Tamilnadu

”தொகுதி மறுசீரமைப்பு மோடி அரசின் சதி திட்டம்” : ஆ.ராசா MP குற்றச்சாட்டு!

நீலகிரி மாவட்டத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு தோட்ட தொழிலாளர்கள், பழங்குடியின மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆ.ராசா எம்.பி பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பின்னர் பேசிய ஆ.ராசா எம்.பி, ” ஒன்றியத்தில் ஆட்சி செய்து வரும் மோடி அரசாங்கம் மீண்டும் குலத்தொழில் திட்டத்தை கொண்டு வரும் வகையில் 3 ஆம் வகுப்பு, 5 ஆம் வகுப்பு, 8 ஆம் வகுப்புக்கு தேர்வுகளை வைத்து மாணவர்களின் கல்வியை சிதைக்கப்பார்க்கிறது. இதன் மூலம் தந்தை என்ன வேலை செய்கிறாரோ அதே வேலையை குழந்தைகளும் செய்ய வேண்டும் என்ற குலத்தொழில் திட்டத்தை கொண்டு வர மோடி அரசு முயற்சிக்கிறது.

இதனால் தான் தேசிய கல்விக் கொள்கைளை தமிழ்நாடு அரசு எதிர்த்து வருகிறது. மேலும் அவர்களது கோரிக்கையை நாம் ஏற்றுக் கொள்ளாததால் நமக்கு வரவேண்டிய கல்விக்கான நிதியை விடுக்காமல் நம்மை மிரட்டி பார்க்கிறார்கள். ஆனால் உங்கள் மிரட்டலுக்கு நாங்கள் அஞ்ச மாட்டோம் என உறுதியுடன் நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.

தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா போன்ற திராவிட மொழிகளை கொண்ட தென் இந்தியாவை புறக்கணித்து இம்மாநிலங்களில் எம்.பி தொகுதிகளின் எண்ணிக்கையை குறைத்து, வட மாநிலங்களில் எம்.பிகளின் எண்ணிக்கை அதிகரித்து இந்தியை வைத்துக்கொண்டு நாட்டை ஆட்சி செய்ய மோடி அரசு தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் சதித் திட்டம் தீட்டி வருகிறது.

இப்போதும் கூட தென் இந்தியாவிற்கே சேர்ந்து முதலில் குரல் கொடுத்தது நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தான். தமிழ்நாடு மட்டுமல்ல தென் இந்தியாவின் பாதுகாவலராகவும் அவர் இருந்து வருகிறார்” என தெரிவித்துள்ளார்.

Also Read: இந்தியாவிலேயே முனைவர் படிப்புகளில் தமிழ்நாடு முதலிடம் - உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் பெருமிதம்!