Tamilnadu

பாஜக பெண் நிர்வாகி மீது தாக்குதல் : அமர் பிரசாத் ரெட்டியை கைது செய்ய தனிப்படை - போலிஸ் அதிரடி!

சென்னை கோட்டூர்புரம் பாரதி அவன்யூ பகுதியைச் சேர்ந்தவர் தேவி. இவரது தங்கை ஆண்டாள். இவர் பாரத ஜனதா கட்சியின் மாவட்ட துணைத் தலைவர் பதவி வகித்து வருகின்றார். இந்நிலையில் கடந்த 19ஆம் தேதி, பிரதமர் நரேந்திர மோடி சென்னைக்கு வருகை தந்தபோது சித்ரா நகர் பகுதியிலிருந்து அந்நிகழ்விற்கு ஆட்களை அழைத்துச் செல்வது தொடர்பாக ஆண்டாளுக்கும், அதே கட்சியைச் சேர்ந்த நிவேதா என்பவருக்கும் பிரச்சனை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதனை அடுத்துக் கடந்த 21 ஆம் தேதி இரவு பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டியின் கார் ஓட்டுநர் ஸ்ரீதர் மற்றும் நிவேதா, கஸ்தூரி உள்ளிட்ட சிலர் ஆண்டாள் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்துள்ளனர். அப்போது அவர்கள் வீட்டிலிருந்து ஆண்டாள் மற்றும் அவரது சகோதரியைக் கொடூரமாகத் தாக்கியுள்ளனர்.

அப்போது பிரதமர் மோடி நிகழ்ச்சியில் ஆட்களை அழைத்து வருவதற்காக அமிர் பிரசாத் ரெட்டியிடம் நீங்கள் பணம் வாங்கி வந்துள்ளீர்கள். அதில் எங்களுக்குப் பங்கு வேண்டும் எனவும் கேட்டு அவரை தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் தேவியின் மண்டை உடைந்துள்ளனர்.

இதையடுத்து அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்குச் சிகிச்சை பெற்று வீட்டிற்குத் திரும்பியுள்ளார். மேலும் ஸ்ரீதர் இந்த விவகாரம் தொடர்பாக வெளியே கூறினால் உங்கள் குடும்பத்துடன் கொலை செய்தவுடன் என மிரட்டியுள்ளார்.

இதனால் அவர்கள் புகார் கொடுக்காமலிருந்து வந்துள்ளனர். மேலும் இவர்களது மிரட்டல் தாங்க முடியாமல் இந்த தாக்குதல் சம்பவம் குறித்து கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து பா.ஜ.க மாநில விளையாட்டு மேம்பாட்டு அணி தலைவர் அமர் பிரசாத் ரெட்டி, சைதாப்பேட்டை கிழக்கு மண்டலம் பாஜக துணைத் தலைவர் ஸ்ரீதர், பாஜக பெண் நிர்வாகிகள் நிவேதா, கஸ்தூரி உள்ளிட்டோர் மீது 9 பிரிவுகளின் கீழ் போலிஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள அமர் பிரசாத் ரெட்டியைக் கைதுசெய்ய 2 தனிப்படை அமைத்து போலிஸார் தேடிவருகின்றனர்.

Also Read: ”காந்தி குறித்த ஆளுநர் ஆர்.என்.ரவியின் கருத்து முற்றிலும் பொய்” : வால்டர் தேவாரம் ஆதாரத்துடன் விளக்கம்!