Tamilnadu

"தேனாம்பேட்டை To சைதாப்பேட்டை உயர் மட்ட மேம்பாலம் உரிய காலத்தில் நிறைவுபெறும்" - தமிழ்நாடு அரசு !

சென்னை தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரையிலான 3.20 கி.மீ. நீளமான உயர் மட்ட மேம்பாலப் பணிகள் உரிய காலத்தில் நிறைவு பெரும் என தமிழ்நாடு அரசு கூறியுள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கை விவரம் :

சென்னை தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரையிலான 3.20 கி.மீ. நீளமான உயர் மட்ட மேம்பாலப் பணிகள் ரூ. 621 கோடி மதிப்பீட்டில் முன்னெடுக்கப்படுகின்றன. பணியை விரைவில் மற்றும் தரமான முறையில் நிறைவு செய்ய முன்னோக்கிய கட்டமைப்பு (Pre-fabricated) முறையில் சுமார் 15,000 டன் எஃகுக் கட்டமைப்புகள் (Pier, Pier-Cap, Girder) உருவாக்கப்பட்டு வருகின்றன. உற்பத்தி பணிகள் மும்பை, வதோதரா, கும்மிடிப்பூண்டி, ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களில் உள்ள 5 தொழிற்சாலைகளில் நடைபெற்று வருகின்றன.

தமிழ்நாடு பொதுப்பணி, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ. வ.. வேலு இத்திட்ட முன்னேற்றப் பணிகளை நேரில் ஆய்வு செய்து, உற்பத்தி தரத்தையும் பணிகள் நடைபெறும் வேகத்தையும் பரிசீலித்தார்.

தொழிற்சாலை ஆய்வு

குஜராத் ,வதோதராவில் உள்ள கே.பி. கிரீன் தொழிற்சாலை ஆகிய இடங்களில் தயாரிக்கப்பட்டு வரும் முன்வார்க்கப்பட்ட எஃகு உறுப்புகள் — தூண்கள் (Pier), மேல்தாங்கிகள் (Pier-Cap), உத்திரங்கள் (Girder) ஆகியவற்றின் தயாரிப்பு தரநிலைகள், சோதனைச் சான்றுகள் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளை அமைச்சர் ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது:

• சிறப்பு தொழில் நுட்ப அதிகாரி சந்திரசேக்கர்,

• நெடுஞ்சாலைத் துறை தலைமை பொறியாளர் சத்தியபிரகாஷ்,

• கண்காணிப்பு பொறியாளர் சரவணசெல்வம்,

• NKAB சார்ந்த அதிகாரிகள்

• ஒப்பந்ததாரர் ஜெ.குமார் கம்பெனி சார்ந்த பொறியாளர் மற்றும்

• பிற நெடுஞ்சாலைத் துறை சார்ந்த அதிகாரிகள்

உடன் இருந்தனர்.

இது குறித்து அமைச்சர் தெரிவித்ததாவது:

• மேம்பாலப் பணிகள் திட்டமிட்ட காலக்கெடுவிற்குள் நிறைவு செய்யப்படுவதை உறுதி செய்ய தினசரி கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது.

• உற்பத்தி முடிந்தவுடன் உறுப்புகள் தளத்துக்கு கொண்டு வரப்பட்டு, கட்டுமான பணிகள் வேகமாக முன்னெடுக்கப்படும்.

• தரச்சோதனை மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளில் எந்தவித சலுகையும் செய்யப்படமாட்டாது.

பொதுமக்களுக்கு நன்மைகள்

பணிகள் நிறைவடைந்தவுடன்,

• அண்ணாசாலைப் பகுதியில் காணப்படும் போக்குவரத்து நெரிசல் குறையும்.

• தேனாம்பேட்டை – சைதாப்பேட்டை இடையேயான பயண நேரம் பெரிதும் சுருங்கும்.

• பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு பெரும் நிவாரணம் கிடைக்கும்.

• மேம்பாலம் சர்வதேச தரத்திற்கு இணையான கட்டமைப்பு தரத்தில் அமையப்பெற்று, நீடித்த பயன்பாடு வழங்கும்.

Also Read: “திராவிட மாடல் திட்டங்களால் ‘பொருளாதார சமூக முன்னேற்றம்’ அடையும் மக்கள்!” : துணை முதலமைச்சர் பெருமிதம்!