Tamilnadu
“மூடநம்பிக்கைகளால் கட்டுப்படுத்தப்பட்டவர்களுக்கு போராட அதிகாரம் அளித்தது திமுக” - கனிமொழி MP நெகிழ்ச்சி!
மக்கள் தொண்டாற்றுவதற்காக 1949, செப்.17 அன்று திராவிட முன்னேற்றக் கழகம் தோற்றுவிக்கப்பட்டது. பேரறிஞர் அண்ணாவால் உருவான இந்த கட்சி, திராவிட சித்தாந்தத்தை தமிழ்நாட்டில் வேரூன்ற வைத்ததில் முக்கிய பங்காற்றியது. அன்று தொடங்கிய திமுக, ஒவ்வொரு ஆண்டும் வளர்ச்சியை மட்டுமே கண்டு வருகிறது.
அண்ணா - கலைஞர் - மு.க.ஸ்டாலின் என அடுத்தடுத்து வந்த தலைவர்கள் இதனை மேலும் மெருகேற்றினர். ஆண்டுதோறும் அண்ணா பிறந்தநாள், திமுக உருவான நாள், பெரியார் பிறந்தநாள் என மூன்றையும் இணைத்து முப்பெரும் விழா திமுக சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு திமுக உருவாகி 75 ஆண்டுகள் ஆகும் நிலையில், பவள விழா காணவுள்ளது.
திராவிட சிந்தனை காரணமாகதான் இப்போது ஒட்டுமொத்த இந்தியாவிலேயே சாதி பெயரை, தங்கள் பெயருக்கு பின்னால் யாரும் சேர்ப்பதில்லை. பெண்களுக்கான உரிமையை பெற்று தந்ததில் இருந்து, ஒடுக்கப்பட்ட மக்கள் தலைநிமிர்ந்து நடப்பதற்கு முக்கிய காரணமாக திமுகவும் இருந்தது. இந்த நிலையில் இந்த ஆண்டு பவள விழா காணும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு பலரும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் திமுக துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி, தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “தி.மு.க.வின் தோற்றம் தமிழ்ச் சமூகத்தின் முன்னேற்றத்தில் ஒரு தீர்க்கமான தருணத்தைக் குறித்தது. மூடநம்பிக்கைகளும், மதவாதமும் பெரும்பான்மை மக்களை ஒடுக்கிய காலத்தில், விளிம்புநிலை மக்களின் வலிமையான குரலாக திமுக உருவெடுத்தது.
சோசலிசம் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய நிர்வாகத்திற்கான அதன் அர்ப்பணிப்பு வளர்ச்சி அனைத்து பகுதிகளையும் சமூகங்களையும் தொடுவதை உறுதி செய்தது. பெரிய அளவிலான அணிதிரட்டல் மூலம், இந்த இயக்கம் தமிழ்நாடு முழுவதும் பரவியது. நீண்ட காலமாக விதி மற்றும் பிறப்பின் நம்பிக்கைகளால் கட்டுப்படுத்தப்பட்டவர்களுக்கு, சமூக நீதி, மொழிவாரி உரிமைகள், மாநில சுயாட்சி உள்ளிட்டவற்றுக்காக போராட அதிகாரம் அளித்தது.
கடந்த 75 ஆண்டுகளில், பெண்களுக்கான சொத்துரிமையைப் பாதுகாப்பது முதல் கல்வி, தொழில்துறை, சுகாதாரம், மனித மேம்பாட்டுக் குறியீடு உள்ளிட்டவற்றில் தமிழகத்தை முன்னணியில் நிலைநிறுத்துவது வரை திமுக முக்கிய பங்கு வகித்துள்ளது. திராவிட சித்தாந்தத்தை தழுவியதன் மூலம், தமிழகத்தின் சமூக அரசியல் சூழலை மாற்றியமைத்துள்ளது திமுக!" என்று குறிப்பிட்டுள்ளார்.
அண்ணா பிறந்தநாள் (செப்.15), திமுக உருவான நாள் (செப்.17), பெரியார் பிறந்தநாள் (செப்.17) என மூன்றையும் இணைத்து திமுக சார்பில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் முப்பெரும் விழா, இந்த ஆண்டு சென்னை, நந்தனம் YMCA மைதானத்தில் நாளை (செப்.17) மாலை நடைபெறுகிறது.
Also Read
-
Sticker தொடங்கி ஸ்ரீவைகுண்டம் பாலியல் விவகாரம் வரை.. பேரவையில் விஜய் ஆட்சியை வறுத்தெடுத்த LoP உதயநிதி!
-
“தமிழ்நாட்டின் உரிமையை வலுவாக்கவே புதிய நடுவர் மன்றம்!” : தங்கம் தென்னரசு விளக்கம்!
-
மின்துறையை நடத்துவது எப்படி?: த.வெ.க அமைச்சருக்கு பேரவையில் பாடம் எடுத்த செந்தில் பாலாஜி, சிவசங்கர்!
-
“மேயர் பிரியா மீது அவதூறு.. Protocol-ஐ தெரிந்து கொள்ளுங்கள்.. MLA பல்லவிக்கு சபாநாயகர் கொடுத்த பதிலடி”
-
அம்மோனியா வாயு கசிவால் உயிரிழந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும் : பேரவையில் தி.மு.க வலியுறுத்தல்!