Tamilnadu

“அனைத்து மலை கிராம மக்களும் பயன்பெறும் வகையில் மருத்துவ திட்டங்கள்!” : அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சு!

தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர், 2025 - 26 ஆம் நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கை அறிவிப்புடன், கடந்த மார்ச் 14ஆம் நாள் தொடங்கியது.

அதனைத் தொடர்ந்து, சட்டப்பேரவையில் துறை சார்ந்த மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

அவ்வகையில், இன்று (ஏப்ரல் 17) தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் நடைபெற்ற கேள்வி - பதில் நேரத்தில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “தமிழ்நாடு முழுவதும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் புதிதாக 25 மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை ஒரே நேரத்தில் திறந்து வைக்கப்பட இருக்கின்றன.

25 மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள், சுமார் ரூ.1,018 கோடி மதிப்பீட்டில் தரம் உயர்த்தப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் புதிய கட்டடங்கள் கட்டும் பணி இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளன. இவை, விரைவில் பயன்பாட்டிற்கு வர இருக்கின்றன.

மேலும், தமிழ்நாடு முழுவதும் சுமார் 1,000 முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்பட்டு, அம்மருந்தகங்களில் 206 வகையான generic மருந்துகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இவை தவிர்த்து, வேறு மருந்துகளையும் முதல்வர் மருந்தகங்களில் விற்பனை செய்யலாம். அதற்கு எந்த தடையும் இல்லை.

திராவிட மாடல் ஆட்சியில், தமிழ்நாட்டில் 2,200 மலை கிராமங்களில் இருக்கிற மக்களும் பயன்பெறும் வகையில், மருத்துவ திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாகதான், இந்தியாவிலேயே எந்த மலைப்பகுதிகளிலும் இல்லாத வகையில், 700 படுக்கைகள் கொண்ட நவீன மருத்துவமனையை, உதகையில் திறந்து வைத்திருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்” என தெரிவித்தார்.

Also Read: “மாநில உரிமைக்காக குரல் கொடுக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!” : மாநில சுயாட்சிக்கு அகிலேஷ் ஆதரவு!