Tamilnadu

வங்கக்கடலில் உருவாகிறது புயல்: நாளை கரையை கடக்கும் இடத்தை அறிவித்தது வானிலை ஆய்வு மையம்!

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தழுவு நிலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், சென்னைக்கு தென்கிழக்கு திசையில் சுமார் 400 கிலோ மீட்டர் தொலைவிலும் புதுச்சேரியில் இருந்து கிழக்கு தென்கிழக்கு திசையில் 360 கிலோமீட்டர் தொலைவிலும் நிலைகொண்டுள்ளது.

அதே நேரம் நாகப்பட்டினத்தில் இருந்து கிழக்கு திசையில் 310 கிலோமீட்டர் தொலைவிலும் இலங்கையின் திரிகோண மலையிலிருந்து வடகிழக்கு திசையில் 260 கிலோமீட்டர் தொலைவிலும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளது.

இந்த புயல் நாளை மேற்கு வட மேற்கு நோக்கி நகர்ந்து வட தமிழ்நாடு - புதுச்சேரி கடற்கரையை ஒட்டி காரைக்கால் - மகாபலிபுரம் இடையே புதுச்சேரிக்கு மிக அருகில் நாளை காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கரையைக் கடக்கும் என்று கூறப்பட்டிருந்தது.

இந்த நிலையில், இந்த புயல் அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக வலுவடையும் என்று வானிலை ஆய்வு மையம் கருத்து தெரிவித்துள்ளது. புதுச்சேரிக்கு மிக அருகில் நாளை மதியம் புயலாக கரையை கடக்கும் என்றும், அப்போது மணிக்கு 70 முதல் 80 km வேகத்திலும் இடையிடையே 90 km வேகத்திலும் காற்று வீசக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

Also Read: சென்னை விமான நிலையத்தில் பயணிகளுக்கு நேர்ந்த சோகம் : கொட்டும் மழையில் இறக்கிவிடப்பட்ட பயணிகள் !