Tamilnadu

#FACTCHECK : மருது சகோதரர்கள் விவகாரம் - முகமது ஜுபைர் குறித்து வதந்தி பரப்பும் பாஜக ! - உண்மை என்ன?

நாடு முழுவதும் இன்று 75-வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் இன்று நடைபெற்ற விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசிய கொடியை ஏற்றி வைத்து, பின்னர் பல்வேறு விருதுகளை விருத்தாளர்களுக்கு வழங்கினார். அப்போது ‘கோட்டை அமீர் மத நல்லிணக்க பதக்கம்’ பிரபல ஊடகவியலாளர் முகமது ஜுபைர் (Mohammed Zubair) என்பவருக்கு வழங்கப்பட்டது.

இவர் உண்மை கண்டறியும் இணையதள ஊடகமான 'ALT News' என்ற செய்தி நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தின் மூலம் பல உண்மைகளை களத்தில் இறங்கி ஆய்வு செய்து அதனை வெளிக்கொண்டு வந்திருக்கிறார். இவ்வளவு ஏன், கடந்த ஆண்டு (2023) பீஹார் தொழிலாளிகள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவதாக பாஜக பொய்யான வீடியோ ஒன்றை பரப்பி நாடு முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியது.

அந்த சமயத்தில் அந்த வீடியோக்களை ஆய்வு செய்து, அது வேறு மாநிலங்களில் எடுக்கப்பட்ட வீடியோ என்றும், தமிழ்நாட்டில் அல்ல என்றும் உண்மையை வெளி கொண்டு வந்தார். இவ்வாறு பாஜக பரப்பும் பல பொய்யான செய்திகளை பொய் என கண்டறிந்து உண்மையை வெளிச்சம் போட்டு காட்டி வருகிறார். இவருக்கு இன்று தமிழ்நாடு அரசு சார்பில் கோட்டை அமீர் மத நல்லிணக்க பதக்கம் வழங்கப்பட்டது.

இந்த சூழலில் தற்போது உண்மையை கண்டறிந்து செய்திகள் வெளியிடும் ஊடகவியலாளர் முகமது ஜுபைர் குறித்தும் பாஜக தற்போது போலியான செய்தி ஒன்றை பரப்பி வருகிறது. அதாவது இவர் தமிழ்நாட்டு சுதந்திர போராட்ட வீரர்களான மருது சகோதரர்கள் குறித்து அவதூறாக பேசியதாக பாஜக பொய் பிரசாரம் செய்து வருகிறது.

அதன் உண்மை என்ன என்று பாப்போம்...

கர்நாடக மாநிலத்தில் கடந்த ஆண்டு (2023) பா.ஜ.க தலைமையிலான பசவராஜ் பொம்மையின் அரசு செயல்பட்டு வந்தது. அப்போது அங்கே வேண்டுமென்றே இந்து - இஸ்லாம் மதங்களுக்கு இடையே மோதல்கள் உருவாக்கப்பட்ட நிலையில், இஸ்லாமியர்கள் பல்வேறு பிரச்னைகளை எதிர்க்கொண்டு வந்தனர். தங்கள் மேல் உள்ள குற்றச்சாட்டுகள் உள்ளிட்டவையை மறைக்கவே மதமோதல்கள் உருவாக்கப்பட்டதாக பலரும் கருத்து தெரிவித்து வந்தனர்.

மேலும் கர்நாடகத்தில் நிகழ்ந்த ஹிஜாப் சர்ச்சை, சிறுபான்மையினர் மீதான தாக்குதல் என இந்துத்துவ கும்பலின் செயல் உலக நாடுகள் வரை எதிரொலித்தது. இதுதவிர சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த சுதந்திர போராட்ட தலைவர்களின் பெயரை சிதைக்கும் வகையிலும் பல்வேறு நடவடிக்கையில் அப்போதைய பாஜக அரசும், பாஜகவினரும் ஈடுபட்டு வந்தனர்.

அதன் ஒரு பகுதியாக இந்தியாவை கைப்பற்ற நினைத்த ஆங்கிலேயருக்கு சிம்மசொப்பனமாக திகழ்ந்த மைசூர் சிங்கம் திப்புசுல்தானை ஒக்கலிகா சமூகத்தை சேர்ந்த உரி கவுடா - நஞ்சே கவுடா ஆகியோர் கொலை செய்ததாகவும், அவர் ஆங்கிலேயரால் கொலைசெய்யப்படவில்லை என்றும் கர்நாடக பாஜகவினர் பொய் செய்திகளை பரப்பி வந்தது.

இந்த சூழலில்தான் கடந்த ஆண்டு (2023) மார்ச் மாதம் பிரதமர் மோடி கர்நாடக செல்ல திட்டமிட்டிருந்தார். அப்போது பிரதமரை வரவேற்கும் விதமாக பாஜகவினர் போஸ்டர்கள், பேனர்கள் உள்ளிட்டவையை பல பகுதிகளில் வைத்தனர். அவ்வாறு வைக்கப்பட்ட பெரிய பேனரில், உரி கவுடா - நஞ்சே கவுடா ஆகியோர்களின் புகைப்படத்தை பயன்படுத்துவதற்கு பதிலாக, தமிழ்நாட்டு சுதந்திர போராட்ட வீரர்கள் மருது சகோதரர்கள் புகைப்படத்தை வைத்து போலியான செய்திகளை பரப்பியது.

இதுகுறித்த செய்தி மிகவும் வைரலான நிலையில், இணையத்தில் பலரும் இதற்கு கண்டனங்களும் கேலிகளும் செய்து வந்தனர். அப்போதுதான் முகமது ஜுபைரும் இந்த செய்தியின் உண்மையை வெளியிட்டார். அதாவது, மோடி வருகையின்போது பாஜகவினர் வைத்த பேனரில் உரி கவுடா - நஞ்சே கவுடாவின் புகைப்படத்திற்கு பதிலாக மருது சகோதரர்களின் புகைப்படங்கள் பயன்படுத்தப்பட்டிருந்தது. இந்த தவறை தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.

மேலும் அதில் அம்மாநில அமைச்சர் உரி கவுடா - நஞ்சே கவுடாவின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்கப்போவதாக, மருது சகோதரர்களின் புகைப்படங்களை பயன்படுத்தி போஸ்டர்களையும் குறிப்பிட்டிருந்தார்.

இதைத்தொடர்ந்து பா.ஜ.க தலைவர் அண்ணாமலை மருது சகோதரர்களின் படங்களுக்கு மாலையிட்டு மரியாதை செலுத்தி வணங்கும் புகைப்படத்தையும் வெளியிட்டு, அது உரி கவுடா - நஞ்சே கவுடா என்று கூறி பரவும் புகைப்படமானது தமிழ்நாட்டின் சுதந்திர போராட்ட வீரர்களான மருது சகோதரர்கள் என்றும், மருது சகோதரர்கள் குறித்து நன்கு அறிந்திருந்தும் அவர்களின் படங்களை அரசியலுக்காக பெயர் மாற்றிப் பயன்படுத்துவது ஏன்? என்றும் ஜுபைர் கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்த நிலையில், தற்போது ஜுபைர் மருது சகோதரர்களை இழிவுபடுத்தி விட்டார் என்றும், அவமரியாதை செய்து விட்டார் என்றும் பாஜக வதந்திகளை பரப்பி வருகிறது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் மதக்கலவரங்களை பாஜகவினர் தூண்டி வருவது போல் தமிழ்நாட்டிலும் மேற்கொள்ள நினைத்து பலமுறை, பல்வேறு செயல்களில் ஈடுபட்ட போதிலும், மக்களும், தமிழ்நாடு அரசும் அதனை நடக்கவிடாமல் செய்து வருகிறது.

இருப்பினும் இதுபோன்ற பொய் பரப்புரையை பாஜகவும், பாஜகவினரும் மேற்கொண்டு வருவது பலர் மத்தியிலும் கண்டனங்களை எழுப்பி வருகிறது. முகமது ஜுபைருக்கு விருது வழங்கப்பட்டதையடுத்து அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Also Read: ”திராவிட மாடல் அரசின் திட்டங்களால் முன்னேறிய தமிழ்நாடு” : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்!