Tamilnadu

கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு அனுமதி மறுப்பு : தொடரும் ஒன்றிய அரசின் வஞ்சகம்!

கோவை மாநகரில் பத்தாயிரத்து 740 கோடி ரூபாயிலும், மதுரையில் 11 ஆயிரத்து 368 கோடி ரூபாயிலும் மெட்ரோ ரயில் திட்டங்களை செயல்படுத்த தமிழ்நாடு அரசு விரிவான திட்ட அறிக்கை தயாரித்து ஒன்றிய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி இருந்தது.

கடந்த 10 மாதங்களாக இந்த திட்ட அறிக்கைகள் மீது எந்த முடிவும் எடுக்காமல் கிடப்பில் போட்டிருந்த ஒன்றிய அரசு தற்போது, மக்கள் தொகையை காரணம் கூறி இந்த 2 திட்டங்களையும் நிராகரித்து திட்ட அறிக்கைகளை திருப்பி அனுப்பியுள்ளது.

மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த நகரின் மக்கள் தொகை 20 லட்சத்துக்கு மேல் இருக்க வேண்டும் என்று கூறியுள்ள ஒன்றிய அரசு, கோவையின் மக்கள் தொகை 15.8 லட்சமும் மதுரை மக்கள் தொகை 10 புள்ளி 2 லட்சம் என்றும் தெரிவித்துள்ளது.

அதேசமயம் இதே அளவிலான மக்கள் தொகை கொண்ட உத்தரபிரதேசத்தின் ஆக்ரா மற்றும் கான்பூர், மகாராஷ்டிராவில் நாக்பூர் மற்றும் புனே, மத்திய பிரதேசத்தில் இந்தூர் மற்றும் குஜராத்தில் சூரத் ஆகிய நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து ஒன்றிய அரசின் இந்த முடிவுக்கு மதுரை, கோவை மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன்,கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களை 20 லட்சத்துக்கும் குறைவான மக்கள் தொகை இருப்பதாகக் கூறி நிராகரித்துள்ளது ஒன்றிய அரசு. தமிழ்நாட்டின் மீதான ஒன்றிய அரசின் வஞ்சகம் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

குருகிராம், புவனேஷ்வர், ஆக்ரா, மீரட் உள்ளிட்ட நகரங்ளின் மக்கள்தொகை 20 லட்சத்துக்கும் குறைவாக இருந்தபோதும் அங்கு மெட்ரோ திட்டங்களுக்கு அனுமதி வழங்கியது எப்படி?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

Also Read: “எல்லாம் தேர்தல் படுத்தும் பாடு!” : கோவை வருகை தரும் பிரதமர் மோடிக்கு பெ.சண்முகம் கண்டனம்!