Tamilnadu

3 வது நாளாக களத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் : இயல்பு நிலைக்கு திரும்பும் சென்னை - தொடரும் நிவாரண பணி!

மிக்ஜாம் புயல் காரணமாகச் சென்னையில் கடந்த 3-ம் தேதி இரவிலிருந்து 5ம் தேதி வரை அதி கனமழை பெய்தது. இதனால் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியது. இதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவை அடுத்து அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி ஊழியர்கள் களத்தில் இறங்கி வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்டு நிவாரண முகாம்களில் தங்கவைத்தனர்.

கடந்த மூன்று நாட்களாக இரவு பகல் பாராமல் மீட்பு மற்றும் விசாரணை பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் சென்னை தற்போது இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது. மேலும் தாழ்வான பகுதியில் தேங்கியுள்ள மழைநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

அதேபோல் கடந்த மூன்று நாட்களாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மீட்பு மற்றும் நிவாரண பணிகளை ஆய்வு செய்து வருகிறார். இன்று மூன்றாவது நாளாக அனகாபுத்தூர் பகுதியில் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் அரிசி, போர்வை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வழங்கினார். மேலும் அரசின் மீட்புப் பணிகளுக்குத் துணைநின்று தன்னார்வலர்கள் பலரும் உதவி வருகிறார்கள் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூகவலைதளத்தில் தெரிவித்துள்ளார்.

அதோடு பிரதமர் மோடிக்கு ரூ.5,060 கோடி இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் என முதலமைச்சர் கடிதம் எழுதி இருந்தார். இதையடுத்து இன்று முதற்கட்டமாக ரூ.450 கோடியை ஒன்றிய அரசு விடுவித்துள்ளது. மேலும் முதலமைச்சரின் கோரிக்கையை அடுத்து ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங் வெள்ள பாதிப்புகளைப் பார்வையிட்டார். பிறகு சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

Also Read: மிக்ஜாம் புயல் - மூன்றாவது நாளாக களத்தில் இருக்கும் அமைச்சர்கள் மற்றும் தி.மு.கவினர்!