Tamilnadu

உடல்நலக்குறைவு : காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் காலமானார் !

2021ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திருமகன் ஈவெரா கடந்த 2023-ம் ஆண்டு மாரடைப்பால் உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அந்த தொகுதிக்கு இடைத் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. பின்னர் அந்த தொகுதி தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சிக்குத் ஒதுக்கப்பட்டது.

அதில் மறைந்த திருமகன் ஈவெராவின் தந்தை ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அந்த தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் 66,575 வாக்குகள் வித்தியாசத்தில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் பெரும் வெற்றி பெற்றார்.

இதனிடையே ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடல்நலக் குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், சிகிச்சை பலனின்றி இன்று அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் மூத்த தலைவரான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் 2004-ம் ஆண்டு பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஆட்சியில் ஒன்றிய ஜவுளிதுறை இணை அமைச்சராகவும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராகவும் பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மறைவுக்கு பல்வேறு கட்சிகளை சேர்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Also Read: ”வெந்ததை தின்றுவிட்டு, வந்ததை பேசுபவர்களுக்கெல்லாம்..” - அண்ணாமலைக்கு அமைச்சர் சேகர்பாபு சாட்டையடி பதில்!