Tamilnadu

“நான் இருக்கேன்..” - ஆய்வில் பார்வை குறைபாடுடைய சிறுமிக்கு கைகொடுத்த கனிமொழி MP!

கடந்த சில தினங்களுக்கு முன்னர் நெல்லை, தூத்துக்குடி உட்பட 4 மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டது. இதையடுத்து அரசு அதிகாரிகள், எம்.எல்.ஏ., எம்.பி-க்கள் களத்தில் இறங்கி பணியாற்றினர். தற்போது அனைத்தும் இயல்பு நிலைக்கு மாறி வரும் நிலையில், வெள்ள பாதிப்பு குறித்து தொடர்ந்து தூத்துக்குடியில் ஓய்வின்றி ஆய்வு மேற்கொண்டு வருகிறார், தூத்துக்குடி எம்.பி கனிமொழி.

அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகில் தாமிரபரணி ஆற்றையொட்டி அமைந்திருக்கும் மேல் ஆத்தூர் சொக்கப்பழங்கரை ஊராட்சியில் திமுக துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி, மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டு இன்று ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அப்பகுதி மக்களிடம் வெள்ள பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தார். கிராமத்தில் வசித்து வரும் மக்கள் வெள்ளத்தால் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து உள்ளதாக வருத்தம் தெரிவித்தனர். இந்த கிராமத்தில் சுமார் 250 குடும்பங்கள் இருக்கும் நிலையில் 500-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். எனவே அங்கே மக்கள் தங்கள் பொருட்கள் உள்ளிட்டவையை இழந்து வாடுவதாக வருத்தம் தெரிவித்தனர்.

தொடர்ந்து சொக்கப்பழங்கரை கிராமத்தில் வெள்ள பாதிப்பை கனிமொழி எம்.பி ஆய்வு மேற்கொண்டபோது, சிறுமியைக் கண்டார். அந்த சிறுமியிடம் சென்று விசாரிகையில், தனது பெயர் ரேவதி என்றும், தான் 7-ம் வகுப்பு படித்து வருவதாகவும், தனக்கு கண் பார்வை பிரச்னை இருப்பதாகவும் தெரிவித்தார். இதையடுத்து சிறுமிக்கு ஆறுதல் தெரிவித்த கனிமொழி, அவருக்கு தேவையான மருத்துவச் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தார்.

Also Read: பாஜக கூட்டணி அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்: புதுவை முன்னாள் முதல்வர் நாராயணசாமி மீது கொலை முயற்சி -நடந்தது?