Tamilnadu

”தமிழ்நாடு அரசை பார்க்கும் போது மகிழ்ச்சியா இருக்கு” : இயக்குநர் பிரேம்குமார் பாராட்டு!

’கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ தமிழ்நாட்டின் மாபெரும் கல்வி எழுச்சியின் கொண்டாட்ட விழா சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் தொடங்கி நடைபெற்று வருகிறது. கல்வி சார்ந்த 5 முக்கிய திட்டங்களையும், சாதனைகளையும் முன்னிலையாக வைத்து இவ்விழா 7 பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

முதல் பகுதியாக தமிழ்நாட்டு மக்களின் மனதுக்கு நெருங்கமான திட்டமான முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், நான் முதல்வன், விளையாட்டுச் சாதனையாளர்கள், புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் மற்றும் அரசுப் பள்ளிகளிலிருந்து முதன்மை உயர்கல்வி நிறுவனங்களுக்கு சென்ற சாதனையாளர்கள் ஆகிய அரங்கங்கள் நடைபெறுகிறது.

முதல் அமர்வில், காலை உணவு திட்டத்தில் பயனடைந்து வரும் மாணவர்கள் தங்களது அனுபவங்களை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டனர். அப்போது ஒரு மாணவன்,”எங்க பள்ளியில் படிக்குற நிறைய பசங்க காலையில் சாப்பிடமா வருவாங்க, அதனால நிறைய மாணவர்கள் மயக்கம் போட்டு விழுந்துருவாங்க, ஆனால், இன்னைக்கு முதலமைச்சரின் காலை உணவு திட்டம் வந்த பின்னாடி, மயக்கம் என்கிற பேச்சே இல்லை. CM Sir-க்கு Thank You & I Love You” என நெகிழ்ச்சியுடன் பேசினார்.

அதேபோல் மாணவி ஒருவர், ”எங்க அம்மா, அப்பா நூறுநாள் வேலை தான் செய்றாங்க. முதலமைச்சர் அப்பா கொண்டுவந்த காலை உணவு திட்டத்தால் தான் நான் தினமும் காலையில சாப்புடுறேன். இதனால ரொம்ப சுறுசுறுப்பாக இருக்கிறேன். கண்டிப்பா நான் ஐ.ஏ.எஸ் ஆகுவேன். காலையில உணவு கொடுக்குற அப்பா மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி” என பேசினார்.

இந்த திட்டம் குறித்து பேசிய இயக்குநர் பிரேம்குமார்,"அரசுப் பள்ளியில் சத்துணவு சாப்பிட்ட அனுபவம் எனக்கும் உள்ளது. ஆனால் இன்று அரசு பள்ளி மாணவர்களுக்கு சத்தான காலை உணவு கிடைக்கிறது. படிங்க... படிங்க... என்று யார் சொன்னாலும் நமக்கு உற்சாகமாக இருக்கும். ஆனால் ஒரு மாநிலத்தின் முதலமைச்சரே படிங்க என்று சொல்வது இன்னும் நமக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.தமிழ்நாடு பகுத்தறிவுக்கு மட்டும் அல்ல கல்வி அறிவுக்கும் பெயர் பெற்ற மாநிலம்.” என பேசினார்.

Also Read: தமிழ்நாடு வேளாண் - உழவர் நலத்துறை சார்பில் ‘வேளாண் வணிகத் திருவிழா 2025!’ : எங்கு? எப்போது?