Tamilnadu

நடிகர் கமலஹாசன் வைத்த கோரிக்கை : துணை முதலமைச்சர் உதயநிதி சொன்ன பதில்!

இந்திய தொழில் மற்றும் வர்த்தக சபைகளின் கூட்டமைப்பு சார்பாக Media and Entertainment Business Conclave - South Connect 2025 இரண்டு நாள் மாநாடு சென்னை கிண்டியில் உள்ள நட்டத்திர விடுதியில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இம்மாநாட்டினை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்து உரையாற்றினார்.

அப்போது பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,”பொழுதுபோக்கு ஊடகம் மூலமாக சமூக கருத்துகளை எடுத்துச் சொன்ன இயக்கம் திராவிட இயக்கம். கலைஞர் வசனம் எழுதிய பராசக்தி திரைப்படம் தென்னிந்திய திசை வழியையே மாற்றி காட்டியது. திரைத்துறைக்கு முன்னாள் முதலமைச்சர் கலைஞரும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும் நிறைய திட்டங்களை நிறைவேற்றியுள்ளார்.

பொழுதுபோக்கு வரியில் இருந்து முழு வரி விலக்கு வேண்டுமென நடிகர் கமலஹாசன் கோரிக்கை வைத்துள்ளார். அதன் முக்கியத்துவம் எனக்கு நன்றாக தெரியும். அதனால் உறுதியாக சொல்கிறேன். உங்கள் கோரிக்கையை முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும். உரிய முறையில் ஆய்வு செய்து சட்ட விதிகளை ஆராய்ந்து வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் முதலமைச்சர் அறிவிப்பார். அதற்கு நான் துணை நிற்பேன்” என தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ”மும்மொழி கொள்கையை எந்த காலத்திலும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று தெளிவாக கூறிவிட்டோம். இதில் அரசியல் செய்ய என்ன இருக்கிறது.மொழிக்காக பல உயிரை கொடுத்த மாநிலம் தமிழ்நாடு என்றும் தமிழர்களின் உரிமை தான் கல்வி உரிமை மொழி உரிமை” என தெரிவித்துள்ளார்.

Also Read: “எம்மொழிக்கும் சளைத்ததல்ல எம் மொழி!” : உலகத் தாய்மொழி நாளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!