Tamilnadu

புத்தக காதலர்களே தயாராகுங்கள் : ஜன. 8 ஆம் தேதி சென்னை புத்தகக் கண்காட்சியை தொடங்கி வைக்கும் முதலமைச்சர்!

சென்னை நந்தனம் ஒய்.எம்.சி மைதானத்தில் 49-ஆவது சென்னை புத்தகக் கண்காட்சியை ஜனவரி 8 ஆம் தேதி தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என பபாசி தலைவர் ஆர்.எஸ்.சண்முகம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் ஆர்.எஸ்.சண்முகம் பேசுகையில், 49-ஆவது சென்னை புத்தகக் கண்காட்சியை ஜனவரி 8 ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைக்கிறார். அவருடன் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

இந்த புத்தகக் கண்காட்சி ஜனவரி 8 ஆம் தேதி தொடங்கி ஜன 21 ஆம் தேதி வரை 14 நாட்கள் நடைபெறுகிறது. 25 லட்சம் வரை வாசகர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. குடிநீர், கழிப்பறை மற்றும் உணவு உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் திட்டமிடப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும், புத்தக திருவிழாவில் வாசகர்களுக்கு நுழைவு கட்டணம் ரூ.10 வசூலிக்கப்பட்டு வந்தது. ஆனால் இந்த ஆண்டு அனைவருக்கும் இலவச அனுமதி வழங்குவது குறித்து திட்டமிடப்பட்டு வருகிறது.

மேலும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் புத்தகக் கண்காட்சியை தொடங்கி வைத்து 6 பேருக்கு கலைஞர் பொற்கிழி விருதுகளை வழங்கி சிறப்பிக்கிறார்.

கவிதை - கவிஞர் சுகுமார்

சிறுகதை - ஆதவன் தீட்சண்யா

நாவல் - இரா. முருகன்

உரைநடை - பேராசிரியர் பாரதி புத்திரன் ( சா. பாலுச்சாமி)

நாடகம் - கருணா. பிரசாத்

மொழிபெயர்ப்பு - வ. கீதா

கலைஞர் பொற்கிழி விருதுகளை பெறுபவர்களுக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும்” என தெரிவித்துள்ளார்.

Also Read: சென்னை கடற்கரை பகுதிகளை பாதுகாக்க கடல்சார் உயரடுக்கு பாதுகாப்புப்படை : அதன் சிறப்புகள் என்ன?