Tamilnadu

போதைப்பொருள் வழக்குகள் : பாஜகவினர் 14 பேர் பெயர் பட்டியலை வெளியிட்ட அமைச்சர் ரகுபதி !

புதுக்கோட்டை தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர், சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி இன்று (05-03-2024) நாகர்கோவில் மாவட்டத் தி.மு.க. அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது போதை பொருள் குறித்து தமிழ்நாடு அரசு மீது பாஜக போலியான குற்றச்சாட்டுகளை பாஜக தெரிவித்ததற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, போதை பொருள் தொடர்பான வழக்குகளில் சிக்கியிருக்கும் பாஜகவினர் பட்டியலை வெளியிட்டார். இதுகுறித்து செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியின் விவரம் பின்வருமாறு :

“பாஜகவைச் சேர்ந்த 14 பேர் மீது போதைப்பொருள் தொடர்பாக 23 வழக்குகள் உள்ளது. அவர்கள் குறித்த பட்டியல் :

1. சரவணன், உறுப்பினர்

2. ராஜேஷ், சென்னை 109-ஆவது வட்ட தலைவர்

3. விஜய நாராயணன், மத்திய சென்னை மேற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர்

4. விஜயலட்சுமி, செங்கல்பட்டு வடக்கு மாவட்டத் தலைவர்

5. மணிகண்டன், தாழ்த்தப்பட்டோர் பிரிவு மண்டல தலைவர்

6. ஆனந்த ராஜேஷ், திருவள்ளூர் மேற்கு மாவட்ட எஸ்.சி./ எஸ்.டி. மாவட்ட துணைத் தலைவர்

7. ராஜா, காஞ்சிபுரம் மாவட்ட இளைஞர் நலன் அபிவிருத்தி பிரிவு செயலாளர்

8. குமார் எ குணசீலன், உறுப்பினர்

9. மணிகண்டன், உறுப்பினர்

10. லிவிங்கோ அடைக்கலராஜ், பெரம்பலூர் மாவட்ட முன்னாள் செயலாளர்

11. சிதம்பரம் எ குட்டி, தஞ்சாவூர் வடக்கு மாவட்ட துணைத்தலைவர்

12. ராஜா, விவசாய பிரிவு மாநிலச்செயலாளர்

13. சத்யா எ சத்யராஜ், உறுப்பினர்

14. காசிராஜன், மதுரை நகர இளைஞர் பிரிவு செயலாளர்

அண்ணாமலை, பா.ஜ.க.வில் உள்ள நபர்களிடம் போதைப்பொருள் நடமாட்டத்தை முதலில் தடுக்கட்டும். அதே போல் குஜராத்திலும் தடுக்கட்டும். பா.ஜ.க. ஆளும் பிற மாநிலங்களிலும் போதைப்பொருள் நடமாட்டத்தைத் தடுக்கட்டும். அதன்பிறகு அவர் தமிழ்நாட்டில் போதைப்பொருள் தடுப்பதை மக்கள் இயக்கமாக மாற்றுவதைப் பார்க்கட்டும்.

போதைப்பொருள் கடத்துவது குறித்து தி.மு.க.விற்குத் தெரிந்திருக்க வாய்ப்பே கிடையாது. எங்களுடைய நோக்கம் அதைத் தடுக்கவேண்டும் என்பதுதான். போதைப்பொருள் நடமாட்டம் குறித்து அண்ணாமலைக்கு வேண்டுமானால் தகவல் தெரிந்திருக்கும். அதை அவர் தெரியப்படுத்தியிருக்க வேண்டும்.

தி.மு.க.வில் இருக்கும் உறுப்பினர் மீது ஒரு குற்றச்சாட்டு வந்தால் உடனடியாக அவர்களைக் கட்சியில் இருந்து நீக்கிவிடுகிறோம். குற்றப் பின்னணி உடையவர்களைக் கட்சியில் வைத்து அரசியல் செய்ய வேண்டும் என்ற அவசியம் தி.மு.க.விற்கு என்றும் கிடையாது. இல்லம் தேடிக் கல்வி என்ற திட்டத்தை கொச்சைப்படுத்தும் வகையில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், இல்லம் தேடி குட்கா என பேசியுள்ளார். ஆனால் அவர் மீதே வழக்கு உள்ளது என்பதை மறந்துவிட்டுப் பேசியுள்ளார்." என்றார்.

Also Read: போதைப் பொருள் விவகாரம் : “இதற்கு பெயர்தான் மோடி ஃபார்முலாவா?” - அமைச்சர் ரகுபதி கண்டனம் !