Tamilnadu

‘முதலமைச்சர் ஆராய்ச்சி ஊக்கத்தொகை திட்டம்’ - 180 பேர் பயன்! : அமைச்சர் கோவி. செழியன் பேச்சு!

சென்னை, சைதாப்பேட்டையில் உள்ள கல்லூரி கல்வி இயக்கத்தில் முதலமைச்சரின் ஆராய்ச்சி ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ் ஆணை மற்றும் பாரதி இளம் கவிஞர் விருதுகளை உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் வழங்கினார்.

அவ்வகையில், 69 ஆராய்ச்சி மாணவர்களுக்கு முதலமைச்சரின் ஆராய்ச்சி ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ் ஆணைகள் வழங்கப்பட்டது. 3 ஆண்டுகளுக்கு மாதம் 25,000 வீதம் ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து விழா மேடையில் பேசிய உயர்கல்வித் துறை அமைச்சர் கோ.வி செழியன், “முதலமைச்சரின் ஆராய்ச்சி ஊக்கத்தொகை கல்வியை மேம்படுத்துவதற்கான அரிய திட்டம். மாணவ செல்வங்கள் படிப்பதற்கு கல்வி மற்றும் பொருளாதாரம் தடையாக இருக்கக் கூடாது என்பது திராவிட மாடல் ஆட்சியின் கொள்கை அனைவருக்கும் அனைத்தும் என்பதுதான் தமிழ்நாடு முதலமைச்சரின் நோக்கம்.

அவ்வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து சிறப்பான முறையில் செயலாற்றி வருகிறார். மாணவ, மாணவிகளுக்காக பல்வேறு திட்டங்களை முதலமைச்சராக இருந்து செயல்படுத்தி வருகிறார்.

புதிய திட்டங்களை கண்டுபிடிப்பதற்கும், ஊக்குவிப்பதற்கும் முதலமைச்சர் ஆராய்ச்சி ஊக்கத்தொகை திட்டம் உதவும். இத்திட்டம் 2022ஆம் ஆண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது. தமிழ்நாட்டு மாணவர்கள் ஆராய்ச்சி திறனை மேம்படுத்தவும், புதிய கண்டுபிடிப்புகளை தமிழ்நாட்டில் ஊக்கப்படுத்துவதே இந்த திட்டத்தினுடைய முக்கிய நோக்கம்.

முதலமைச்சர் ஆராய்ச்சி ஊக்கத்தொகை திட்டம் மூலம் கடந்த ஆண்டு வரை 120 பேருக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது திட்டம் விரிவுபடுத்தப்பட்டு 180 பேருக்கு வழங்கப்பட உள்ளது.

மேலும் டிஆர்பி மூலமாக தகுதித் தேர்வு நடத்தப்பட்டு மதிப்பெண்கள் அடிப்படையில் பொதுவாக ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வந்த நிலையில், மதிப்பெண் அடிப்படையில் மட்டுமல்லாமல் இட ஒதுக்கீடு அடிப்படையிலும் தமிழ்நாடு முதலமைச்சர் ஊக்கத்தொகை வழங்கப்படும்” என தெரிவித்தார்.

Also Read: Orange Alert : மோசமான வானிலை... தரையிரக்க முடியாத விமானம் - சென்னைக்கு வரவேண்டிய விமான சேவைகள் பாதிப்பு!