Tamilnadu

ஜூலை 15 முதல் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் - முதற்கட்ட பணியில் 1 லட்சம் தன்னார்வலர்கள்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பின்படி, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நகர்ப்புற மற்றும் ஊரகப் பகுதிகளில், ‘உங்களுடன் ஸ்டாலின்’ என்ற திட்டம் தொடங்கப்பட இருக்கிறது.

இத்திட்டத்தின் கீழ் மொத்தம் 10 ஆயிரம் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ் நடத்தப்படும் முதல் முகாமினை, வரும் ஜூலை 15 ஆம் நாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகராட்சியில் தொடங்கி வைக்க உள்ளார்.

இந்தத் திட்டம் ஜூலை 15 முதல் நவம்பர் மாதம் வரை அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறும். தமிழ்நாட்டில் உள்ள கடைகோடி மக்களுக்கும், அவர்கள் அன்றாடம் அணுகும் அரசுத் துறைகளின் சேவைகள், திட்டங்களை அவர்கள் வசிக்கும் பகுதிக்கே சென்று வழங்குவது இத்திட்டத்தின் நோக்கம்.

குறிப்பாக, நகர்புறப் பகுதிகளில் மூவாயிரத்து 768 முகாம்களும் ஊரகப் பகுதிகளில் ஆறாயிரத்து 232 முகாம்களும் நடைபெற இருக்கிறது. நகர்ப்புற பகுதி முகாம்களில் 13 அரசுத் துறைகளைச் சார்ந்த 43 சேவைகளும், ஊரகப் பகுதிகளில் 15 துறைகளைச் சார்ந்த 46 சேவைகளும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் முகாம்களுக்கு வருகை தரும் பொதுமக்களின் உடல் நலனைப் பேணும் வகையில், மருத்துவ முகாம்களும் நடத்தப்பட இருக்கிறது. மேலும் முகாம்களில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெறத் தகுதியுள்ள விடுபட்ட மகளிர் எவரேனும் இருப்பின் முகாம் நடைபெறும் நாளன்று முகாமிற்குச் சென்று தங்கள் விண்ணப்பத்தினை அளிக்கலாம்.

இம்முகாம்களில் பெறப்படும் விண்ணப்பங்கள் மீது 45 நாட்களில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இத்திட்டம் குறித்த விபரங்களை பொதுமக்களுக்கு முறையாக தெரிவிப்பதற்காக, ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ் தன்னார்வலர்கள் மூலம் வீடு வீடாக சென்று அரசுத் துறைகளின் சேவைகள் குறித்த கையேடு வழங்கும் பணி இன்று தொடங்கியுள்ளது.

இந்தப் பணி 3 மாதங்கள் தொடர்ச்சியாக நடைபெறும். இப்பணியில் சுமார் ஒரு லட்சம் தன்னார்வலர்கள் ஈடுபடுகின்றனர். ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தில் உங்கள் பகுதிகளில் நடைபெறும் முகாம்களில் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு தமிழ்நாடு அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

Also Read: இந்திய உரிமையை நிலைநாட்ட பேச்சுவார்த்தை தொடங்குமா ஒன்றிய பா.ஜ.க. அரசு? : முரசொலி தலையங்கம் கேள்வி!