Tamilnadu

காதலனை பழிவாங்க 21 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த இளம் பெண் : போலிஸாரிடம் சிக்கவைத்த Mail !

குஜராத் மாநிலம் அமகதாபாதில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியம், பி.ஜே.மருத்துவக் கல்லுாரி மற்றும் தமிழ்நாடு, டில்லி, மஹாராஷ்டிரா, கேரளா, ராஜஸ்தான் என 21 இடங்களுக்கு கடந்த 3 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை இ - மெயில் வாயிலாக வெடிகுண்டு மிரட்டல்கள் வந்துள்ளது.

இது தொடர்பாக அமகதாபாத் சைபர் கிரைம் போலீசார் பல்வேறு மாநில சைபர் கிரைம் போலீசாருடன் இணைந்து விசாரணை நடத்தினர். இதில் போலி இ - மெயில் வாயிலாக மிரட்டல் வந்துள்ளது தெரியவந்துள்ளது.

அந்த இ - மெயிலை கண்காணித்தபோது, அது சென்னையை சேர்ந்த பெண் இன்ஜினியர் ரேனே ஜோஷில்டா என்பவரது மெயில் என்று தெரியவந்தது. இதையடுத்து , அகமதாபாத் போலீசார் கடந்த 21 ஆம் தேதி சென்னை வந்து ஜோஷில்டாவை கைது செய்து விசாரணை நடத்தினர்.

அப்போது, ரோபோட்டிக் இன்ஜினியரான ஜோஷில்டா, டிவிஜ் பிரபாகர் என்ற இளைஞரை காதலித்து வந்துள்ளார். ஆனால் அவர் வேறு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இதனால் காதலனை பழிவாங்க அவரது பெயரில் போலி இ - மெயில் உருவாக்கி வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தெரியவந்தது.

மேலும், ஒரே கம்ப்யூட்டரில் இருந்து போலி இ - மெயிலை உருவாக்கியபோது, அவரது உண்மையான இ - மெயிலுடன் அந்த முகவரியும் இணைந்துவிட்டது. இதனால் அவர் போலிஸாரிடம் சிக்கிக் கொண்டுள்ளார்.

Also Read: போதை வழக்கு : நடிகர் ஸ்ரீகாந்த் கைது தொடர்பாக காவல்துறை அறிக்கை.. மேலும் சிக்கும் சிலர்... முழு விவரம்!