Tamilnadu

”உலக நாடுகளை வியக்க வைத்த இந்தியாவின் எடிசன் ஜி.டி நாயுடு” : துரை வைகோ நெகிழ்ச்சி!

உலக நாடுகளை வியக்க வைத்த இந்தியாவின் எடிசன் ஜி.டி நாயுடு என ம.தி.மு.க முதன்மைச் செயலாளர் துரை வைகோ நெகிழ்ச்சியுடன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதன் விவரம் வருமாறு:-

கோயம்புத்தூர் பகுதியில் கலங்கல் எனும் ஒரு சின்னஞ்சிறு கிராமத்தில், மிக சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்து, பள்ளிப் படிப்பைக் கூட முறையாக கடக்காமல், அனுபவ அறிவாலும் தன் கடின உழைப்பாலும் முன்னேறிய இந்தியாவின் தாமஸ் ஆல்வா எடிசன் என்று புகழப்படும் ஜி.டி.நாயுடுவின் 131 வது பிறந்தநாள் இன்று.

தொழில் நுட்பம் பெரிதாக முன்னேற்றம் அடைந்திடாத காலத்திலேயே இந்தியாவின் முதல் மின் மோட்டார், பந்தய கார்கள், கால்குலேட்டர், தானியங்கி பயணச்சீட்டு கருவி, பத்தடி உயரம் வளரும் பருத்திச் செடி, மிக மெல்லிய சவரக் கத்தி, ஒரே நாளில் கட்டி முடிக்கப்பட்ட வீடு உள்ளிட்ட பல சாதனைகளை அறிவியல் துணை கொண்டு செய்து உலக நாடுகளை வியக்க வைத்தவர் ஜி.டி நாயுடு.

அன்றைய நாட்களில் ஜிடி நாயுடுவுக்கும்-தந்தை பெரியாருக்கும் ஆரம்ப நாட்கள் தொட்டே பழக்கம் இருந்து வந்துள்ளது. வரும்காலங்களில் தொலை தூரத்தில் இருக்கும் மனிதர்கள் ஒருவரோடு ஒருவர், கம்பி இல்லாத தொலைபேசி மூலமாக பேசிக் கொள்வார்கள் என பெரியார் குடியரசு இதழில் எழுதியதற்கு ஜிடிநாயுடு போன்றவர்களின் கண்டுபிடிப்புகளின் மீது இருந்த நம்பிக்கை என்று கூட சொல்லலாம்.

ஜிடி நாயுடுவும் பெரியார் மீது மிகப்பெரிய மதிப்பும், மரியாதையும் வைத்திருந்தார். ஜி.டி நாயுவின் சொந்த இடத்தில் கோவையில் பெரியார் படிப்பகம் ஒன்று இன்றளவும் செயல்பாட்டில் உள்ளதே அதற்கு உதாரணம். இப்படி,பள்ளிப் படிப்பைக் கூட முறையாக கடக்காமல்,தன் அனுபவ அறிவாலும்,அசாத்திய திறமையாலுமே உயர்ந்து,

தொழில்துறை,விவசாயம், ஆட்டோமொபைல் மற்றும் பொறியியல் பல துறைகளில் தன் அசாத்திய பங்களிப்பை வழங்கிய இந்தியாவின் எடிசன் ஜி.டி.நாயுடு அவர்களின் 131 வது பிறந்தநாளில் அவரது நினைவைப் போற்றுவோம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: மோடியின் தேர்தல் பரிசு : தமிழ்நாட்டில் 5 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு : நெடுஞ்சாலை ஆணையம் அறிவிப்பு!