Tamilnadu

“மூத்த குடிமக்களுக்கான பயணக் கட்டண சலுகையை மீண்டும் வழங்க வேண்டும்” : ராஜாத்தி சல்மா MP வலியுறுத்தல்!

கொரோனா தொற்றுநோய் காலத்தில் இடைநிறுத்தப்பட்ட மூத்த குடிமக்களுக்கான கட்டணச் சலுகைகளை மீண்டும் வழங்க வேண்டியதன் தேவை குறித்து மாநிலங்களவை நேரமில்லா நேரத்தில் திமுக மாநிலங்களவை உறுப்பினர் ராஜாத்தி சல்மா பேசுனார்.

அதன் விவரம் பின்வருமாறு:

அனைத்து வகை பயணங்களிலும் மூத்த குடிமக்கள் ஆண்களுக்கும் பெண்களுக்கும் முறையே 40% மற்றும் 50% வழங்கப்பட்டு வந்த சலுகைகள் மார்ச் 2020உடன் நிறுத்தப்பட்டன. அதன் பின் இந்த இடைநீக்கம் திரும்பப் பெறப்படவில்லை. ஓய்வூதியத்தை நம்பியுள்ள முதியவர்கள் மற்றும் நிலையான வருமானம் இல்லாத முதியவர்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கோவிட்-19 காலகட்டத்தில் இந்தச் சலுகைகளை நிறுத்தி வைத்ததன் மூலம் அமைச்சகம் ரூ.2560.9 கோடியைச் சேமிக்க முடிந்தது என்பதை RTI பதிவுகள் வெளிப்படுத்தியுள்ளன. குறைந்த வருமானம் கொண்ட பயணிகளுக்கு உதவுவதற்காக, குறைந்தபட்சம் ஸ்லீப்பர் மற்றும் 3AC வகுப்புகளிலாவது இந்தச் சலுகைகளை மீட்டெடுக்க Parliamentary Standing Committee on Railways பரிந்துரைத்துள்ள போதிலும் மேற்கொண்டு அதில் நடவடிக்கை எதுவுமில்லை.

ரயில்வே அமைச்சர் உடனடியாக இந்தக் கொள்கையை மறுபரிசீலனை செய்து, இந்தச் சலுகைகளை மீண்டும் வழங்க வேண்டும் என்றும் இதனால் நமது மூத்த குடிமக்கள் எளிதாகவும் மரியாதையுடனும் பயணிக்க முடியும் என்றும் ராஜாத்தி சல்மா எம்.பி. பேசினார். மேலும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கும் வழங்கப்பட்டு வரும் சலுகைகளை விரிவுபடுத்துமாறும் ஒன்றிய அரசை அவர் வலியுறுத்தினார்.

சாதி அடிப்படையிலான மக்கள் தொகை கணக்கெடுப்பு வரைவு விதிகளை வெளியிடுக!

இந்தியாவில் சாதி அடிப்படையிலான மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்த வரைவு விதிகளை ஒன்றிய அமைச்சகம் வெளியிட்டுள்ளதா என திமுக மாநிலங்களவை உறுப்பினர் ராஜாத்தி சல்மா கேள்வி எழுப்பியுள்ளார்.

சாதிகளைப் பட்டியலிடுவதற்கான வழிகாட்டுதல்களை இறுதி செய்வதற்கு முன்பு மாநிலங்களுடன் கலந்தாலோசிக்க வேண்டும் என்பது குறித்து தமிழ்நாட்டிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீதான நடவடிக்கைகள் என்ன? என்றும் அவர் கேட்டுள்ளார்.

Also Read: கேள்வி கேட்க வேண்டிய இடம் தானே நாடாளுமன்றம்? : ஒன்றிய அரசுக்கு முரசொலி சரமாரி கேள்வி!