Tamilnadu

“பிரதமர் மோடி மிகவும் ஆபத்தானவர்” : நடிகர் கிஷோர் விமர்சனம்!

2004-இல் கன்னடத் திரைப்படமான 'காந்தி' மூலம் சினிமாவில் கிஷார் அறிமுகமானார். தமிழில் ’ஆடுகளம்', 'வெண்ணிலா கபடிக் குழு', 'விசாரணை', 'வடகென்னை', 'காந்தாரா', மற்றும் 'பொன்னியின் செல்வன்' போன்ற படங்கள் மூலம் தனக்கென்று ஒரு ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கியுள்ளார்.

இவர் திரையில் மட்டுமல்லாது நிஜ வாழ்க்கையிலும் சமூகப் பிரச்சினைகளுக்காகக் குரல் கொடுப்பவர். குறிப்பாக விவசாயிகள் போராட்டம், சூழலியல் பாதுகாப்பு மற்றும் அரசியல் நிகழ்வுகள் குறித்து சமூக வலைதளங்களில் துணிச்சலாகக் கருத்துத் தெரிவிப்பார்.

குறிப்பாக ஒன்றிய பா.ஜ.க அரசையும்; அவர்களது கொள்கைகளையும் துணிச்சலுடன் எதிர்த்து குரல் கொடுத்து வருகிறார். 2024 ஆம் ஆண்டு, ”பிரதமர் மோடி ஒரு பெரிய பொய்யர் என்றும், அவர் பொது வாழ்க்கைக்கு மட்டுமல்ல, ஒரு மனிதராக இருக்கவே தகுதியற்றவர் என்றும் கிஷோர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

அதேபோல், மணிப்பூர் வன்முறைச் சம்பவங்களின்போது பிரதமரின் மௌனத்தை விமர்சித்த அவர், மோடியை 'கும்பகர்ணனுடன்' ஒப்பிட்டு இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார். தற்போது பிரதமர் மோடி மிகவும் ஆபத்தானவர் என விமர்சித்துள்ளார்.

கிஷார் கதாநாயகனாக நடித்துள்ள 'மெல்லிசை' திரைப்படம் சமீபத்தில் வெளியாகியுள்ளது. இப்படம் குறித்து யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்துள்ளார். அப்போது,”வாழ்க்கையில் பின்னோக்கிச் செல்லும் ஒரு வாய்ப்பு இருந்தால், நான் 2014-ஆம் ஆண்டிற்குச் சென்று பிரதமரை மாற்றிவிடுவேன். அப்போது இந்தியாவே மாறியிருக்கும்.

வெறுப்புணர்வை முதலீடாக வைத்து ஆட்சிக்கு வருபவர்கள் மிகவும் ஆபத்தானவர்கள். அன்பு இல்லை என்றால் இங்கு எதுவுமே இருக்காது; நாடு சிதைந்துவிடும். அன்பைக் கெடுப்பது ஒரு வீட்டை அழிப்பதற்குச் சமம்" என பா.ஜ.க அரசையும், பிரதமர் மோடியையும் விமர்சித்துள்ளார்.

Also Read: தமிழ்நாட்டிற்கான கல்வி நிதியை விடுவிக்காதது ஏன்? : நாடாளுமன்றத்தில் பி.வில்சன் MP கேள்வி!