Tamilnadu

கரூர் விவகாரம் “நாங்க வழக்குப் போடல” - நீதிமன்றத்தை ஏமாற்றிய தவெக: பாதிக்கப்பட்டவர்கள் புகாரால் ட்விஸ்ட்

கரூரில் கடந்த செப்.27 ஆம் தேதி தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய் ரசிகர்களை சந்தித்தபோது, ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 10 குழந்தைகள் உள்பட 41 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த துயர நிகழ்வு நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

சம்பவம் நடந்த அன்றே பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்டார்.அதோடு இதுகுறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைத்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

மேலும், இந்த துயர சம்பவம் குறித்த வழக்கில் த.வெ.க கட்சியை சென்னை உயர்நீதிமன்றம் கடுமையாக சாடியது. அதோடு வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழுவை உயர்நீதிமன்றம் அமைத்தது.

இதையடுத்து, உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து த.வெ.க, பா.ஜ.க, கூட்ட நெரிசலில் உயிரிழந்த சிறுவன் ஒருவரின் தந்தை மற்றும் பெண்னின் கணவர் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுக்கள் மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், கூட்ட நெரிசலில் மனைவியை இழந்த செல்வராஜ் என்பவர் அளித்துள்ள பேட்டி ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு என்ன வென்று தெரியாமலேயே அவரது பெயரில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து பேட்டி அளித்துள்ள செல்வராஜ், ”வேலை வாங்கித் தருவதாகக் கூறினார்கள் அதனால் கையெழுத்து போட்டேன். எனக்கு அரசியல் தெரியாது. எனது பெயரை பயன்படுத்தி யாரோ மோசடி செய்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

எனது பெயரில் தொடரப்பட்ட மனுவை ரத்து செய்ய உச்சநீதிமன்றத்திடம் கோரிக்கை வைத்துள்ளேன்” என தெரிவித்துள்ளார். இவரது பேட்டியை அடுத்து த.வெ.க நிர்வாகிகள் வேண்டும் என்றே நாடகமாடி வருகிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது.

Also Read: கூடுதல் கட்டணம் வசூல் செய்யும் ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை : அமைச்சர் சிவசங்கர் எச்சரிக்கை!