீர்கள்? கூசாமல் பொய்களை மட்டுமே பேசும் பழனிசாமியை நம்ப மாட்டோம் - துரோகங்களை மட்டுமே விரும்பி செய்யும் பழனிசாமியை ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்ற, புதிய விடியலுக்காக உதயசூரியனுக்குத்தான் வாக்களிப்போம் என்று சொல்லி வாக்களித்தீர்கள். நாங்களும் சொன்னது போன்றே, உரிமைத்தொகை கொடுக்கிறோம். இப்போது, அ.தி.மு.க. பா.ஜ.க போட்ட சதித்திட்டத்தை முறியடித்து ஐந்தாயிரம் ரூபாயும் வழங்கிவிட்டோம்! அடுத்து திராவிட மாடல் 2.0-வில் ஆயிரத்தை இரண்டாயிரமாக உயர்த்தித் தரப் போகிறோம் என்று அறிவித்துவிட்டோம்! அதேபோன்று, விடியல் பயணத்திலும் பெண்கள் சுதந்திரமாகப் பயணிக்க ஆரம்பித்துவிட்டீர்கள்! ஆனால், இந்தத் திட்டங்களை எல்லாம், கொச்சைப்படுத்திப் பேசினார் பழனிசாமி!

இப்போது நம்முடைய திட்டங்களை முடக்குவோம்; தவிர்ப்போம் என்று சொல்லிக்கொண்டு பிரச்சாரத்திற்குச் சென்றால் மக்கள் விரட்டியடிப்பார்கள் என்று தெரிந்து கொண்டு, மகளிர் உரிமைத் திட்டத்திற்குக் குலவிளக்கு என ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டு வந்திருக்கிறார். இதைப் பார்த்து, மக்கள் என்ன பேசிக்கொள்கிறார்கள் என்றால், “ஸ்டாலின் சொன்னதை மட்டுமல்ல - சொல்லாததையும் செய்வார்! ஆனால், பழனிசாமி சொன்னதையும் செய்யமாட்டார்; சொந்தமாகவும் செய்யமாட்டார்” என்று கமெண்ட் அடிக்க ஆரம்பித்துவிட்டார்கள்! பழனிசாமிக்கு, பதினோராவது தோல்வி ஸ்டிக்கரை ஒட்ட மக்களும் தயாராகிவிட்டீர்கள்!

ஏன் என்றால், களத்தில் இருப்பது யார்? சூப்பர்ஸ்டார்! “சூப்பர்ஸ்டார் யாருனு கேட்டால் தி.மு.க. தேர்தல் அறிக்கைனு சின்ன குழந்தையும் சொல்லும்!”. ஒரு பாட்டே இருக்கிறது. இப்போது I.P.L. நடைபெற்றுக் கொண்டிருக்கிறது, நிறைய சிக்ஸர்களை எல்லாம் பார்த்திருப்பீர்கள். தேர்தல் அறிக்கை மூலமாக நாம் அடித்த சிக்ஸர்களில் சிலவற்றை மட்டும் இப்போது ஹைலைட்டாக சொல்கிறேன்.

முதல் சிக்ஸர் - இல்லத்தரசிகளுக்கு கூப்பன் வழங்கும் திட்டம்... எவ்வளவிற்குக் கூப்பன் தரப் போகிறோம்? எட்டாயிரம் ரூபாய்க்குக் கூப்பன்! இந்தக் கூப்பனை வைத்து, உங்களுக்குத் தேவைப்படும் வீட்டு உபயோகப் பொருளை, புதிதாகவும் வாங்கிக் கொள்ளலாம்; இல்லை என்றால், பழைய பொருளை எக்ஸ்சேஞ்ச் செய்து புது பொருளையும் வாங்கிக் கொள்ளலாம்! உங்களுக்குப் பிடித்த கடையில் உங்களுக்குப் பிடித்த பிராண்ட்டை வாங்கிக் கொள்ளலாம்!

அதுமட்டுமல்ல, இல்லத்தரசிகளுக்கு இனிமேல், உரிமைத்தொகை இரண்டாயிரம் ரூபாயாக கிடைக்கப் போகிறது!

அடுத்தடுத்த சிக்ஸர்களை வரிசையாக சொல்கிறேன்…

காலை உணவுத்திட்டம் - குழந்தைகளின் பசியைப் போக்கும் திட்டம் மட்டுமல்ல, இல்லத்தரசிகளின் பணிச்சுமையைக் குறைக்கும் திட்டம்! முதலில் ஐந்தாம் வகுப்பு வரை இருந்து காலை உணவுத்திட்டத்தை, இனிமேல் எட்டாம் வகுப்பு வரைக்கும் விரிவாக்கம் செய்யப் போகிறோம்!

அதேபோன்று, 20 இலட்சத்திற்கும் அதிகமான உழவர்கள் பயன்பெறும் வகையில், எவ்வித மீட்டரும் பொருத்தப்படாத நவீன மின்சாரப் பம்புசெட்டுகளை வழங்கப் போகிறோம்!

புதுமைப்பெண் திட்டத்திலும், தமிழ்ப்புதல்வன் திட்டத்திலும் இனிமேல் மாதம் ஆயிரம் அல்ல; ஆயிரத்து 500 ரூபாய் வழங்கப் போகிறோம்!

உயர்கல்வி முடித்த 5 இலட்சம் இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறும் வகையில், நான் முதல்வன் திட்டத்தில் ஆயிரத்து 500 ரூபாய் உதவித்தொகையுடன் 6 மாதம் பயிற்சி வழங்கப் போகிறோம்.

நெல் கொள்முதல் விலை குவிண்டால் ஒன்றுக்கு 3 ஆயிரத்து 500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.

கரும்பு கொள்முதல் விலை டன் ஒன்றுக்கு 4 ஆயிரத்து 500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.

பால் கொள்முதல் விலை லிட்டர் ஒன்றுக்கு 5 ரூபாய் உயர்த்தி வழங்கப்படும்.

முதியோர் உதவித்தொகை ஆயிரத்து 200 ரூபாயிலிருந்து 2 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.

மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகை ஆயிரத்து 500 ரூபாயிலிருந்து 2 ஆயிரத்து 500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.

மீன்பிடித் தடைக்கால சிறப்பு நிவாரணத் தொகை 8 ஆயிரம் ரூபாயில் இருந்து 12 ஆயிரம் ரூபாயாகவும், மீன்பிடிக் குறைவுக் காலச் சிறப்பு நிவாரணத் தொகை 6 ஆயிரம் ரூபாயில் இருந்து 9 ஆயிரம் ரூபாயாகவும் உயர்த்தி வழங்கப்படும்.

2030-ஆம் ஆண்டுக்குள் மாவட்ட மற்றும் வட்ட அளவிலான அரசு மருத்துவமனைகளில் டயாலிசிஸ் சிகிச்சைக்கான கருவிகள் இரண்டு மடங்காக்கப்படும்.

தொழிற்சாலைகள் அதிகமுள்ள நகரங்களில், பெண்கள் வேலைக்குச் செல்வதை எளிதாக்கும் பொருட்டு, ஆயிரம் குழந்தைகள் காப்பகங்கள் உருவாக்கப்படும்.

பெண்களின் பாதுகாப்பிற்காக அனைத்து நகரங்களுக்கும் ‘பிங்க் பேட்ரால்’ வாகனங்கள் விரிவுபடுத்தப்படும்.

மகளிர் சுயஉதவிக் குழுப் பெண்கள் ஷேர் ஆட்டோ வாங்க மானியத்துடன் கூடிய வங்கிக் கடன் பெற்றுத் தரப்படும்.

கலைஞர் கனவு இல்லம் உள்ளிட்ட திட்டங்கள் மூலமாக, வீடற்ற ஏழைகளுக்கு அடுத்த 5 ஆண்டுகளில் 10 இலட்சம் வீடுகள் கட்டித் தரப்படும்.

தென் மாவட்டங்கள் கல்வி மற்றும் சுகாதாரக் குறியீடுகளில் உரிய வளர்ச்சியை பெறவும், தொழில்மயமாவதை உறுதிசெய்யவும் இந்தத் தென்மாவட்டங்களுக்காக ஒரு சிறப்பு வளர்ச்சித் திட்டம் உருவாக்கப்படும்.

நாங்கள் சொன்னால், சொன்னதைச் செய்வோம்! நான் கலைஞரின் மகன்! சொன்னதை மறக்கவும் மாட்டேன்; மறுக்கவும் மாட்டேன்!

இத்தனை சாதனைகளைச் செய்துவிட்டு, எதிர்காலத்திற்கான தொலைநோக்குத் திட்டங்களை உருவாக்கிவிட்டு, நான் உங்களிடம் வாக்கு கேட்டு வருகிறேன்.

ஆனால், டபுள் எஞ்சின் - டப்பா எஞ்சின் என்று வரும், அமித்ஷா ஆட்டுவிக்கும் பழனிசாமி அங்கம் வகிக்கும் N.D.A. கூட்டணியின் இலட்சணம் என்ன? மக்களுக்காக அவர்கள் செய்ததெல்லாம் என்ன?

2014-இல் பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்தார். 2016-இல் பணமதிப்பிழப்பு நடவடிக்கை என்று சொல்லி, நாட்டு மக்கள் எல்லோரையும் பேங்க் வாசலிலும், ஏ.டி.எம். வாசலிலும் இரவு பகலாகக் கால்கடுக்க நிற்க வைத்தார்? எத்தனை பேர் இறந்தார்கள்?

அடுத்து, கொரோனா வந்தது. எல்லோரும், வீட்டில் இருக்கும் தட்டைத் தட்டுங்கள் – மணியடிங்கள் என்று ஒரு காமெடி ஷோவே நடத்தினார். கோடிக்கணக்கான மக்களை, நடுத்தெருவில் நடக்க வைத்தார். ஆக்சிஜன் சிலிண்டருக்காக மக்களை அல்லல்பட வைத்தார்.

இப்போது மேற்காசியப் போர் நடக்கிறது. பொறுப்பான மாநில அரசாக, நாங்கள் முதலிலேயே சலுகைத் திட்டங்களை அறிவித்துவிட்டோம். ஆனால், பிரதமர், கொரோனா காலம் மாதிரி ரெடியாக இருங்கள் என்று சொல்லிவிட்டு, மக்களை கேஸ் சிலிண்டருக்காகக் காத்திருக்க வைத்திருக்கிறார்.

இதெல்லாம் ஒட்டுமொத்த இந்தியாவிற்கு என்றால், தமிழ்நாட்டைப் பொறுத்தவரைக்கும் பா.ஜ.க. ஆட்சியில், தமிழ்நாட்டிற்குக் கல்வி நிதி இல்லை. ஜி.எஸ்.டி இழப்பீடு இல்லை. நீட் தேர்வு விலக்கு இல்லை. தமிழ்மொழி வளர்ச்சிக்கு நிதி கிடையாது. இரயில்வே திட்டங்கள் கிடையவே கிடையாது. மெட்ரோ ரயில் திட்டம் இல்லை.

அத்திபூத்த மாதிரி ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு என்று மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை அறிவித்தார்களே... அதன் நிலைமை என்ன? அந்த ஆர்டரை யாராவது ஒருவர் எடுத்துக்கொண்டு, டெல்லியிலிருந்து பொடிநடையாக மதுரைக்கு வந்திருந்தால் கூட, இந்நேரம் எய்ம்ஸைக் கட்டி முடித்திருக்கலாம். ஆனால், தமிழ்நாட்டிற்கு இன்றைக்கு வரைக்கும் எய்ம்ஸ் கட்டடம் வரவில்லை! தமிழ்நாட்டிற்கு ஒன்றுமே இல்லை என்பதுதான் மோடி மாடல்!

இந்த நிலையில், தமிழ்நாட்டில் பா.ஜ.க. என்று சொன்னாலே விரட்டியடிக்கிறார்களே, எப்படி தமிழ்நாட்டில் கால் பதிப்பது என்று நினைத்தார்கள். தமிழர்களுக்கு துரோகம் செய்ய யாராவது கிடைப்பார்களா என்று வலைவீசித் தேடினார்கள். அப்படி கிடைத்தவர்தான் துரோகத்தில் டாக்டரேட் வாங்கிய பழனிசாமி!

அவருக்கு N.D.A.-வில் கொடுக்கப்பட்டிருக்கும் ரோல் என்ன தெரியுமா? சிறுபான்மையினருக்கு எதிரான பா.ஜ.க.வுக்கு வாக்கு கேட்பது! தமிழுக்கு விரோதமான பா.ஜ.க.வுக்கு வக்காலத்து வாங்குவது! இந்தியைத் திணிக்கும் பா.ஜ.க.வுக்குத் துணை போவது! அரசியலமைப்புச் சட்டத்தையே கேலிக்கூத்தாக்கும் பா.ஜ.க.வுக்கு சாமரம் வீசுவது! ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்று ஜனநாயகத்தைச் சிதைக்கும் பா.ஜ.க.வுக்கு, ஜால்ரா போடுவது! இடஒதுக்கீட்டையும் சமூகநீதியையும் அழிக்கும் பா.ஜ.க.வுக்கு சிவப்புக் கம்பளம் விரிப்பது! இறுதியாக, அ.தி.மு.க.-வை, அமித்ஷாவிடம் தாரைவார்ப்பது.

இப்படிப்பட்ட பழனிசாமி, நேற்று ஒரு பொதுக்கூட்டத்தில் என்ன பேசியிருக்கிறார் தெரியுமா? எனக்கு உயிர் கொடுத்து ஆளாக்கிய தலைவர் கலைஞர். கலைஞரை நான் வீட்டுச் சிறையில் வைத்திருந்தேன் என்று நாக்கில் நரம்பில்லாமல் பேசியிருக்கிறார். திரு. எடப்பாடி பழனிசாமி அவர்களே... தோல்வி பயத்தில் எல்லை மீறிப் பேசத் தொடங்கியிருக்கிறீர்கள்.

முதலமைச்சராக என்னுடைய செயல்பாடுகளை விமர்சிக்க எதிர்க்கட்சித் தலைவரான உங்களுக்கு எல்லா உரிமையும் இருக்கிறது. தேர்தலில் அதை மக்கள் எடைபோட்டுப் பார்ப்பார்கள். உங்களுக்குத் தக்க பதிலடியைக் கொடுக்கத்தான் போகிறார்கள். ஆனால், தலைவர் கலைஞருடன் ஒரு மகனாக என்னுடைய உறவைப் பற்றி, ஒரு சொல் பேசக் கூட உங்களுக்கு எந்த உரிமையும் கிடையாது. எந்தத் தகுதியும் கிடையாது!

தலைவர் கலைஞரைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? தலைவர் கலைஞர் ஒரு சிங்கம்! வாழ்ந்த காலம் வரை, கோடிக்கணக்கான தொண்டர்களை என் உயிரினும் மேலான 'உடன்பிறப்புகளே' என்ற ஒற்றை மந்திரத்தில் கட்டிப் போட்டிருந்தவர் நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள். முதுமையால் உடல்நிலை சரியில்லாமல் வீட்டில் ஓய்வெடுத்தார். நினைவாற்றலை இழந்தபோதுகூட, மருத்துவர்கள் உங்களுக்கு யாரைப் பிடிக்கும் என்று கேட்டால், “அண்ணா... அண்ணா...” என்று சொன்ன பேரறிஞர் அண்ணாவின் அன்புத் தம்பி அவர். முடியாத நிலையில்கூட, அறிவாலயம் செல்ல வேண்டும், முரசொலிக்கு செல்ல வேண்டும் என்று துடித்தவர். அவரை யாரும் சிறை வைக்க முடியாது. அவருடைய இதயச்சிறையில்தான் நான் உட்பட உடன்பிறப்புகள் அத்தனை பேரும் குடியிருந்தோம். எடப்பாடி பழனிசாமி அவர்களே... தலைவர் கலைஞர் பெயரைச் சொல்லக்கூட உங்களுக்குத் தகுதியும் கிடையாது; எந்தவித யோக்கியதையும் கிடையாது.

5 முறை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சராக இருந்து, இந்தத் தமிழ்நாட்டை நீண்ட காலம் ஆண்ட ஒரே முதலமைச்சர், தலைவர் கலைஞர். அவருடைய கடைசி ஆசை என்ன? அவருடைய தலைவராகப் பேரறிஞர் அண்ணாவிற்கு அருகே அடக்கம் செய்ய வேண்டும். அப்பாவுக்காக அல்ல, தலைவருக்காக. நானே உங்கள் வீட்டுப் படியேறி வந்து, கையெடுத்துக் கும்பிட்டுக் கேட்டேனே... என்னுடைய தந்தைக்காக அல்ல, தமிழினத்தின் தலைவர் அவர். கடற்கரையில் இடம் கொடுங்கள் என்று அந்தச் சோக சூழ்நிலையில்கூட உங்கள் முன்னால் வந்து நின்றேனே... கொடுத்தீர்களா? இரக்கம் இல்லாமல் மறுத்தவர்தானே நீங்கள்! அப்படிப்பட்ட உங்களுக்கு, எங்கள் தலைவரைப் பற்றி பேச எந்த யோக்கியதையும் கிடையாது.

உங்கள் யோக்கியதை என்ன தெரியுமா? உங்களை நம்பிப் பதவி கொடுத்த சசிகலாவின் காலையே வாரிவிட்டவர் நீங்கள். நம்பிய டி.டி.வி. தினகரனையும், சகோதரர் O.P.S. அவர்களையும் முகுகில் குத்தியவர் நீங்கள். உங்களுக்கு நினைவிருக்கிறதா? அம்மையார் ஜெயலலிதா அவர்கள் உடல் நலக்குறைவால் சட்டமன்ற அவைக்கு வராமல் இருக்க ஒரு தீர்மானம் கொண்டு வந்தார்கள். அதை ஆதரித்த இயக்கம் தி.மு.க. இதுதான் உங்களுக்கும் – எங்களுக்கும் இருக்கும் வித்தியாசம்!

அடித்துச் சொல்கிறேன்... உங்களால் எந்தக் காலத்திலும் ஆட்சியை பிடிக்கவே முடியாது. உறுதியாக சொல்கிறேன்... கலைஞரின் உடன்பிறப்புகள் இருக்கும் வரை உங்களால் ஆட்சியின் பக்கமே வர முடியாது. இது உறுதி.

தமிழ்நாட்டைக் காக்க, திராவிட முன்னேற்றக் கழகம்தான் மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்று மக்கள் முடிவு செய்துவிட்டார்கள்! இந்தியாவே திரும்பிப் பார்க்கும் வளர்ச்சி நீடிக்க வேண்டும் என்றால் திராவிட முன்னேற்றக் கழகம்தான் ஆள வேண்டும்! தமிழ்நாடு தலைநிமிர்ந்தே இருக்க வேண்டும் என்றால், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிதான், வெற்றி பெற வேண்டும்! அந்த வெற்றி, இந்தியாவே திரும்பிப் பார்க்கும் மாபெரும் வெற்றியாக இருக்க வேண்டும்!

நீங்கள் எல்லோரும் ஒரு விஷயத்தை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும்... நாம் போராடுவது தி.மு.க.வின் வெற்றிக்காக மட்டுமல்ல; நம்முடைய கூட்டணியின் வெற்றிக்காக மட்டுமல்ல, தமிழ்நாட்டின் வெற்றிக்காக! மறந்துவிடாதீர்கள்.

எனவே, அரசியல் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு, நம்முடைய தாய்த் தமிழ்நாட்டைக் காக்க, தமிழ்நாட்டு மக்கள் அனைவரும், தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை ஆதரிக்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.

அதற்கு, ராதாபுரம் சட்டமன்றத் தொகுதியில் அப்பாவு அவர்களுக்கும், பாளையங்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் அப்துல் வகாப் அவர்களுக்கும், திருநெல்வேலி சட்டமன்றத் தொகுதியில் சுப்பிரமணியன் அவர்களுக்கும் உதயசூரியன் சின்னத்தை ஆதரிக்க வேண்டும்.

அதேபோன்று, நாங்குநேரி சட்டமன்றத் தொகுதிக்கு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வெற்றி வேட்பாளர் ரூபி மனோகரன் அவர்களுக்கும், அம்பாசமுத்திரம் சட்டமன்றத் தொகுதியில் V.P. துரை அவர்களுக்கும், கை சின்னத்தில் உங்களின் பொன்னான வாக்குகளை அளித்து, வெற்றி பெற வைக்க வேண்டும்.

அமைய இருக்கும் திராவிட மாடல் 2.0 ஆட்சியில், எங்களின் சாதனைகளை நாங்களே முறியடிக்கும் அளவிற்கு சிறப்பான ஆட்சியை, தமிழ்நாட்டைப் புதிய உயரங்களுக்கு கொண்டு செல்லும் ஆட்சியை, நாங்கள் வழங்குவோம்! உங்கள் எல்லோருடைய ஆதரவுடன் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி தமிழ்நாட்டைக் காக்கும்! வெல்வோம் ஒன்றாக! வெல்வோம் ஒன்றாக! வெல்வோம் ஒன்றாக!

Also Read: “ஆணவத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் பழனிசாமி” : தேர்தல் பரப்புரையில் கனிமொழி விமர்சனம்!