Tamilnadu
“படம் பிடிக்கணும், தியேட்டர் எங்க இருக்கு?” -தென்காசி அரசு மருத்துவமனையில் Prank Video: 2 இளைஞர்கள் கைது!
தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், நேற்று (நவ.18) 2 இளைஞர்கள் வந்துள்ளனர். அப்போது அதில் ஒரு இளைஞரின் கையில் கட்டுப்போடப்பட்டிருந்தது. தொடர்ந்து கட்டுப்போட்டு இளைஞரும், அவரது நண்பரும் சேர்ந்து மருத்துவமனைக்குள் சுற்றித் திரிந்துள்ளனர். அதோடு அங்கிருந்தவர்களிடம் நக்கலாகவும் பேசியுள்ளனர்.
மேலும் அந்த 2 இளைஞர்களும், அங்கு பணியாற்றும் நபரிடம், "படம் பிடிக்கணும். தியேட்டர் எங்க இருக்கு?" என கேட்டுள்ளனர். கையில் அடிபட்டதால், ஸ்கேன் எடுக்க வழி கேட்கின்றனரோ என்று எண்ணி, அந்த நபரும் அதற்கான வழியை காட்டி உதவினார். தொடர்ந்து இவ்வாறு ஒரு சில நபர்களிடம் கேட்கவே, இறுதியில் ஒருவரிடம் கேட்டபோது, அவரும் வழி காட்டினார்.
அப்போது அந்த இளைஞர்களில் ஒருவர் "அங்க அமரன் படம் ஓடுதா? வேட்டையன் படம் ஓடுதா?" என நக்கலாக கேள்வி கேட்க, இதில் கோபடைந்த அந்த நபர் அவர்களை திட்டினார். மேலும் அவர்கள் வீடியோ எடுப்பதை கண்ட அந்த நபர், அந்த இளைஞர்களின் செயலையும், வீடியோ எடுத்ததையும் கண்டித்துள்ளார். கண்டித்ததால் கோபமடைந்த அவர்கள், அந்த நபரையும் அவதூறாக பேசியுள்ளனர்.
இந்த Prank வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், மருத்துவமனை அலுவலர்கள் காவல்துறையில் புகார் அளித்தனர். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், அந்த இளைஞர்கள் யார் என்று கண்டறிந்து, 2 பேரை கைது செய்து விசாரித்தனர்.
அப்போது அந்த இளைஞர்கள் செங்கோட்டையை சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் பெயர் பீர் முகமது (30), சேக் முகமது (27) என்றும் தெரியவந்தது. தொடர்ந்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் பொது இடங்களில் இதுபோன்று Prank வீடியோ எடுத்து வெளியிடும் செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம் என்றும், தொடர்ந்து இதுபோல் செய்தார் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Also Read
-
“புறமுதுகு காட்டி ஓடுகிறவர்கள் நாங்கள் இல்லை; மக்களோடு மக்களாக இருந்து எதையும் எதிர்கொள்வோம்!” : உதயநிதி!
-
உதயநிதி ஸ்டாலின் விடுவிப்பு... தஞ்சையில் ஆரவாரத்துடன் வரவேற்பு அளித்த தொண்டர்கள் !
-
“கைதுக்கு பயமில்லை... எதுவானாலும் நேருக்கு நேர் சந்திப்பேன்” – கெத்தாக பேட்டியளித்த உதயநிதி ஸ்டாலின்!
-
உதயநிதி ஸ்டாலின் கைது கண்டனத்திற்குரியது.. தவெக அரசு அராஜகம் - அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம்!
-
“காவிரி பிரச்சினையை திசை திருப்ப... உதயநிதியை கைது செய்து அராஜகம்!” : மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!