Tamilnadu

”நீதிபதிகள் காலிப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்” : சட்டப்பேரவையில் அமைச்சர் ரகுபதி தகவல்!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து, மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இன்று கேள்வி நேரத்தின் போது, வேதாரண்யத்தில் உள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நீதிபதிகள் நியமனம் செய்யப்படுவார்களா? என அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் ஓ .எஸ் மணியன் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி," நீதிபதிகள் நியமனம் உயர்நீதிமன்றம் மற்றும் சர்வீஸ் கமிஷன் மூலம் நிரப்பப்படும். மேஜிஸ்ட்ரேட் நீதிபதிகள் ஆண்டுதோறும் நிரப்பப்படுவார்கள். அப்படி நிரப்பப்படும் போது கூடுதலாக காலி பணியிடங்கள் இருந்து வருகிறது .இதனால் ஒரு மேஜிஸ்ட்ரேட் இரண்டு கோர்ட்டுக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. விரைவில் நீதிபதிகள் காலிப் பணியிடங்கள் பூர்த்தி செய்வதற்கு தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்கும்” என தெரிவித்துள்ளார்.

அதேபோல், வணிக நிறுவனங்கள் தமிழில் பெயர் வைக்க வேண்டும் என்றும் தமிழில் பெயர் வைக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் பேரவையில் அறிவுறுத்தினார்.

இதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் சாமிநாதன், ”வணிக வளாகங்களில் தமிழில் பெயர் பலகை இல்லாமல் இருந்தால் நடவடிக்கைகள் எடுக்கப்படுவது தொழிலாளர் நலத்துறை தான்.இதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், ரூ.500 அபராதம் இருந்தது தற்போது ரூ.2 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. தமிழில் பெயர் பலகை வைக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது என தெரிவித்துள்ளார்.

Also Read: உள்ளாட்சி அமைப்புகளில் இடஒதுக்கீடு : மாற்றுத்திறனாளிகளை தலைவர்களாக உயர்த்திய முதலமைச்சர் : The Hindu!