Tamilnadu

கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் நிலமோசடி : அதிமுக முன்னாள் நகர்மன்ற தலைவர் கைது!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகர அதிமுக செயலாளராகவும், 2011 - 2016 வரை ராசிபுரம் நகர்மன்ற தலைவராகவும் இருந்த பாலசுப்பிரமணியன், ஏ.கே.சமுத்திரம் பகுதியில் ஹைடெக் சிட்டி என்ற பெயரில் வீட்டுமனைகள் வழங்குவதாக 500-க்கு மேற்பட்டோர்களிடம் பல கோடி ரூபாய் பணம் வசூலித்ததாக கூறப்படுகிறது.

பணம் செலுத்திய நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு பாலசுப்பிரமணியம் மற்றும் அவரது பங்குதாரர் ஏ.பி.பழனிவேல் ஆகியோர் வீட்டுமனையை தராமல் மிரட்டல் விடுப்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

அதன்பேரில், அதிமுக பிரமுகர் பாலசுப்பிரமணியன் மீது மோசடி, மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் நாமக்கல் குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில், கடந்த 10 நாட்களாக தலைமறைவாக இருந்த பாலசுப்பிரமணியத்தை காவல்துறையினர் ராசிபுரத்தில் கைது செய்தனர்.

ராசிபுரம் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி மோகனப்பிரியா முன்பு, பாலசுப்பிரமணியத்தை காவல்துறையினர் ஆஜர்படுத்தினர். அதிமுக பிரமுகர் பாலசுப்பிரமணியத்தை 15 நாள்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

இந்நிலையில், ராயல் ஹைடெக் சிட்டி சிறுவனத்தில் பணம் செலுத்தி தற்போதுவரை வீட்டுமனைகள் வழங்கப்படாமல் ஏமாற்றப்பட்டு இருந்தால், தக்க ஆதாரங்களுடன் புகார் மனுக்களை அளிக்கலாம என பொதுமக்களுக்கு நாமக்கல் மாவட்ட காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

Also Read: ANI-ல் நீக்கப்பட்ட செய்தி! : பா.ஜ.க.வினரின் வெறுப்பை வெளிப்படுத்தும் ஊடகங்கள் மிரட்டப்படுகிறதா?