Tamilnadu
பொய் அறிக்கை.. சாத்தான்குளமே சாட்சி.. மன்னிப்பு கேட்க வேண்டும்.. - பழனிசாமியை விளாசிய அமைச்சர் ரகுபதி!
கடந்த 2020-ம் ஆண்டு கோவிட் நேரத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சியின்போது தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் ஜெயராஜ் - பென்னிக்ஸ் ஆகிய இருவரும் கடை மூடும் நேரத்தை மீறியதாக கூறி போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து காவல்நிலையத்தில் வைத்து அவர்கள் இருவரையும் போலீசார் கொடூரமாக தாக்கியதில் இரண்டு பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தனர்.
இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரிய அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், இருவரும் மாரடைப்பு, உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் உயிழந்ததாக அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டார். பழனிசாமியின் அறிக்கைக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனங்கள் தெரிவித்ததோடு, சிபிஐ-க்கு மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. அதன்பேரில் சிபிஐ-க்கு வழக்கு மாற்றப்பட்டு, காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் சுமார் 6 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் ஒருவர் உயிரிழந்த நிலையில், மீதமிருக்கும் ஸ்ரீதர் உள்ளிட்ட 9 பேரும் குற்றவாளிகள் என மதுரை கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்த நிலையில், இதற்கு தற்போது அமைச்சர் ரகுபதி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு :-
எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் 13 அப்பாவிகள் துள்ளத் துடிக்கக் கொல்லப்பட்டதற்கு அடுத்து நடந்த பெரிய வன்முறை, சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு. 2020-ஆம் ஆண்டு சாத்தான்குளத்தில் செல்போன் கடை வைத்திருந்த தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் இருவரின் அதிர்ச்சி மரணங்கள் தமிழகத்தைத் தாண்டி உலகளவில் அதிர்ச்சி அலைகளை உண்டாக்கியது.
அவர்கள் கொல்லப்பட்டதற்கு முந்தைய மாதம்தான் அமெரிக்க போலீஸாரால் ஜார்ஜ் ஃபிளாய்ட் கொல்லப்பட்டார். அதற்காக உலகம் முழுவதும் அனைத்துத் தரப்பு மக்களும் கைகோத்துப் போராடினார்கள். அதற்கு இணையான ஒன்றாக மனித உரிமை கொடூரமாக சாத்தான்குளம் சம்பவம் பேசப்பட்டது. இந்தியா முழுக்க சாமானியர்கள் தொடங்கி, பிரபலங்கள் வரை கண்டங்களைத் தெரிவித்தார்கள்.
சாத்தான்குளம் சம்பவத்தை ’இரட்டைப் படுகொலை’ என்று விமர்சித்த அன்றைய எதிர்க் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் காவல்துறையினர் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று தொடர் அழுத்தம் கொடுத்தார். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்குத் தேவையான அனைத்துச் சட்ட உதவிகளையும் திமுக வழங்கும் என்று உறுதியளித்து, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி ஆரம்பக்கட்டத்திலேயே குரல் கொடுத்தார். ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்தினருக்கு திமுக சார்பில் ரூ. 25 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது.
இத்தனைக்கும் ஜெயராஜும் பென்னிக்ஸும் குற்றவாளிகள் அல்ல. ‘கொரோனா ஊரடங்கு நேரத்தில் விதியை மீறிக் கடையைத் திறந்து வைத்திருந்தார்கள்’ என்பதுதான் அவர்கள் மீதான எடப்பாடி பழனிசாமி காவல் துறையின் குற்றச்சாட்டு. இப்போது மூச்சுக்கு முந்நூறு தடவை, ‘’கொரோனா காலத்திலும் சிறப்பான ஆட்சியைக் கொடுத்தோம்’’ என மார்தட்டுகிறாரே எடப்பாடி பழனிசாமி. அந்தக் கொரோனா காலத்தில்தான் ஜெயராஜ், பென்னிக்ஸ் உயிர்கள் அநியாயமாகப் பறிக்கப்பட்டன. கொரோனா காலத்தில் பழனிசாமியின் சிறப்பான ஆட்சிக்கு சாத்தான்குளமே சாட்சி!
கொத்தாகக் காவல்துறையினரால் பிடித்துச் செல்லப்பட்ட இருவரும், காவல் நிலைய விசாரணைக்குப் பிறகு சிறையில் அடைக்கப்பட்டனர். ஆனால், சில மணி நேரத்தில் இருவருமே அடுத்தடுத்து இறந்து போக, ‘உடல்நலக்குறைவு ’என்று வழக்கமான காரணத்தைச் சொல்லிக் கதையை முடிக்கப் பார்த்தது அன்றைக்கு ஆட்சியில் இருந்த எடப்பாடி பழனிசாமி அரசு.
2020 ஜூன் 22-ஆம் தேதி ஜெயராஜும் பென்னிக்ஸும் இறந்தார்கள். இரண்டு நாள் கழித்து 24-ஆம் தேதி அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி அது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், ’சிறையில் இருந்த பென்னிக்ஸ் தனக்கு மூச்சுத்திணறல் ஏற்படுவதாகச் சொன்னதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். சிறையில் இருந்த ஜெயராஜ் தனக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்ததையடுத்து, மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்’ எனக் குறிப்பிட்டார்.
போலீஸாரால் கொல்லப்பட்டவர்களை ’மூச்சுத்திணறல் – உடல்நலக்குறைவு’ என முதல்வரே பொய் சொல்லிக் காவல் துறையினரைக் காப்பாற்றினார். பாதிக்கப்பட்ட ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய இரண்டு அப்பாவிகளை நோயாளி ஆக்கிய மனசாட்சி இல்லாத மனிதர்தான் எடப்பாடி பழனிசாமி. மாபாதகச் செயலைச் செய்துவிட்டு, கூச்சமே இல்லாமல் பச்சைப் பொய் சொன்னார் பழனிசாமி. ‘உடல்நலக்குறைவு’ என்று காரணத்தைச் சொல்லிக் கதையை முடிக்கப் பார்த்தது எடப்பாடி அரசு. காவல்துறையினர் நடத்திய கொலைவெறித் தாண்டவத்திற்கு ஆதரவு அளித்தவர்தான் பழனிசாமி.
எடப்பாடி பழனிசாமியின் நடவடிக்கையைக் கடுமையாக எதிர்த்ததோடு பாதிக்கப்பட்டக் குடும்பத்திற்கு ஆதரவாக மக்களோடு இணைந்து போராடியது திமுக. சாத்தான்குளம் கொடூரக் கொலைச் சம்பவத்தில் இன்றைக்கு நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் மூடி மறைக்க நினைத்த வழக்கில் இன்று நீதிமன்றம் தீர்ப்பளித்ததன் மூலம் ’மூச்சுத்திணறல் – உடல்நலக் குறைவால்தான் உயிரிழந்தனர்’ என பழனிசாமி சொன்ன அபாண்டப் பொய்யை வெட்ட வெளிச்சமாக்கி விட்டது. குற்றவாளிகளைக் காப்பாற்ற அன்று பொய் சொன்ன பழனிசாமியும் ஒருவகையில் குற்றவாளிதான். பொய் சொல்லி குற்றவாளிகளைக் காப்பாற்ற முயன்ற எடப்பாடி பழனிசாமி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.
Also Read
-
Covid-ல் அதிமுக ஆட்சியில் நடந்த கொடூரம்... சாத்தான்குளம் வழக்கில் 6 ஆண்டுகளுக்கு பிறகு தீர்ப்பு - விவரம்!
-
மேற்கிலும் உதிக்கும் சூரியன்! - அக்னி நியூஸ் சர்வீசஸ் வெளியிட்ட 2026 தேர்தல் கருத்துக்கணிப்பு!
-
”பா.ஜ.க.வின் பகிரங்க திட்டம்... நெருங்கும் ஆபத்து!” : முன்னாள் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரேஷி எச்சரிக்கை!
-
சென்னையில் சிக்கிய 10 ஏ.கே 47 துப்பாக்கிகள்... தேர்தல் பறக்கும் படை அதிரடி சோதனை! - முழு விவரம் உள்ளே!
-
தேர்தல் நடத்தை விதிமுறை மீறல்! : த.வெ.க மாவட்டச் செயலாளர் பார்த்திபன் மீது வழக்குப்பதிவு!