Tamilnadu

கடன் வாங்கியவரை கடத்தி மிரட்டிய கும்பல்.. பாஜக நிர்வாகிகள் கைது - தலைமறைவான பாஜக மாநில இளைஞரணி செயலாளர் !

மாநகராட்சி, உப்கார் லே அவுட் பகுதியை சேர்ந்தவர் மாதேஷ். இவர் பஸ்தி பகுதியில் நியூட்ரிசன் சென்டர் நடத்தி வந்தார். இவர் ஒசூர் அலசநத்தம் பகுதியை சேர்ந்த கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பாஜக இளைஞரணி துணை தலைவர் ப்ரியா என்பவரிடம் 11 இலட்சம் ரூபாய கடன் வாங்கியுள்ளார்.

மேலும், பாஜக இளைஞரணி மாவட்ட செயற்குழு உறுப்பினர் மங்களா என்பவரிடம் 2 லட்சம் ரூபாயும் வட்டிக்கு கடனாக வாங்கியுள்ளார். ஆனால், அவர் தொழிலில் பின்னடைவு ஏற்பட்டதால் கடனை திரும்ப செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், மாதேஷ் நேற்று முந்தினம் சூர் ராம்நாகர் பகுதியில் உள்ள கோட்டை மாரியம்மன் கோவிலுக்கு சாமி கும்பிட வந்துள்ளார். இது குறித்து அறிந்த பாஜக நிர்வாகி மங்களா மற்றும் அவரது கணவர் தாசப்பா ஆகியோர் இருசக்கர வாகனத்தில் வந்து மாதேசை மிரட்டி பணத்தை தருமாறு கேட்டுள்ளனர். அதோடு மற்றொரு பாஜக நிர்வாகி ப்ரியாவும் தனது கணவர் ஆனந்துடன் அங்கு வந்துள்ளார்.

பின்னர் பாஜக இளைஞரணி மாநில செயலாளர் கிஷோர், அவரது கூட்டாளிகள் இருவரும் அங்கு வந்து மாதேசை கடத்தி ஒசூர் மலைக்கோவிலுக்கு அழைத்து சென்று இன்று மாலைக்குள் பணத்தை தர வேண்டுமென மிரட்டி தாக்கியுள்ளனர்.

பின்னர் அங்கிருந்து தப்பிய மாதேஷ் காவல்துறையில் இது குறித்து புகார் அளித்துள்ளார். தொடர்ந்து பாஜக பெண் நிர்வாகிகளான பிரியா அவரது கணவர் ஆனந்த், மங்களா அவரது கணவர் தாசப்பா ஆகிய 4 பேரை ஒசூர் நகர போலிசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவான பாஜக மாநில இளைஞரணி செயலாளர் கிஷோர் உள்ளிட்ட மூவரை தேடி வருகின்றனர்.

Also Read: இவர் சபாநாயகரானால் பதவியேற்க மாட்டோம்.. புறக்கணித்த பாஜக MLAக்கள்: 8 முறை வென்ற MLA-க்கு எதிர்ப்பு !