Tamilnadu

சென்னையில் ரூ.13.56 கோடியில் நவீன வசதிகளுடன் ‘முதல்வர் திருமண மாளிகை’ திறப்பு! : முழு விவரம் உள்ளே!

சென்னை, துறைமுகம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வ.உ.சி. சாலையில் (வால்டாக்ஸ் ரோடு), பெருநகர சென்னை மாநகராட்சி நிதி, துறைமுகம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி மற்றும் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ஆகியவற்றின் மூலம் 13.56 கோடி ரூபாய் மதிப்பீட்டில்;

பொதுமக்கள் தங்களது இல்லத் திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகளை குறைந்த செலவில், மனமகிழ்வுடன் நிறைவாக நடத்திடும் வகையில் குளிர்சாதனம் மற்றும் பல்வேறு நவீன வசதிகளுடன் மிகப்பிரமாண்டமாக “முதல்வர் திருமண மாளிகை” கட்டப்பட்டுள்ளது.

“முதல்வர் திருமண மாளிகை” தரைத்தளம், முதல் தளம் மற்றும் இரண்டாம் தளத்துடன் 24 ஆயிரம் சதுர அடி பரப்பளவு கொண்டதாகும்.

தரைத்தளத்தில் 30 எண்ணிக்கையிலான நான்கு சக்கர வாகனம், 100 எண்ணிக்கையிலான இருச்சக்கர வாகனம் நிறுத்துமிடம், முதல் தளத்தில் ஒரே சமயத்தில் 330 நபர்கள் அமர்ந்து உணவு உண்பதற்கான உணவுக் கூடம், நவீன சமையற்கூடம், இரண்டாம் தளத்தில் 550 இருக்கைகளுடன் குளிர்சாதன வசதிகளுடன் கூடிய திருமண மண்டபம், மணமக்கள் அறை, மின்தூக்கி வசதிகள், கழிவறைகள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இன்று (8.2.2026) துறைமுகம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வ.உ.சி சாலையில் (வால்டாக்ஸ் சாலை) 13.56 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள முதல்வர் திருமண மாளிகையை திறந்து வைத்து, 10 இணையர்களின் திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களுக்கு சீர்வரிசை பொருட்களை வழங்கி வாழ்த்தினார்.