Tamilnadu

திருச்சி:"குடிநீரில் கழிவு நீர் கலக்கவில்லை, அதில் எந்த பிரச்சினையும் இல்லை" - அமைச்சர் KN நேரு விளக்கம்!

சென்னையிலிருந்து திருச்சி வந்த நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு உறையூர் பத்தாவது வார்டு பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து அப்பகுதி மக்களிடம் குடிநீர் எவ்வாறு வருகிறது என்பது குறித்தும் கேட்டறிந்தார்.

மேலும், அப்பகுதியில் கடந்த ஒரு வாரமாக மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு அப்பகுதி மக்கள் தீவிர கண்காணிப்புக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது குறித்து அங்குள்ள மருத்துவர்கள் செவிலியர்களிடம் கேட்டறிந்தார். அதனைத் தொடர்ந்து அப்பகுதியில் உயிரிழந்தவர்களின் மூன்று குடும்பங்களுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறி அவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.

இதனைத்தொடர்ந்து அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 10-வது வார்டில் குடிநீரில் கழிவு நீர் கலக்கவில்லை. குடிநீரில் எந்த பிரச்சினையும் இல்லை. உயிரிழந்தவர்களுக்கு வேறு சில உடல் ரீதியான பிரச்சினைகள் இருந்தது என்பதை அவர்களின் குடும்பத்தினரே தெரித்துள்ளனர்.

விசாரணையில் அந்த பகுதியில் நடந்த திருவிழாவின் போது அன்னதானம் சாப்பிட்டவர்களுக்கு உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இங்குள்ள ஒரு பகுதியில் மக்களின் அச்சம் காரணமாக குடிநீர் விநியோகிக்கப்படவில்லை. எனினும் அந்த பகுதியிலும் மாநகராட்சியின் சார்பில் குடிநீர் விநியோகிக்க உத்தரவிடப்பட்டுள்ளது"என்று கூறினார்.

Also Read: “முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியம் உயர்வு” : சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!