Tamilnadu

”திட்டங்களை உரிய காலத்தில் நிறைவேற்ற வேண்டும்” : அதிகாரிகளுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி அறிவுறுத்தல்!

கரூர் மாவட்டத்தில் நடைபெற உள்ள கழகம் மற்றும் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக நேற்று வருகை தந்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு கழக தொண்டர்கள், பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதனைத் தொடர்ந்து இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், அரசு சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் தொடர்பான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று ஆலோசனைகளை வழங்கினார்.

மேலும், கழக அரசின் முத்திரைத் திட்டங்கள் தொடங்கி, கல்வி, சுகாதாரம், விளையாட்டு என ஒவ்வொரு துறையிலும் திட்டங்களின் நிலையை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் துணை முதலமைச்சர் கேட்டறிந்தார்.

கரூர் மாவட்டத்தில், உங்கள் தொகுதியில் முதலைமைச்சர் போன்ற சிறப்பு முன்னெடுப்புகளின் கீழ் பெறப்பட்ட கோரிக்கைகளை செயலாக்கியது உள்ளிட்ட விவரங்களை ஆய்வு செய்து, திட்டங்களை உரிய காலத்தில் நிறைவேற்றிட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

மேலும், அரசுக்கும் மக்களுக்கும் பாலமாக இருந்து திராவிட மாடல் அரசின் திட்டங்களை வெற்றி பெறச் செய்யுமாறு அதிகாரிகளுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தினார்.

Also Read: “மாணவர்கள் கோட்சே வழியில் சென்று விடக்கூடாது” : கல்லூரி விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!