Tamilnadu

“தமிழ்நாடு முழுவதும் EV சார்ஜிங் நிலையங்கள் அமைக்க நடவடிக்கை!” : அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தகவல்!

சென்னை நந்தம்பாக்கம், சென்னை வர்த்தக மையத்தில் உள்ள அரங்கில் 3 நாட்கள் நடைபெறும் பயணிகள் போக்குவரத்து வாகனங்கள் கண்காட்சி நேற்று (ஜூலை 31) தொடங்கிய நிலையில் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பார்வையிட்டு டாடா நிறுவனத்தின் புதிய மின்சாரத்தில் இயங்கக்கூடிய பேருந்தை அறிமுகப்படுத்தினார்.

தொடர்ந்து விழா மேடையில் பேசிய அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தமிழ்நாடு அரசின் விரைவான மற்றும் முன்னெச்சரிக்கையான அணுகுமுறையை எடுத்துரைத்தார்.

மேலும்,“மின்சார வாகனத் துறையைப் பொறுத்தவரை, நாங்கள் உடனடியாகச் செயல்பட்டு, குறுகிய காலத்தில் முக்கியப் பிரச்சினைகளைத் தீர்த்துள்ளோம்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

மின்சார வாகன பயன்பாட்டிற்கு ஏதுவாக, தமிழ்நாடு முழுவதும் சார்ஜிங் அமைப்புகளை தீவிரமாக அமைத்து வருகிறோம். விரைவில், முக்கிய இடங்களில் அதிவேக சார்ஜிங் நிலையங்கள் நிறுவப்பட இருக்கிறது.

இந்தியாவின் மின்சார வாகன உற்பத்தியில் தமிழ்நாடு முக்கிய பங்கு வகிக்கிறது. தேசிய அளவில் 40% நான்கு சக்கர மின்சார வாகனங்கள் மற்றும் 70% இரு சக்கர மின்சார வாகனங்கள் தமிழ்நாட்டில்தான் தயாரிக்கப்படுகின்றன.

தற்போது தமிழ்நாட்டில் EV வாகனங்கள் பதிவில் எந்த பிரச்சினையும் இல்லை. ஹைபிரிட் வாகனங்கள் உற்பத்தி நடைபெற்று வருகிறது. அடுத்தாக ஹைட்ரஜன் வாகனங்களை நோக்கி சென்று கொண்டுள்ளோம்” என்றார்.

Also Read: சென்னை மெட்ரோ ரயிலில் ஜூலை மாதத்தில் 1 கோடி பேர் பயணம் : 10 ஆண்டுகளில் முதல் முறை!