Tamilnadu

இரண்டாவது நாளாக களத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் - சென்னையை மீட்கும் தி.மு.க அரசு!

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் நேற்று முன்தினம் இரவிலிருந்து அதி கனமழை பெய்தது. இதனால் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. இதையடுத்து உடனே அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி ஊழியர்கள் களத்தில் இறங்கி வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்டு நிவாரண முகாம்களில் தங்கவைத்து வருகிறனர்.

அதேபோல் நேற்றிலிருந்தே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் தொடர்ந்து நிவாரண மற்றும் மீட்பு பணிகளை ஆய்வு செய்து சென்னையை வேக வேகமாக மீட்டு வருகிறார்கள். இவர்களின் மின்னல் வேக நடவடிக்கையால் பல்வேறு பகுதிகள் இயல்வு நிலைக்கு திரும்பியுள்ளது. மேலும் போக்குவரத்தும் வழக்கம்போல் இயக்கி வருகிறது.

இந்நிலையில் இன்று இரண்டாவது நாளாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கந்தன்சாவடி பகுதியில் கனமழையால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை வழங்கி ஆய்வு செய்தார். மேலும் தரமணி, பாரதிநகர் பகுதிக்குச் சென்று ஆய்வு செய்தார். பிறகு அங்குப் பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து, சென்னை நேப்பியர் பாலம் அருகில் கூவம் ஆற்றின் முகத்துவாரத்தில் மழைநீர் சீராக வடிகிறதா என்பதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதேபோல் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, எ.வ.வேலு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், மூர்த்தி, தா.மோ அன்பரசன், மனோ தங்கராஜ், சிவசங்கர், முத்துசாமி உள்ளிட்ட அமைச்சர்கள் தொடர்ந்து மீட்புப் பணிகளை ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர்.

Also Read: மிக்ஜாம் புயல் - தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் : நாடாளுமன்றத்தில் டி.ஆர்.பாலு MP வலியுறுத்தல்!