Tamilnadu

திருநெல்வேலி : கனமழையால் பாதிக்கப்பட்ட 50,000 குடும்பத்தினருக்கு உணவு வழங்கும் அமைச்சர் எ.வ.வேலு !

கடந்த 18-ம் தேதி அன்று வளிமண்டல கிழடுக்கு சுழற்சி காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் அதிகனமழை பெய்தது. அதிலும், திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. இந்த பகுதிகளில் முதலமைச்சரின் உத்தரவின் பேரில் அமைச்சர்கள் மீட்பு மற்றும் நிவாரணப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடியில் மழையினால் பாதிக்கப்பட்ட மக்களை அமைச்சர் எ.வ.வேலு நேரில் சந்தித்து நிவாரண உதவிகள் வழங்கினார். திருநெல்வேலி, நிவாரண முகாம் முத்து மஹாலில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ள ஆலயங்குடி, அனுராதநல்லூர், முத்தாலம்குறிச்சி, பெந்தம்பள்ளி, சமத்துவபுரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 500 குடும்பங்களுக்கு, பால், பிஸ்கட், அரிசி, பருப்பு, பாய், போர்வை மற்றும் தண்ணீர் பாட்டில் போன்ற நிவாரணப் பொருட்களை, அமைச்சர் வழங்கினார்.

பின்னர் ஸ்ரீவைகுண்டம் பகுதிக்குச் சென்றுக் கொண்டிருந்தபோது, ஆதிச்சநல்லூர் பகுதியில் வசித்த மக்களைச் சந்தித்து, பால்பாக்கெட்களை வழங்கினார்கள். இப்பகுதியில் உள்ள மக்களுக்கும், உணவு மற்றும் நிவாரணப் பொருட்களை வழங்க அதிகாரிகளை கேட்டுக் கொண்டார்.மேலும், கருங்குளம் அருகே பொதுமக்கள் மூன்று நாளாக காணாமல் போன சர்க்கரை பீர்முகமது என்பவரை கண்டுப்பிடித்துதர அமைச்சர் அவர்களிடம் கோரிக்கை வைத்தனர், அவர்களின் கோரிக்கையினை ஏற்று, தேசிய பேரிடர் மீட்பு இராணுவ வீரர்களை வரவழைத்து, காணாமல் போன சர்க்கரை பீர்முகமது என்பவரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

அதனைத் தொடர்ந்து, அமைச்சர் எ.வ.வேலு, தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் பகுதியில் உள்ள கண்ணபிரான் தெருவிற்குச் சென்று, பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து பால் மற்றும் பிஸ்கெட்களை வழங்கினார். தொடர்ந்து ஸ்ரீவைகுண்டம் அரசு மகப்பேறு மருத்துவமனைக்குச் சென்று ஆய்வு செய்தார். பின்னர் மழைநீரால் சூழப்பட்ட ஸ்ரீவைகுண்டம் மாவட்ட உரிமையியல் நீதிமன்ற வளாகத்திற்குச் சென்று, ஆய்வுச் செய்த அமைச்சர் , மோட்டர் மூலம் மழைநீரை அகற்ற அதிகாரிகளை அறிவுறுத்தினார்கள்.

மழைநீர் சூழ்ந்துள்ள ஸ்ரீவைகுண்டம், நவலட்சுமிபுரத்திற்கு நிவாரண உதவிகள் வழங்கச் சென்ற அமைச்சர் , அப்பகுதி பொது மக்கள், மழைநீரில் சிக்கி மூன்று சடலங்கள் இருப்பதாக தெரிவித்தார்கள். பின்னர் உடனடியாக ஜே.சி.பி. இயந்திரம் வரவழைக்கப்பட்டு, மூன்று சடலங்களை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து, கமலாபாத் என்ற இடத்தில் உள்ள மசூதி நிவாரண முகாமிற்குச் சென்று, பாதிக்கப்பட்ட மக்களுக்கு, பால், போர்வை, பாய் போன்ற நிவாரண உதவிகள் வழங்கினார். கீழ்ஸ்ரீவைகுண்டம் பகுதியில், கிறிஸ்த்தவ ஆலய நிவாரண முகாமிலும், இந்து கோவில் முகாமிலும் தங்க வைக்கப்பட்டுள்ள பொது மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கினார். அதனைத் தொடர்ந்து இன்று அமைச்சர் எ. வ. வேலு திருநெல்வேலி பகுதியில் உள்ள ஸ்ரீவைகுண்டம் மற்றும் அது சுற்றி உள்ள மக்களுக்கு சுமார் 50,000 குடும்பத்தினருக்கு உணவு அத்தியாவசிய பொருட்கள் வழங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: எம்.பி-க்கள் சஸ்பெண்ட் : குடியரசுத் தலைவர் எப்போது வேதனையை வெளிப்படுத்துவார் ? - தீக்கதிர் தலையங்கம் !