Tamilnadu

இசைமுரசு நாகூர் இ.எம்.ஹனீபாவுக்கு நூற்றாண்டு நினைவு மலர்... வெளியிட்டார் துணை முதலமைச்சர் உதயநிதி!

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இன்று (20.12.2025) நாகப்பட்டினம் மாவட்டம் தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இசைமுரசு நாகூர் இ.எம்.ஹனீபா அவர்களின் நூற்றாண்டு விழாவில், செய்தி மக்கள் தொடர்புத் துறையின் ‘தமிழரசு’ சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள “இசைமுரசு நாகூர் இ.எம்.ஹனீபா நூற்றாண்டு நினைவு மலரினை” வெளியிட்டார்.

இசைமுரசு நாகூர் ஹனீபா அவர்கள் சுயமரியாதை இயக்கத் தொண்டராக, இந்தி எதிர்ப்புப் போராட்ட வீரராக தம் அரசியல் வாழ்க்கையைத் தொடங்கி, பட்டுக்கோட்டை அழகிரி, தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், கண்ணியத் தென்றல் காயிதே மில்லத் ஆகியோரின் அன்பைப் பெற்றவராவார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழ்நாடு சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும், தமிழ்நாடு வக்ஃப் வாரியத் தலைவராகவும் மக்கள் பணியாற்றி, தனது கம்பீரமான குரல் வளத்தால் அனைவரையும் கவர்ந்து புகழ்பெற்ற இசைமுரசு நாகூர் இ.எம். ஹனீபா அவர்களின் நூற்றாண்டு விழாவினை அரசு விழாவாகக் கொண்டாட ஆணையிட்டுள்ளார்.

தமிழ் இசைக்கும், திரை இசைக்கும் சுமார் 75 ஆண்டுகள் தொண்டாற்றிய இசைமுரசு நாகூர் இ.எம். ஹனீபா அவர்களின் பங்களிப்பைப் போற்றி பெருமை சேர்க்கும் வகையில், செய்தி மக்கள் தொடர்புத் துறையின் ‘தமிழரசு’ சார்பில் “இசைமுரசு நாகூர் இ.எம்.ஹனீபா நினைவு மலர்” என்ற சிறப்பு மலர் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த மலரில், தந்தை பெரியர், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், கண்ணியத் தென்றல் காயிதே மில்லத், பேராசிரியர் க.அன்பழகன் ஆகியோர் இசைமுரசு நாகூர் இ.எம். ஹனீபா அவர்கள் குறித்து தெரிவித்த கருத்துக்கள்,”மக்கத்து மலரே, மாணிக்கச் சுடரே” என்ற தலைப்பில் நாகூர் ஹனீபா அவர்களின் வாழ்க்கைப் பயணம், நாகூர் ஹனீபா அவர்களின் பேட்டி ஆகியவை இடம் பெற்றுள்ளன.

இசைமுரசு நாகூர் இ.எம். ஹனீபா அவர்களின் சிறப்புகள் குறித்து ‘நீங்காத நினைவலைகள்’ என்ற தலைப்பில் முத்தமிழறிஞர் கலைஞர், பேராசிரியர் க.அன்பழகன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், ஜி.கே.மூப்பனார், அ.க.ஆ.அப்துல் சமது, எம்.ஏ.அப்துல் லத்தீப், தவத்திரு குன்றக்குடி அடிகளார், வைகோ, மதுரை ஆதினம், கவிக்கோ அப்துல் ரகுமான், தொல்.திருமாவளவன், கவிஞர் மனுஷ்யபுத்திரன், இசைமுரசு நாகூர் இ.எம்.ஹனீபா அவர்களின் மூத்த மகன் நௌஷாத் அலி ஆகியோர் தெரிவித்த கருத்துகள் இடம்பெற்றுள்ளன.

மேலும், ‘நிலைத்து நிற்கும் நிழற் படங்கள்’ என்ற தலைப்பில் இசைமுரசு நாகூர் இ.எம்.ஹனீபா அவர்களின் இளமைக்காலம் முதல் இறுதிக்காலம் வரை பங்கேற்ற நிகழ்ச்சிகளில் பல்வேறு தலைவர்களுடன் உள்ள அரிதான புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன.

மேலும், ‘கட்டுரைகள்’ என்ற தலைப்பில் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் எழுதிய ‘நூற்றாண்டு நாயகர் ஹனீபா இசை முரசு மட்டுமல்ல, முத்தமிழ் முரசும் கூட’, பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அவர்கள் எழுதிய ‘காலமெல்லாம் இசையாக ஒலிக்கும் இசை முரசு’, சட்டமன்ற உறுப்பினர் ஜெ. முகம்மது ஷா நவாஸ் அவர்கள் எழுதிய ‘சமத்துவமும் சமூகநீதியுமே ஹனீபாவின் இலக்கு’, எழுத்தாளர் இமையம் அவர்கள் எழுதிய ‘இசைவானில் பறந்த தனித்த பறவை’, வரலாற்று ஆய்வாளர் செ.திவான் அவர்கள் எழுதிய ‘காலத்தால் அழியாத வரலாறு’, இறையன்பன் குத்தூஸ் அவர்கள் எழுதிய ‘மதங்களைத் தாண்டி மனங்களில் நிறைந்தவர்’, ஆகிய தலைப்பிலான கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.

மேலும், பத்திரிகையாளர், எழுத்தாளர் ப.திருமாவேலன், அ.மா.சாமி, தமிழிசை ஆய்வாளர் நா.மம்மது, எழுத்தாளர் சாரு நிவேதிதா, கவிஞர் யுகபாரதி, எழுத்தாளர் நாகூர் ரூமி, எழுத்தாளர் களந்தை பீர்முகம்மது, எழுத்தாளர் கோம்பை எஸ்.அன்வர், பத்திரிகையாளர் கவின் மலர், எழுத்தாளர் எச்.ஹாமீம் முஸ்தபா, பத்திரிகையாளர் ப.கவிதா குமார், மாற்று சினிமா ஆர்வலர் நிழல் திருநாவுக்கரசு, எழுத்தாளர் எச்.பீர்முகம்மது, பேராசிரியர் மானசீகன், கவிஞர் நாகூர் காதர் ஒலி, பாடகர் ராஜபார்ட் ராஜாமுகமது ஆகியோர் எழுதிய கட்டுரைகளும் இடம் பெற்றுள்ளன.

இம்மலரின் சிறப்பு அம்சமாக ‘காலத்தால் அழியாத கந்தர்வ குரல்’ என்னும் தலைப்பில் இசைமுரசு நாகூர் இ.எம். ஹனீபா அவர்கள் பாடிய ‘அழைக்கின்றார்... அழைக்கின்றார்... அண்ணா’, ‘காயிதே மில்லத் விரும்பிக்கேட்ட பாடல்’, ‘கல்லக்குடி கொண்ட கருணாநிதி வாழ்கவே’, ‘திராவிட நாட்டுப்பண்’, ‘இறைவனிடம் கையேந்துங்கள்’, ‘பொறுமை போதித்த ஐந்து கடமைகள்’, ”மக்கத்து மலரே”, பாவ மன்னிப்பு திரைப்படத்தில் இடம்பெற்ற ‘எல்லோரும் கொண்டாடுவோம்’, ராமன் அப்துல்லா திரைப்படத்தில் இடம்பெற்ற ‘நல்லவங்க எம்மதமோ ஆண்டவன் அந்த மதம்’ உள்ளிட்ட பாடல்கள் இடம்பெற்றுள்ளன.

இத்தகைய சிறப்புகள் வாய்ந்த “இசைமுரசு நாகூர் இ.எம்.ஹனீபா நூற்றாண்டு நினைவு மலர்” என்ற சிறப்பு மலரினை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இன்று வெளியிட்டார்.

இந்நிகழ்ச்சியில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, நாடாளுமன்ற உறுப்பினர் வை.செல்வராஜ், சட்டமன்ற உறுப்பினர்கள் ஜெ.முகம்மது ஷா நவாஸ், வி.பி.நாகை மாலி, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் வே.ராஜாராமன், இ.ஆ.ப., மாவட்ட ஆட்சித்தலைவர் ப.ஆகாஷ், இ.ஆ.ப., தமிழ்நாடு மீன்வளர்ச்சிக் கழகத் தலைவர் என்.கௌதமன், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகத் தலைவர் என். இளையராஜா, நாகப்பட்டினம் நகர்மன்றத் தலைவர் இரா.மாரிமுத்து, மாவட்ட வருவாய் அலுவலர் வ.பவணந்தி, அரசு அலுவலர்கள் மற்றும் இசைமுரசு நாகூர் இ.எம்.ஹனீபா அவர்களின் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.

Also Read: கீழடி நம் தாய்மடி! பொருநை, தமிழரின் பெருமை! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!