Tamilnadu

”நீங்கள் விவசாயிகள் என்றால் நாங்கள் என்ன IAS-ஆ?” : பேரவையில் பழனிசாமிக்கு அமைச்சர் துரைமுருகன் பதிலடி!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இன்று நீர்வளத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் அமைச்சர் துரைமுருகன் பேசினார்.

அப்போது எதிர்க்கட்சி தலையர் எடப்பாடி பழனிசாமி எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் துரை முருகன் பதில் அளித்து பேசுகையில்,"நதிநீர் பங்கீட்டில் தமிழ்நாட்டிற்கு உரிமை இருக்கிறது. ஆனால், அந்த உரிமை மறுக்கப்படுகிறது. மற்ற மாநிலங்களுடன் பேசினால் இந்த சிக்கல் தீராது என்பதை உணர்ந்துதான் உச்சநீதிமன்றத்திற்கு சென்றுள்ளோம். நமது உரிமையை நிலைநாட்ட அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

நீங்கள் முதலமைச்சராக இருக்கும் போது அண்டை மாநில முதலமைச்சர்கள் விரோதியாக இருந்தார்களா?. தமிழ்நாடு அரசின் அனுமதி இல்லாமல், மேகதாதுவில் ஒருபோதும் அணை கட்ட முடியாது. அதனை வனத்துறையும் உறுதி செய்துள்ளது. அண்டை மாநிலங்களின் நதிநீர் பங்கீட்டில் தமிழ்நாட்டிற்கு உரிமை இருக்கிறது.

மேகதாது அணைக்கு விரிவான திட்ட அறிக்கையை அவர்கள் தயார் செய்தனர். அதனை காவிரி ஆணையத்திலும் விவாதத்திற்கு முன்வைத்தனர். ஆனால், காவிரி ஆணையத்திற்கு மேகதாது குறித்துப் பேச உரிமை இல்லை என்று நாம் கூறியதால்தான், அந்த விவாதம் கைவிடப்பட்ட திட்ட அறிக்கை திரும்ப அனுப்பப்பட்டது.

முந்தைய அ.தி.மு.க ஆட்சியில் விட்டுச்சென்ற அத்திக்கடவு - அவிநாசி, கல்லணை கால்வாய் போன்ற திட்டப்பணிகளை நிறைவு செய்துள்ளது தி.மு.க அரசு. நான் ஒரு விவசாயி, விவசாயி என்று எதெற்கெடுத்தாலும் தம்பட்டம் அடிக்கும் எடப்பாடி பழனிசாமி அவர்களே, நீங்கள் விவசாயி என்றால், நாங்கள் என்ன IAS-ஆ? நானும் விவசாயக் குடும்பத்தை சார்ந்தவன்தான். பல முறை விவசாய நிலத்தில் ஏர் ஓட்டியவன்தான்" என தெரிவித்துள்ளார்.

Also Read: “இந்தியாவிற்கே எச்சரிக்கை மணி அடித்திருக்கிறது தமிழ்நாடு!” : சட்டப்பேரவையில் முதலமைச்சர் உரை!