Tamilnadu

”கூட்டாட்சியை பாதுகாக்க மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுக்கும் தமிழ்நாடு முதல்வர் ”: பிருந்தா காரத் பேச்சு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24 ஆவது அகில இந்திய மாநாடு மதுரையில் அடுத்த மாதம் நடைபெறுகிறது. இம்மாநாடையொட்டி சென்னை மண்ணடியில் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அக்கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.

அப்போது பேசிய பிருந்தா காரத், ” மதுரையில் நடைபெறும் மாநாட்டிற்காக வீடு வீடாக சென்று உழைப்பாளி மக்களிடம் இருந்து நாங்கள் நிதி பெற்றுள்ளோம். ஆனால் பா.ஜ.க அரசு 10 ஆண்டுகளில் ரூ.16 லட்சம் கோடி கடனை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தள்ளுபடி செய்து அவர்களிடம் இருந்து நிதி பெற்றுள்ளது. இதில் இருந்தே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கை என்னவென்று புரிந்து கொள்ளமுடியும்.

கூட்டாட்சி தத்துவதற்கு எதிரான செயல்பாடுகளை ஒன்றிய பா.ஜ.க அரசு அதிகரித்துள்ளது. இதை தடுத்து போராட வேண்டியது தற்போது நமது கடமையாகும். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கூட்டாட்சி தத்துவத்தை பாதுகாக்க தனது ஆக்கப்பூர்வமான முன்னெடுப்புகளை எடுத்து வருகிறார்.

அந்த வகையில்தான் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக இந்திய அளவில் மாநில முதல்வர்கள், தலைவர்கள் பங்கேற்கும் கூட்டுநடவடிக்கைக்குழு கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். இதற்கான கூட்டம் சென்னையில் நாளை நடைபெறுகிறது. மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு செய்யப்பட்டால் தென்மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்படும். தொகுதி மறுசீரமைப்பு ஜனநாயகத்திற்கும், கூட்டாட்சிக்கும் எதிரானது.

அதேபோல் ஒன்றிய பா.ஜ.க அரசு நிதி ஒதுக்கீட்டிலும் தென்மாநிலங்களுக்கு பாரபட்சம் காட்டி வருகிறது. ஒன்றிய அரசுக்கு ரூ.100 செலுத்தினால் தமிழ்நாட்டிற்கு ரூ.27தான் கிடைக்கிறது. அதேபோல் கேரளாவுக்கு ரூ.21தான் கிடைக்கிறது. ஆனால் பா.ஜ.க ஆட்சி நடக்கும் மாநிலங்களுக்கு வரி அதிகம் கொடுக்கப்படுகிறது” என தெரிவித்துள்ளார்.

Also Read: “தமிழ்நாட்டில் MSME நிறுவனங்களுக்காக ஒன்றிய அரசு செய்தது என்ன?” : நாடாளுமன்றத்தில் தயாநிதி மாறன் கேள்வி!