Tamilnadu

”ஆளுநர் பதவி என்பது அதிகாரம் பெற்ற பதவி அல்ல” : உண்மையை ஒப்புக்கொண்ட ஜார்க்கண்ட் ஆளுநர்!

இந்தியாவில் பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் ஆளுநர்களை வைத்து அம்மாநில அரசுக்கு ஒன்றிய பா.ஜ.க அரசு அழுத்தம் கொடுத்து வருகிறது. குறிப்பாகத் தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம், பஞ்சாப், தெலங்கானா போன்ற மாநிலங்களில், மாநில அரசுகள் கொண்டு வரும் மசோதாக்களுக்கு ஒப்புதல் கொடுக்காமல் அம்மாநில ஆளுநர்கள் இழுத்தடித்து அடாவடித்தனமாக நடந்து கொண்டு வருகின்றனர்.

இப்படி மசோதாக்களுக்கு மட்டுமின்றி பல்வேறு இடைஞ்சல்களை ஆளுநர் மாநில அரசுகளுக்கு கொடுத்து வருகிறார். இதனை எதிர்த்து தமிழ்நாடு, கேரளா, பஞ்சாப் உள்ளிட்ட மாநில அரசுகள், அம்மாநில ஆளுநருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது. இந்த வழக்குகள் மீதான விசாரணை நடத்தி வருகிறது.

மேலும் முதலமைச்சர்களை அழைத்து ஆளுநர் மசோதாக்கள் மீது விவாதிக்க வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் வலியுறுத்தியது. அதன் அடிப்படையில்தான் அண்மையில் கூட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து பேசினார்.

இந்நிலையில், மக்களின் தேவைகளை நிறைவேற்றும் அதிகாரம் முதல்வருக்குதான் உண்டு என ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன், ஆளுவர் பதவி என்பது அதிகாரம் பெற்ற பதவி அல்ல. அரசியல் சாசனத்தை பாதுகாக்கிற ஒரு பதவி. மாநில முதலமைச்சருக்குதான் மக்களின் தேவையை உணர்ந்து அதை நிறைவேற்றும் அதிகாரம் உண்டு." என தெரிவித்துள்ளார்.

ஒன்றிய பா.ஜ.க அரசால் நியமிக்கப்பட்ட ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் கருத்து உண்மையை ஒப்புக் கொண்டதுபோல் இருக்கிறது என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

Also Read: “போராடுபவர்கள் கிரிமினல்களே..” - மாணவர்கள் போராட்டத்தை கொச்சைப்படுத்திய ஆளுநர் பரபரப்பான கேரளா - நடந்தது?