Tamilnadu

“எம்மொழிக்கும் சளைத்ததல்ல எம் மொழி!” : உலகத் தாய்மொழி நாளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

உலக மொழிகளுள் மூத்த மொழி என்ற பெருமைகொண்ட ‘தமிழ் மொழி’யை தாய்மொழியாய் கொண்டுள்ளதற்கு, ஒவ்வொரு நாளும் தமிழர் பெருமக்கள் பூரிப்படைந்து வருகிறோம்.

அப்படியான நம் தாய்மொழி தமிழை பெருமைக்கொண்டாடும் வகையில், உலக தாய்மொழி நாளன்று (பிப்.21) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “எம்மொழிக்கும் சளைத்ததல்ல எம் மொழி!

இலக்கியங்களில் புதைந்திருந்த வரலாற்றினை மண்ணில் அகழாய்ந்து நிறுவி வருகிறோம்!

அகத்திலும் புறத்திலும் அன்பும் வீரமும் கொண்டு வாழும் நற்றமிழர் தாய்மொழி, போற்றுதலுக்குரிய பழமை உடைய மொழி மட்டுமல்ல; பிறமொழித் துணையின்றித் தனித்து இயங்கும் ஆற்றல்கொண்ட செம்மொழி!

உலகெங்கும் பரவட்டும் நம் உயர்தனிச் செம்மொழி!” என X சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “தாய்மொழி என்பது வெறும் தொடர்புக்குதவும் கருவி மட்டுமல்ல. ஓர் இனத்தின் அடையாளம், பண்பாடு, வரலாற்றின் அடித்தளம்.

தமிழைக் காக்க வேண்டும் என்ற நம் உணர்வுக்கும், இந்தியைத் திணிக்க வேண்டும் எனும் பாசிச சூழ்ச்சிக்கும் இதுவே அடிப்படை.

தமிழை வீழ்த்த வந்த சூழ்ச்சிகளை எல்லாம் கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டாக தமிழ்நாடு வீழ்த்தியே வந்திருக்கிறது.

இனியும் வீழ்த்தும்.

“எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் - இங்குள்ள தமிழர் ஒன்றாதல் கண்டே” - எனும் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் வரிகளுக்கு ஏற்ப ஒன்றுபட்டு நம் தமிழ் காப்போம்” என பெருமிதத்துடன் தனது X சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

Also Read: RSS -BJP அரசின் சதி திட்டத்தை முறியடிப்போம் : திமுக மாணவர் அணி கூட்டத்தில் 5 தீர்மானங்கள் நிறைவேற்றம்!