Tamilnadu
உலக மகளிர் தினம் : ரூ.3200 கோடியில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில் உலக மகளிர் தினத்தையொட்டி இன்று (8.3.2025) சென்னை. நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற விழாவில், மகளிர் சுய உதவிக் குழுக்கள் உள்ளிட்ட மகளிர் பயனாளிகளுக்கு 250 ஆட்டோக்கள், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு அடையாள அட்டைகள், வங்கிக் கடன் இணைப்புகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள், நன்னிலம் நில உடைமைத் திட்டத்தின் கீழ் மகளிருக்கு நிலப் பத்திரங்கள், நிலம் வாங்குவதற்கான மானியம் மற்றும் வெளிநாடு சென்று பட்ட மேற்படிப்பு பயிலும் மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை, தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத்தின் கீழ் பதிவு செய்துள்ள பெண் தொழிலாளர்களுக்கு வீடுகள் பெறுவதற்கும், வீடுகள் கட்டிக் கொள்வதற்கும் ஆணைகள், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பணி நியமன ஆணைகள், 2025-ஆம் ஆண்டிற்கான ஔவையார் விருது, பெண் குழந்தை முன்னேற்றத்திற்கான மாநில விருது மற்றும் மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின விருதுகள் ஆகியவற்றை வழங்கினார்.
மேலும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை கையாள பெண் காவல் புலன் விசாரணை அலுவலர்கள் மற்றும் ஆளிநர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சியை தொடங்கி வைத்தார்.
மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு ஆட்டோக்கள்
நகர்ப்புற சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த மகளிருக்கு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை சார்பில் 2.41 கோடி ரூபாய் மதிப்பிலான 50 மின் ஆட்டோக்கள் (e-auto), சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் முதல் கட்டமாக தலா ஒரு இலட்சம் ரூபாய் மானியத்துடன் கூடிய 100 இளஞ்சிகப்பு நிற (Pink) ஆட்டோக்கள், தொழிலாளர் நலத்துறை சார்பில் தலா ஒரு இலட்சம் ரூபாய் மானியத்துடன் கூடிய 100 ஆட்டோக்கள், என மொத்தம் 250 ஆட்டோக்களை பயனாளிகளுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வழங்கி, கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த ஆட்டோக்களில் பெண்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்வதற்காக காவல் துறை உதவி எண்களுடன் இணைக்கப்பட்ட GPS கருவியானது பொருத்தப்பட்டுள்ளது. மேலும், பெண்களுக்காக அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு திட்டங்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான சட்டங்கள், உதவி எண்கள் குறித்த விவரங்களும் இந்த ஆட்டோக்களில் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
மகளிர் சுயஉதவிக் குழுவினருக்கு அடையாள அட்டைகள்
1000 மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு பல்வேறு பயன்களைத் தரக்கூடிய அடையாள அட்டைகளை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வழங்கினார்.
இந்த அடையாள அட்டை மூலம், கிராம மற்றும் நகரப் பேருந்துகளில், சுய உதவிக் குழுவினர் தாங்கள் தயாரிக்கும் பொருட்களை 25 கிலோ வரை விலையின்றி எடுத்துச் செல்லவும், கூட்டுறவு வங்கிகள் மூலமாகப் பெறப்படும் பயிர்க் கடன் / கால்நடைக் கடன் /சிறுவணிகக் கடன் / தொழில் முனைவோர் கடன் / மாற்றுத் திறனாளிகள் கடன் எனப் பல்வேறு கடன்களைப் பெறுவதில் முன்னுரிமை, கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் வாங்கும் பொருட்களுக்கு 5 சதவிகித கூடுதல் தள்ளுபடி, ஆவின் நிறுவன கடைகளில் குறைந்த விலையில் பொருட்கள் வாங்கவும், இ-சேவை மையங்களில் அனைத்து சேவைகளுக்கும் 10 சதவிகித சேவைக் கட்டணம் குறைவு போன்ற பல்வேறு சிறப்பு சலுகைகளை மகளிர் சுயஉதவிக் குழுவினர் பெற்று பயன்பெறலாம்.
மகளிர் சுயஉதவிக் குழுவினருக்கு வங்கி கடன் இணைப்பு
பல்வேறு தொழில் நடவடிக்கைகளை மேற்கொண்டு, பொருளாதார வளர்ச்சி பெற்று வரும் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடன் இணைப்பு என்பது மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இதனைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு, சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடன் இணைப்புகளை வழங்கி வருகிறது.
இவ்வரசு பொறுப்பேற்ற மே 2021 முதல் இதுநாள் வரை 17,33,696 சுய உதவிக் குழுக்களுக்கு 1 இலட்சத்து 5 ஆயிரத்து 235.46 கோடி ரூபாய் வங்கிக் கடன் இணைப்புகள் வழங்கி சாதனை படைக்கப்பட்டுள்ளது.
அதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு முழுவதும் 34,073 சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 4,42,949 மகளிருக்கு ரூ.3,190.10 கோடி வங்கிக் கடன் இணைப்புகள் வழங்குவதை தொடங்கி வைக்கும் விதமாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்றையதினம், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் செயல்படும் 3,584 சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 46,592 மகளிருக்கு 366.26 கோடி ரூபாய் வங்கிக் கடன் இணைப்புகளை வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து, அனைத்து மாவட்டங்களிலும் சுய உதவிக் குழுக்களுக்கு அமைச்சர்கள். நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர்கள் வங்கிக் கடன் இணைப்புகளையும், நலத்திட்ட உதவிகளையும் வழங்குவார்கள்.
நன்னிலம் நில உடைமைத் திட்டத்தின் கீழ் மகளிருக்கு நிலப் பத்திரங்கள்
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் (TAHDCO) சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும், “நன்னிலம் மகளிர் நில உடைமைத் திட்டம்" என்னும் திட்டத்தின் கீழ் விவசாயத் தொழிலாளர்களாக உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களை நில உடமையாளர்களாக உயர்த்தி சமூக நீதியினை நிலைநாட்டிட இத்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் விவசாய நிலம் வாங்க நிலத்தின் சந்தை மதிப்பில் 50 சதவிகிதம் அல்லது அதிகபட்சமாக
5 இலட்சம் ரூபாய் மானியமாக வழங்கப்படும். 2024-2025 ஆம் நிதியாண்டில் இத்திட்டத்தின் கீழ் 400 பயனாளிகளுக்கு 19.99 கோடி ரூபாய் மானியமாக வழங்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், பெண் விவசாயிகளை ஊக்குவிக்கும் விதமாக நன்னிலம் நில உடைமைத் திட்டத்தின் கீழ், ஐந்து பெண்களுக்குத் தலா 10 இலட்சம் ரூபாய் மதிப்பிலான நிலப் பத்திரமும், நிலம் வாங்குவதற்கான மானியமாக தலா 5 இலட்சம் ரூபாய் வீதம், மொத்தம் 25 இலட்சம் ரூபாய்க்கான காசோலைகளை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வழங்கினார்.
வெளிநாட்டில் உயர்கல்வி பயில்வதற்காக மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில். வெளிநாடு சென்று பட்ட மேற்படிப்பு பயிலும் 5 மாணவிகளுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கல்வி உதவித் தொகையாக 3.50 கோடி ரூபாய்க்கான காசோலைகளை வழங்கினார்.
தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத்தின் சார்பில் பெண் தொழிலாளர்களுக்கு நிதியுதவி
தொழிலாளர் நலத் துறை சார்பில், தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத்தின் கீழ், பதிவு செய்துள்ள 40 பெண் தொழிலாளர்களுக்கு தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் வீடுகள் பெறுவதற்கான உதவித் தொகை ஆணைகளும், 10 பெண் தொழிலாளர்களுக்கு ஊரக வளர்ச்சித் துறையின் உதவியுடன் வீடுகள் கட்டிக் கொள்வதற்கான ஆணைகளும், என மொத்தம் 50 பெண்களுக்கு 1.18 கோடி ரூபாய் நிதி உதவிகளை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வழங்கினார்.
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பணிநியமன ஆணைகள்
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயிற்சிபெற்ற செல்வி முத்துரத்தினஸ்ரீ, செல்வி ஜே. நிரஞ்சனா, செல்வி எஸ். வர்ஷினி ஆகியோருக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்றையதினம் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
ஒளவையார் விருது
சமூகச் சீர்திருத்தம், மகளிர் மேம்பாடு, மத நல்லிணக்கம், மொழித் தொண்டு, கலை, அறிவியல், பண்பாடு, கலாச்சாரம், பத்திரிகை, நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தொண்டாற்றும் பெண்களை ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் இந்தத் துறைகளில் சிறப்பாக பணியாற்றும் பெண்களில் ஒருவரைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு உலக மகளிர் தினத்தன்று ஒளவையார் விருது வழங்கப்படுகிறது. இந்த விருது பெறும் விருதாளருக்கு ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் பரிசுத் தொகையும், பொன்னாடையும், சான்றிதழும் வழங்கி சிறப்பிக்கப்படுகின்றனர்.
அந்த வகையில், பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்து வரும் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் முனைவர் யசோதா சண்முகசுந்தரம் அவர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 2025-ஆம் ஆண்டிற்கான ஔவையார் விருதினை வழங்கி, சிறப்பித்தார்.
முனைவர் யசோதா சண்முகசுந்தரம் அவர்கள், தமிழ்நாடு மகளிர் தொண்டு நிறுவனத்தின் மூலம் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக கல்வி, ஊட்டச்சத்து, சுகாதாரம், மாற்றுத்திறனாளிகளின் நலன் போன்றவற்றில் ஆதரவற்றோர் மற்றும் ஏழை பெண்களுக்கு சேவை செய்து வருவதோடு, கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகை, பெண்கள் விடுதி, தட்டச்சு, தையல் பயிற்சி போன்ற பல்வேறு சேவைகளை ஆற்றி வருவது குறிப்பிடத்தக்கது.
பெண் குழந்தை முன்னேற்றத்திற்கான மாநில விருது
சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில், பெண்களுக்கு எதிரான வன்முறை, போதை ஒழிப்பு மற்றும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை வடிவமைத்து, சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும், கடலூர் மாவட்டம். காட்டுமன்னார்கோவிலைச் சேர்ந்த செல்வி. க. சௌமியாவிற்கு.
2025-ஆம் ஆண்டிற்கான பெண் குழந்தை முன்னேற்றத்திற்கான மாநில விருதினையும், விருது தொகையாக ஒரு இலட்சம் ரூபாய்க்கான காசோலையையும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வழங்கி, சிறப்பித்தார்.
மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின விருது
பெண் குழந்தைகள் பாலின விகிதத்தை உயர்த்துவதற்காக சிறப்பாக செயலாற்றிய கன்னியாகுமரி மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களின் ஆட்சித் தலைவர்களுக்கு 2025-ஆம் ஆண்டிற்கான மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின விருதுகளையும், பதக்கங்களையும், பாராட்டுச் சான்றிதழ்களையும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வழங்கி, சிறப்பித்தார்.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை கையாள பெண் காவல் புலன் விசாரணை அலுவலர்கள் மற்றும் ஆளிநர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சியை தொடங்கி வைத்தல்
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 29.6.2024 அன்று காவல்துறை மானியக் கோரிக்கையில், "காவல் துறையில் உள்ள சிறப்புப் பிரிவுகளான மாநில குற்ற ஆவணக்காப்பகம், திணைய வழி குற்றத் தடுப்புப் பிரிவு, சமூக ஊடகப்பிரிவு, பொருளாதார குற்றப்பிரிவு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்புப் பிரிவு போன்றவற்றில் பணிபுரிபவர்களின் தொழில் நுட்பத் திறனை அதிகரிக்கவும், புதிதாக எழக்கூடிய டிஜிட்டல் சவால்களை சமாளிக்கவும், காவல் துறையின் தொழில் நுட்பம் சார்ந்த பணிகளை காவல் துறையினரே தனித்து மேற்கொள்ள சிறப்புப் பயிற்சி வழங்க ரூ.5.00 கோடி செலவில் கூட்டுநிதியம் உருவாக்கப்படும்" என்று அறிவித்தார்.
மேலும், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 23.8.2024 அன்று காவல்துறை சார்பில் நடைபெற்ற பதக்கங்கள் வழங்கும் விழாவில், "பெண்கள் மற்றும் குழந்தைகளை பாதிக்கும் குற்றச் செயல் பிரச்சனைகளை தீர்ப்பதில் நம்முடைய பெண் காவலர்கள் மிக முக்கிய பங்காற்றுகிறார்கள். எனவே இப்படிப்பட்ட குற்றங்களை கையாளுவதில் பெண் காவலர்களின் தொழில் முறைத் திறன்களை மேலும் மேம்படுத்தும் வகையில் பெண் கடத்தல் குற்றங்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான சைபர் குற்றங்களை விசாரித்து தீர்ப்பதற்கு அவர்களுக்கு சிறப்புத் திறன் பயிற்சி அளிக்கப்படும்" என்று அறிவித்தார்.
அந்த அறிவிப்புகளை செயல்படுத்திடும் வகையில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை கையாள பெண் காவல் புலன் விசாரணை அலுவலர்கள் மற்றும் ஆளிநர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சியை முதலமைச்சர் அவர்கள் காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார்.
தமிழ்நாட்டில் உள்ள 2,100 பெண் காவல் புலன் விசாரணை அலுவலர்களுக்கு 5 நாட்கள் பயிற்சி தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்திலும், 23,805 பெண் காவல் ஆளிநர்களுக்கு 3 நாட்கள் பயிற்சி சென்னை கிழக்கு, சென்னை மேற்கு, ஆவடி, தாம்பரம், காஞ்சிபுரம், விழுப்புரம், வேலூர், திருச்சி, தஞ்சாவூர், கோயம்புத்தூர், சேலம், மதுரை, திண்டுக்கல், இராமநாதபுரம், திருநெல்வேலி ஆகிய 15 பணியிடை பயிற்சி மையங்கள் மற்றும் திருவள்ளூர், வேலூர். விழுப்புரம், திருச்சி, சேலம், மதுரை, தூத்துக்குடி ஆகிய 7 காவல் பயிற்சி பள்ளிகளிலும் தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தின் காவல்துறை இயக்குநர் (பயிற்சி) அவர்களின் தலைமையில் பயிற்சி அளிக்கப்படும்.
பெண் காவலர்களின் சாகச நிகழ்ச்சிகள்
முன்னதாக தமிழ்நாடு காவல் துறை சார்பில் பெண் காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்ட தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், பெண் அதிரடிப்படை காவலர்கள் தங்களின் திறமையை வெளிப்படுத்தும் விதமாக, சாகச நிகழ்ச்சிகளையும், தங்களின் கண்களைக் கட்டிக் கொண்டு துப்பாக்கிகளை கையாளுவதையும், ஆயுதங்களை பயன்படுத்திடும் முறை குறித்தும் செய்து காட்டியதை பார்வையிட்டார்.
Also Read
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!
-
தமிழ்நாட்டில் 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தகவல்!