Tamilnadu

"கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் குறித்து சிலர் வதந்தி பரப்புகிறார்கள்"- அமைச்சர் சிவசங்கர் குற்றச்சாட்டு!

சென்னை முடிச்சூர் ஆம்னி பேருந்து நிறுத்த கட்டுமான பணிகள் மற்றும் கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும் சென்னை பெருநகர வளர்ச்சி குழும தலைவருமான பி.கே.சேகர்பாபு ஆகியோர் ஆய்வு செய்தனர்.

பின்னர் அங்கிருந்த பொதுமக்களை அழைத்து அவர்களின் கோரிக்கைகளை கேட்டு விளக்கம் அளித்தனர். மேலும், பொதுமக்கள் தெரிவித்த கோரிக்கைகள் மற்றும் தேவைகளை படிப்படியாக பூர்த்தி செய்யப்படும் எனவும் அமைச்சர்கள் உறுதியளித்தனர்.

அதனைத் தொடர்ந்து அமைச்சர்கள் சேகர்பாபு மற்றும் சிவசங்கர் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய அவர்கள், "கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் பல்வேறு தடைகள் உடைத்தெறியபட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. அங்கு பயணிகளுக்கு தேவையான அடிப்படை தேவைகளை படிப்படியாக நிறைவேற்றி வருகிறோம்.

தற்போது 5 ஏக்கர் பரப்பளவில் 27 கோடி ரூபாய் செலவில் முடிச்சூரில் ஆம்னி பேருந்து நிறுத்த கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தி உள்ளோம். ஏப்ரல் மாத இறுதிக்குள் ஆம்னி பஸ் பேருந்து நிறுத்தம் பணிகள் முடிக்கப்பட்டு செயல்பாட்டிற்கு வரும். அதன்பின்னர் அங்கிருந்தே ஆம்னி பேருந்துகள் முழுமையாக இயக்கப்படும்.

கோயம்பேட்டில் இருந்து இயக்கப்பட்ட பேருந்துகளில் 80% சதவீதம் பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்தும், 20% பேருந்துகள் மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்தும் இயக்கப்பட்டு வருகிறது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் குறித்து எதிர்க்கட்சிகள் வதந்தியை பரப்பி வருகின்றனர். இங்கு அரசு பேருந்துகள் குறைவாக இருக்கிறது என்னும் வதந்தியை பரப்பினால் மீண்டும் ஆம்னி பேருந்துகளுக்கு மக்கள் வருவார்கள் என நினைக்கிறார்கள்.கடந்த இரண்டு நாட்களாக அங்கு நடைபெறும் போராட்டம் உள்நோக்கத்தோடு நடைபெறுகிறது என தோன்றுகிறது.

133 பேருந்துகள் திருச்சிக்கு வழக்கமாக இயக்கப்படும்.ஆனால் இரண்டாவது சனிக்கிழமை என்பதால் 70 பேருந்துகள் கூடுதலாக இயக்க திட்டமிட்டு, 150 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்பட்டது. போக்குவரத்து ஊழியர்கள் ஓய்வின்றி பணியாற்றி வருவதால் தான் தமிழகத்தில் போக்குவரத்து சேவை சிறப்பாக செயல்படுகிறது. மற்ற மாநிலங்களை காட்டிலும் அதிகளவில் பேருந்துகள் இயக்கப்படுகிறது.பேருந்து நிலையத்தில் உள்ள தேவைகள் படிப்படியாக பூர்த்தி செய்யப்படும்

Also Read: ஒரே நாளில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து 1,07,632 பேர் பயணம் - போக்குவரத்து துறை அறிவிப்பு !