Tamilnadu

🔴LIVE | தமிழ்நாடு வேளாண் நிதிநிலை அறிக்கை! : அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்வதது என்ன?

நடமாடும் விற்பனை வண்டிக்கு மானியம் !

உழவர்கள் தாங்கள் விளைவித்த காய், கனிகளை நுகர்வோருக்கு நேரடியாக விற்பனை செய்திட ஏதுவாக, 4000 நடமாடும் விற்பனை வண்டிகளுக்கு மானியம் வழங்கப்படும்.

9 லட்சம் குடும்பங்களுக்கு பழச்செடித் தொகுப்புகள்!

2025-2026ஆம் ஆண்டில் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம் என்னும் புதிய திட்டம் ரூ.125 கோடி நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும்.

9 லட்சம் குடும்பங்களுக்கு 75% மானியத்தில் பழச்செடித் தொகுப்புகள் வழங்கப்படும்.

1 லட்சம் இல்லங்களுக்கு 17% மானியத்தில், பயறுவகை விதைகள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படும்.

5 காளான் உற்பத்தி கூடங்கள் அமைத்திட மானியம் வழங்கப்படும்.

தமிழ்நாடு முந்திரி வாரியம் !

இந்தியாவில் தமிழ்நாடு முந்திரி உற்பத்தியில் நான்காவது இடத்தில் இருந்தாலும் ஏற்றுமதி இரண்டாவது இடத்தில் உள்ளது. எனவே, தமிழ்நாட்டில் முந்திரியின் உற்பத்தியை அதிகரிக்கவும், முந்திரி சார்ந்த தொழிலில் ஈடுபட்டு தொழிலாளர்களின் நலனை பாதுகாக்கவும், ரூ.10 கோடி நிதி ஒதுக்கீட்டில் தமிழ்நாடு முந்திரி வாரியம் ஏற்படுத்தப்படும்.

பனை - பலா மேம்பாட்டு இயக்கம்!

பனை மரங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், பனை சார்ந்த தொழில்களை ஊக்குவிக்கவும் “பனை மேம்பாட்டு இயக்கம்” உருவாக்கப்படும். புதிய பலா இரங்களை பரவலாக்கவும், பலாவின் ஊடுபயிர் சாகுபடியை மேற்கொள்ளவும், பலா மதிப்புக் கூட்டுதலுக்கான பயிற்சி வழங்கவும் ரூ.5 கோடி மதிப்பீட்டில் “பலா மேம்பாட்டு இயக்கம்” உருவாக்கப்படும்.

விவசாயிகளுக்கு ரூ.2.50 லட்சம் பரிசு!

சிறுதானியங்கள், பயறுவகைகள், எண்ணெய்வித்துகள், கரும்பு உள்ளிட்ட 11 பயிர்களில் நவீன வேளாண் தொழில்நுட்பங்களைக் கடைப்பிடித்து, உயர் விளைச்சல் பெறும் உழவர்களை ஊக்குவிக்க மாநில அளவில் அதிக உற்பத்தியைப் பெறும் முதல் மூன்று உழவர்களுக்கு முதல் பரிசாக 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய், இரண்டாம் பரிசாக ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய், மூன்றாம் பரிசாக ஒரு இலட்சம் ரூபாய் என 33 பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

தமிழ்நாடு வேளாண்காடுகள் கொள்கை!

உயர் மதிப்பு கொண்ட சந்தனம், செம்மரம், மகோகனி, ஈட்டி போன்ற மரங்களை வளர்ப்பதற்கும், அவற்றைப் பதிவு செய்தல், வெட்டுதல், விற்பனைக்கு எடுத்துச்செல்லுதல் போன்ற அனைத்து நடைமுறைகளையும் எளிதாக்கும் வகையில், “தமிழ்நாடு வேளாண்காடுகள் கொள்கை” வெளியிடப்படும்!

உழவர்களுக்கு முழு மானியம் !

உயிர்ம விளைபொருட்களின் எஞ்சிய நச்சு மதிப்பீடு பரிசோதனைக் கட்டணத்திற்கு உழவர்களுக்கு முழு மானியம் வழங்கப்படும்!

உயிர்ம வேளாண் நிலையை அடைந்த உழவர்களை ஊக்குவிக்கும் விதமாக, அவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும். உயிர்ம வேளாண்மை சான்றிதழ் பெற, உழவர்கள் பதிவு செய்வதற்கான கட்டணத்திற்கு முழு விலக்கு அளித்து, இலவசமாகப் பதிவு செய்யப்படும்!

முதலமைச்சரின் உழவர் நல சேவை மையங்கள் உருவாக்கம்!

வேளாண் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில், ரூ.42 கோடி நிதி ஒதுக்கீட்டில் 1,000 முதலமைச்சரின் உழவர் நல சேவை மையங்கள் அமைக்கப்படும்.

இம்மையங்களில் உழவர்களுக்கு தேவையான உரங்கள், விதைகள் உள்ளிட்ட இடுபொருட்கள் விற்பனை செய்வதோடு, வேளாண் உற்பத்தியைப் பெருக்கவும் ஆலோசனை வழங்கப்படும்.

உழவர்களுக்கு வெளிநாட்டு சுற்றுலா!

நெல் உற்பத்தித் திறனில் சாதனை படைத்துள்ள ஜப்பான், சீனா, வியட்நாம் ஆகிய நாடுகளுக்கு, 100 முன்னோடி உழவர்களை அரசு சார்பில் சுற்றுலா அழைத்துச் செல்லும் திட்டம் செயல்படுத்தப்படும்!

1 லட்சம் உழவர்கள் பயன்பெறும் சிறப்புத் திட்டம் !

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் 2,338 ஊராட்சிகளில் வரும் நிதியாண்டில் ரூ.259.50 லட்சம் மானிய ஒதுக்கீட்டில் தொடர்ந்து செயல்படுத்தப்படும்!

1 லட்சம் உழவர்கள் பயன்பெறும் வகையில் மாற்று பயிர் சாகுபடி திட்டம் ரூ.12.50 கோடி நிதி ஒதுக்கட்டில் செயல்படுத்தப்படும்.

மக்காச்சோளம் உற்பத்தி மேம்பாட்டு திட்டம்!

மக்காச்சோளம் சாகுபடி மூலம் உழவர்களுக்கு அதிக வருமானம் கிடைக்க வழிவகை செய்யும் வகையில், ரூ.40.25 கோடி ஒதுக்கீட்டில் மக்காச் சோள உற்பத்தி மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்படும் இதன்மூலம் 79 ஆயிரம் உழவர்கள் பயனடைவார்கள்!

நெல் சிறப்புத் தொகுப்பு திட்டம் அறிமுகம்!

முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம் ரூ.142 கோடி நிதி ஒதுக்கீட்டில் தொடர்ந்து செயல்படுத்தப்படும்!

நெல் சாகுபடிப் பரப்பினை அதிகரித்து உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைய “நெல் சிறப்புத் தொகுப்பு திட்டம்” ரூ.160 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்!

இழப்பீட்டு தொகை அதிகரிப்பு!

முதலமைச்சர் உழவர் பாதுகாப்பு திட்டத்தில், நிலமற்ற வேளாண் தொழிலாளருக்கு, விபத்தினால் ஏற்படும் மரணத்திற்கு வழங்கப்படும் இழப்பீட்டு தொகையை ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.2லட்சமாகவும், விபத்தினால் ஏற்படும் உடல் உறுப்பு இழப்பிற்கு வழங்கப்படும் இழப்பீட்டு தொகையை 70 ஆயிரம் ரூபாயிலிருந்து ஒரு லட்சம் ரூபாயாகவும் இயற்கை மரணத்துக்கான நிதி உதவியை 20 ஆயிரத்திலிருந்து 30 ஆயிரம் ரூபாயாகவும், இறுதி சடங்கு செய்வதற்கான நிதி உதவியை 2500 ரூபாயிலிருந்து 10,000 ரூபாயாகவும் உயர்த்தி வழங்கப்படும்!

  • வேளாண் நிதிநிலையில் அறிவிப்பு!

உழவர்களுக்கு 1.80 லட்சம் பாசன மின் இணைப்புகள்!

உழவர்களின் நீர்ப்பாசன ஆதாரத்திற்கு உதவிடும் வகையில், தமிழ்நாடு அரசு 2021 - 22ஆம் ஆண்டு முதல் புதிய பாசன மின் இணைப்புகளை வழங்கி வருகிறது. இதன்வழி, இதுவரை 1.80 லட்சம் பாசன மின் இணைப்புகள் உழவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனால், வறண்ட நிலங்களும் வளம் பெற்றுள்ளன.

மலைவாழ் உழவர் மேம்பாட்டு திட்டம் !

2025 - 26ம் ஆண்டில் மலை வாழ் உழவர்கள் பயன்பெறும் வகையில், அவர்களுக்கு மானியம் வழங்க, ரூ.22.80 கோடி ஒதுக்கீட்டில் மலைவாழ் உழவர் மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்படும்!

346.3 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியம் உற்பத்தி!

பல்வேறு இயற்கை இடர்பாடுகளால் பயிர் இழப்புகள் ஏற்பட்டபோதும், தமிழ்நாடு அரசின் சிறப்பான செயல்பாடுகளால் 2021 -22 முதல் 2023-24 ஆம் ஆண்டு வரை 346.3 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியம் உற்பத்தி அடையப்பட்டுள்ளது.

கேழ்வரகு உற்பத்தியில் முதன்மை மாநிலம் தமிழ்நாடு!

இந்திய அளவில் கேழ்வரகு உற்பத்தி திறனில் முதல் இடத்திலும்; மக்காச்சோளம், எண்ணை வித்துக்கள் மற்றும் கரும்பு ஆகியவற்றில் 2ஆம் இடத்திலும்; நிலக்கடலை, குறு தானியங்கள் உற்பத்தியில் மூன்றாம் இடத்திலும் தமிழ்நாடு விளங்கி வருகிறது.

  • சட்டப்பேரவையில், அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேச்சு!

சாகுபடி பரப்பு 151 லட்சமாக உயர்வு!

வேளாண்மைக்கென தொலைநோக்கு திட்டங்களை செயல்படுத்தியதன் விளைவாக, 2019 - 20ஆம் ஆண்டில் 146.7 லட்சம் ஏக்கராக இருந்த மொத்த சாகுபடி பரப்பு, 2023 - 24 ஆம் ஆண்டில் 151 லட்சம் ஏக்கராக உயர்ந்துள்ளது. 2019 -20 ஆம் ஆண்டில் 29.74 லட்சம் ஏக்கராக இருந்த இரு போன சாகுபடி பரப்பு, 2023 - 24 ஆம் ஆண்டில் 33.60 லட்சம் ஏக்கராக உயர்ந்துள்ளது.

- சட்டப்பேரவையில், அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பெருமிதம்!

5ஆவது வேளாண் நிதிநிலை அறிக்கை!

வேளாண்மையோடு உழவர் நலனையும் முன்னிறுத்தி வேளாண்மைக்கென தனி நிதிநிலை அறிக்கையை அறிவித்து, 2021ஆம் ஆண்டு முதல் வேளாண்மைக்கென பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அதன் தொடர்ச்சியாக இன்று 5ஆவது வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது.

  • சட்டப்பேரவையில், அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேச்சு!

Also Read: உழவர்களின் வளர்ச்சிக்கான நிதிநிலை அறிக்கை: 5-ஆவது வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல்!