Tamilnadu

சொந்தக் கட்சி பெண்ணிடமே மோசடி - கொலை மிரட்டல்.. பாஜக நிர்வாகிகளின் மீது வெளியான பகீர் புகார் !

பாஜக தலைவராக அண்ணாமலை பொறுப்பில் வந்ததில் இருந்தே பாஜக ரவுடிகளின் கூடாரமாக மாறியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக பல வழக்குகளில் சிறைச் சென்று வந்த ரவுடிகளுக்கு அடைக்கலமே அண்ணாமலை தலைமையில் இயங்கும் பாஜகதான்.

அதுமட்டுமல்லாது, அடிதடி, கொலை மிரட்டல் என கட்டப்பஞ்சாயத்து மையமாக கமலாலயம் செயல்படுவதாக சொந்தக் கட்சிக்காரர்களே விமர்சிக்கும் நிலையில் தான் தற்போதைய பாஜக உள்ளது. ஆட்டை கடித்து, மாட்டைக் கடித்து, மனுசன கடிச்ச கதையா ! சொந்தக் கட்சிக்கார்களிடமே தங்களின் மோசடி வேலைகளை காட்டுகிறார்கள் பாஜக முக்கிய புள்ளிகள்.

மாவட்ட தலைவர் தொடங்கி, முக்கிய நிர்வாகிகள் வரை பாஜகவில் இருக்கும் நடுத்தர குடும்ப உறுப்பினர்களை குறி வைத்து பல்வேறு மோசடியில் ஈடுபடும் செய்திகளும் அவ்வபோது வெளிவந்த வண்ணம் உள்ளது. அந்த வகையில், தற்போது பா.ஜ.க பிரமுகர்கள் தன்னிடம் 25 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக கூறி, பாஜக பெண் நிர்வாகி ஒருவர் ஆவடி ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

மணலி புது நகரை சேர்ந்தவர் வளர்மதி (30). இவர் மணலி புது நகரில் பாஜகவில் 16 வது வட்ட மகளிர் அணி பொருளாளராக இருந்து வந்துள்ளார். அப்போது இவருக்கு முன்னாள் பாஜக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொதுச் செயலாளர் பொன் பாஸ்கர் என்பவர் அறிமுகம் ஆகியுள்ளார்.

இவர் வளர்மதியிடம் போரூரில் பியூட்டி பார்லர் மற்றும் ஸ்பா கடையை திறக்கவும் புதிதாக லைசென்ஸ் வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி ஆன்லைன் வழியாகவும், ரொக்கமாகவும் 25 லட்சம் ரூபாய் பெற்றுள்ளார். இதன் பின்னர் பணத்தை பெற்றுக் கொண்டு அவரது நண்பர் அருண்குமார் பெயரில் அக்ரிமெண்ட் தயார் செய்துள்ளார்.

இதுகுறித்து வளர்மதி கேட்டதற்கு பொன் பாஸ்கர் மற்றும் அவரது நண்பர்களான பாஜக நிர்வாகிகள் முத்துராஜ், செந்தில்குமார், பாஸ்கரன் ஆகியோர் வளர்மதியை மிரட்டியுள்ளனர். அவரிடமிருந்து காரையும் பறித்து சென்றுள்ளனர். இதனிடையே தகராறு காரணமாக வளர்மதி நடத்தி வந்த பியூட்டி பார்லர் மூடப்பட்டது.

இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பரவியதை தொடர்ந்து பொன் பாஸ்கர், முத்துராஜ் ஆகியோர் பாஜகவிலிருந்து நீக்கப்பட்டனர். ஆனாலும் வளர்மதியிடம் ஏமாற்றி வாங்கிய பணத்தை திருப்பி தராமல் இருந்ததால் வளர்மதி பொன் பாஸ்கரிடம் பணத்தை திருப்பி கேட்டு உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பொன் பாஸ்கர் மற்றும் அவரது கூட்டாளிகள் வளர்மதியை கொலை செய்வதாக கூறி அச்சுறுத்தி வந்துள்ளனர்.

இதுகுறித்து பாஜக தலைமை அலுவலகத்தில் புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என ஆவடி காவல் ஆணையரகத்தில் வளர்மதி புகார் அளித்துள்ளார். இந்த புகார் மனுவில் கொலை மிரட்டல் விடுத்த பொன் பாஸ்கர், முத்துராஜ், பாஸ்கரன் அவரது கூட்டாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தனது பணம் 25 லட்சத்தை மீட்டு தர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

Also Read: மராட்டிய பால் பண்ணை நிறுவனத்தை குஜராத் நிறுவனத்துக்கு விற்கும் பாஜக கூட்டணி அரசு - எதிர்கட்சிகள் கண்டனம்!